Friday, January 6, 2012

நெல்லிக்காய் கதை


நான் சிறு குழந்தையாக இருக்கும்போது, ஹிந்துக்களைப்போலே ஒற்றுமைக் குறைவான கூட்டத்தார் உலகத்தில் வேறெந்த தேசத்திலும் இல்லையென்றும், ஹிந்துக்கள் நெல்லிக்காய் மூட்டைக்குச் சமானமென்றும் சில சொல்லக் கேட்டிருக்கிறேன். பிறகு, உலகத்திலுள்ள வேறு பல தேசங்களின் பூர்வ சரித்திரத்தையும் தற்கால இயல்பையும், பலவிதங்களில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் மேற்படி வார்த்தை தவறு என்று தெரிந்தது. கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே உலகத்திலுள்ள எந்த ராஜ்யத்தைப் பார்த்தபோதிலும் அங்கு பணமும் அதிகாரமும் இருக்கும்வரை, மனிதர் பரஸ்பர விரோதங்களையும் பொறாமைகளையும் உள்ளே அடக்கி வைத்துக்கொண்டு ஒருவிதமான வெளியொற்றுமை பாராட்டித் திரிகிறார்கள். இருந்தாலும், நாலடியாரின் சொல்லியபடி,
“அட்டுற யார்மாட்டும் நில்லாது
செல்வம் சகடக்கால் போலவரும்”
லக்ஷ்மீதேவி எந்த இடத்திலும், ஒரே நிலையாக நிற்பது வழக்கமில்லை. செல்வமும் அதனாலுண்டான பெருமையும், ஒரு கூட்டத்தாருக்கிடையே குறைவுபடும்போது, உட்பொறாமையும் மாற்சரியமும் வெளிப்பட்டுத் தலைதூக்கி ஆடுகின்றன. உலக சரித்திரத்தை அறிவுடன் படித்த புத்திமான்கள் இதனை நன்றாக அறிவார்கள்.

இந்துக்களின் சிறப்பு

ஆனால், இவ்விஷயத்திலேகூட, மற்ற தேசத்தாரைக்காட்டிலும் ஹிந்துக்கள் மேலென்று எனது விசாரணையில் தென்படுகிறது. ஏனென்றால் ஹிந்துக்களிடம் தெய்வபக்தி என்ற சிறந்த குணம், மற்றெல்லா தேசத்தாரைக் காட்டிலும் அதிகமென்பதை மேற்குப் பக்கத்துப் பண்டிதரிலே கூடப் பக்ஷபாதமற்ற பல யோக்கியர் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். தெய்வ பக்தியினால் ஜீவதயை உண்டாகிறது.
“எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”

என்று தாயுமானவர் தமது தெய்வ பக்தியின் உண்மையை விளக்கினார்.

சென்ற கார்த்திகை மாதம், புயற்காற்றடிப்பதைப் பற்றி, தென்னாற்காடு ஜில்லாவைச் சோதனை செய்த ஸர்க்கார் அதிகாரியான ஓர் ஆங்கிலேயர் தம்முடைய அறிக்கையில், ஹிந்து ஜனங்களுடைய விசேஷ ஜீவதயை அதிதி ஸத்காரம் என்ற குணங்களை மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். காற்றடித்த இரவில் சில வைதிக பிராமணர் தமது வீட்டிற்குள் பறையர் வந்திருக்க இடங் கொடுத்ததாகப் பத்திரிகைகள் கூறின. ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப்போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராசார்யாருக்கு ஸமத்துவ ஞானத்தை ஊட்டினார். ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் கடைக்குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாரக வேதியன் முதுகிலே சுமந்துகொண்டு வந்து தனது கர்வ நோயைத் தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினார்.
சந்திரனில் ஒரு களங்கம்-
ஆனால் தீர்க்கக் கூடியது.
சந்திரனுக்குள் ஒரு களங்கம் இருப்பதுபோல், இப்போது நம்முடைய கூட்டத்திலே ஒரு களங்கமிருக்கிறது. ஆனால் பூத சந்திரனில் உள்ள களங்கத்தை அது தானே மாற்றிக்கொள்ளாது. ஞான சூரியராகிய ஹிந்துக்கள் தமக்குள்ள குறையை விரைவாக நீக்கி வருகிறார்கள். அந்தக் களங்கமாவது நமது ஜாதிக் கட்டிலுள்ள சில வழக்கங்கள். மறுபடி தெய்வத்தை நம்பி எல்லோரும் இன்புறவேண்டி குண கர்மங்களால் வர்ண நிச்சயம் செய்துகொண்டு, பூமண்டலத்துக்கு ஞானோபதேசம் செய்யும் பொருட்டாக பாரத தேவி தனது பத்மாஸனத்தில் வீற்றிருக்கிறாள். காலம் ஹிந்துக்களின் சார்பில் வேலை செய்கிறது. தேவர்களெல்லோரும் ஹிந்துக்களைக் கை தூக்கிவிடப் புறப்பட்டிருக்கிறார்கள். பரமாத்மா ஒன்று. அவனுக்கு ரிஷிகள் பல பெயர் சொல்லிப் போற்றுகிறார்களென்று வேதம் சொல்லுகிறது.
“பேரானந்தம் பேசி மறையனந்தஞ் சொலும்
பெரிய மெளனத்தின் வைப்பு”
என்று தாயுமானவர் காட்டினார். ராமகிருஷ்ணர் இதையே சொன்னார். இந்த உண்மை ஹிந்துக்களுடைய பக்தியிலே வேரூன்றிவிட்டது. எனவே, கலி நீங்கிவிட்டது. 

பலாப்பழம்

நெல்லிக்காய் மூட்டையைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. நெல்லிக்காய் கொடுத்தால் எல்லோரும் வாங்கித் தின்கிறார்கள். ஆனால், ஹிந்துக்கள் நெல்லிக்காய் மூட்டை போலென்று சொல்வோனைக் கண்டால் எல்லோரும் கைகொட்டிச் சிரிப்பார்கள். இந்து தேசம் ஒரு தேவலோகத்துப் பலாப்பழத்தைப் போலாகிவிட்டது. இனியென்றும் அழியாத பலாப்பழம். ஒவ்வொரு ஆர்யனும் அதில் முளைத்தவன். நாம் எல்லோரும் சேர்ந்து அந்தப் பலாப்பழத்தின் மேல் தோல், உள்ளே ஞானச்சுளை. நமக்கு அழிவில்லை. நமக்குள்ளே பிரிவில்லை. நாமொன்று. நாம் எப்போதும் தெய்வத்தை நம்புகிறோம். தெய்வத்தை நம்பி நாம் அறத்தைச் செய்தால், நம்முடைய யோக க்ஷேமங்களை தெய்வம் ஆதரிக்குமென்று பகவத்கீதை சொல்லுகிறது.

No comments:

Post a Comment