Wednesday, January 4, 2012

வருங்காலம்


உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக்கொண்டு வருகிறதென்பதைத் தமிழ்நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில் மனத்தைப் பதிய வைத்துக்கொண்டு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்திசெலுத்தாமல் அற்ப விஷயங்களிலும் அற்பச் செய்கைகளிலும் நாளையெல்லாம் கழியவிட்டுக் கிணற்றுத் தவளைகளைப் போல் வாழ்வதிலே பயனில்லை.

வர்த்தகஞ் செய்வோர் கோடிக்கணக்கான பணப்பழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழிதேட வேண்டும். படிப்பவர் அபாரமான சாஸ்திரங்களையும் பல தேசத்துக் கல்விகளையும் கற்றுத்தர வேண்டும். ராஜ்ய விவகாரங்களில் புத்தி செலுத்துவோர் உலக சரித்திரத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு, மற்ற ராஜதந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும்படியான பெரிய பெரிய யோசனைகளை செய்து நிறைவேற்றிப் புகழ் பெறவேண்டும். கைத்தொழில்களின் விஷயத்திலே நாம் இப்போது காட்டி வரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடந் தருகின்றன.
திருஷ்டாந்தமாக, நேர்த்தியான சித்திரங்களும் வர்ணங்களும் சேர்த்துப் பட்டிலும் பஞ்சிலும் அழகான ஆடைகள் செய்யவல்ல தொழிலாளிகள் நமது நாட்டில் இருக்கிறார்கள். இவர்களுக்குப் படிப்பில்லை; வெளியுலக நிலை தெரியாது. கையிலே முதற் பணமுமில்லை. நமக்குள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக்கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து அவற்றை நமது தொழிலாளிகளைக் கொண்டு செய்வித்தால் மிகுந்த லாப முண்டாகும். 

இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வமுங் கொடுப்பது. எல்லாவிதமான கைத் தொழில்களும் தற்காலத்தில் இரும்பு யந்திரங்களாலே செய்யப்படுகின்றன. ஆதலால், நமது தேசத்துக் கொல்லருக்கு நாம் பலவிதங்களிலே அறிவு விருத்தியும் ஜீவன ஸெளகர்யங்களும் ஏற்பாடு செய்து கொடுத்து இடத்துக்கிடம் இயன்றவரை இரும்புத் தொழில்களை வளர்க்க வேண்டும்.

இனி, வர்ணப்படம், தையல் வேலை, மைத் தொழில் முதலிய சித்திர வேலைகளில் நமது ஜனங்களில் அறிவு மிகவும் சிறந்தது. கொஞ்சம் சிரமப்பட்டால், இந்தத் தொழில்களை மறுபடி உயர்ந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விடலாம். சிறிது காலத்துக்கு முன்பு சீனத்திலிருந்தும் ஜப்பானிலிருந்தும் பல சித்திர வேலைகளைக் கொண்டு போய் அமெரிக்காவில் காட்டியபோது, அங்கே அவற்றிற்கு மிகுந்த புகழ்ச்சியும் பிரியமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதை நாமேன் செய்யக்கூடாது?

வெளி நாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள், புறப்படுங்கள். தொழிலாளிகளோ, வியாபாரிகளே, வித்வான்களே, புத்திமான்களே, எப்படியேனும் யாத்திரைச் செலவுக்குப் பணம் தயார் செய்துகொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள். நமது தொழில்களுக்கும் கலைகளுக்கும் யோசனைகளுக்கும் வெளி நாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும். சந்தேகப்பட வேண்டாம்.

பரோடாவிலிருந்து இநாயத்கான் என்ற சங்கீத வித்வான் சில வருஷங்களுக்கு முன்பு தென் ஜில்லாக்களில் யாத்திரை செய்யவந்தது நம்மிலே சிலருக்கு ஞாபகமிருக்கலாம். இங்கே அவர் சாதாரணமாக இருந்தார். பின்னிட்டு அவர் பல தேசங்களிலே சஞ்சாரம் செய்து, பிரான்ஸ் தேசத்திலே போய் நல்ல கீர்த்தியடைந்திருக்கிறார். அங்கே பல பெரிய வித்வான்களும் பிரபுக்களும் அவருடைய தொழிலை அற்புதத்திலும் அற்புதம் என்று கொண்டாடுகிறார்கள். சங்கீத ஞானமுடைய தமிழ்ப் பிள்ளைகள், முதலாவது கொஞ்சம் இங்கிலீஷ் கற்றுக் கொண்டு பிறகு ஐரோப்பிய சங்கீதத்தின் மூலாதாரங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். இது மிகவும் சுலபமான காரியம். தமிழருடைய அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம். இந்தத் தேர்ச்சி கொஞ்சமிருந்தால், பிறகு நமது சங்கீதத்தை ஐரோப்பியர் அனுபவிக்கும்படி செய்தல் எளிதாகும். அப்பால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போய் நமது சங்கீதத்தின் உயர்வை அவர்களுக்குக் காட்டினால் மிகுந்த கீர்த்தியும் செல்வமும் பெறலாம்

எவ்விதமான யோசனை, எவ்விதமான தொழில், எவ்விதமான ஆசை, எதையும் கொண்டு பிறதேசங்களுக்குப் போகவேண்டும். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை செய்யப் போதுமான திரவிய மில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம். வெளியுலகம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது வரவுக்குக் காத்திருக்கிறது. நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டிருக்கிறது. வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடு பெற்றாலொழிய, இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை. ஆதலால், தமிழ்ப் பிள்ளைகளே வெளி நாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும், மன வுறுதியினாலும், பல விதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும், செல்வத்துடனும், வீர்யத்துடனும், ஒளியுடனும் திரும்பிவாருங்கள். உங்களுக்கு மஹாசக்தி துணை செய்க.

No comments:

Post a Comment