Sunday, September 30, 2012

கோபாலய்யங்காருக்கு விவாகம்

மறுநாட் காலையில் வீரேசலிங்கம் பந்துலு ஒரு ஆளனுப்பி வேங்கடாசல நாயுடுவைத் தமது வீட்டுக்கு வரவழைத்தார்.

நாயுடு, பந்துலு, அய்யங்கார் மூவருமிருந்து பரியாலோசனை செய்யத் தொடங்கினார்கள். நாயுடுவும் பந்துலுவும், பணிப்பெண்ணாகிய மீனாக்ஷியை அய்யங்கார் விவாகம் செய்ய நினைப்பது தகாதென்றும், விசாலாக்ஷியை மணம் புரிவதே தகுமென்றும் பல காரணங்களுடன் எடுத்துரைத்தனர். அய்யங்காரின் மனதில் அக்காரணங்கள் தைக்கவேயில்லை. சுயநலத்துக்கனுகூலமாக இருக்கும் காரணங்களை அங்கீகரிப்பதும் பிறர் குரைப்பதும் மனித இயற்கை. சுயநலத்துக்கு விரோதமாக நிற்கும் நியாயங்களைச் சாதாரணமாகப் புறக்கணித்து விடுதலும் அல்லது அவற்றுக்கு எதிர் நியாயங்கள் கண்டுபிடிக்க முயல்வதும் மனித இயல்பாம். நியாய சாஸ்திரமோ வாதி பிரதிவாதி என்ற இரண்டு வகையினரின் கொள்கைகளுக்கும் இடங் கொடுக்கத் தக்கது. திருவாங்கூரில் சிறிது காலத்துக்கு முன்பு 'தர்மசங்கடம் சங்கரய்யர்' என்றொரு நியாயாதிபதி இருந்தாராம். அவர் தம்முன் விசாரணைக்கு வரும் வழக்குகளில் அநேகமாக ஒவ்வொன்றிலும் எந்தக் கக்ஷி சொல்வது நியாயமென்று தெரியாமல் மிகவும் சங்கடப் படுவாராம். 'நியாயம் எப்படி வேண்டுமானாலும் போகுக' என்றெண்ணி, சௌகர்யப்படிக்கும் மனம் போனபடிக்கும் தீர்ப்புச் செய்யுங் குணம் அவரிடம் கிடையாது. எப்படியேனும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி செலுத்த வேண்டுமென்பது அவருடைய கொள்கை. ஆனால், அங்ஙனம் செய்யப் புகுமிடத்தே, "வாதி சொல்வதைக் கேட்டால் வாதி கக்ஷி உண்மையென்று தோன்றுகிறது. பிரதிவாதி சொல்வதைக் கேட்டால் பிரதிவாதி கக்ஷி மெய்யென்று தோன்றுகிறது. நான் எந்தக் கட்சிக்குத் தீர்ப்புச் சொல்வேன்?" என்று அவர் தம்முடைய நண்பரிடங் கூறி வருத்தப்படுவாராம். இது பற்றி அவருடைய நண்பர்கள் அந்த நியாயாதிபதிக்குத் "தர்மசங்கடம் சங்கரய்யர்" என்று பட்டப் பெயர் சூட்டினார்கள்.

இவ்வுலகத்தில் வெறுமே நீதி ஸ்தலத்து வழக்குகளின் விஷயத்தில் மாத்திரமேயன்றி, ஜன சமூக சம்பந்தமாகவும், மத சம்பந்தமாகவும், பிற விஷயங்களைப் பற்றியும் தோன்றும் எல்லா வழக்குகளிலும் இங்ஙனமே நடு உண்மை கண்டு பிடித்தல் சாலவும் சிரமமென்று நான் நினைக்கிறேன்.

அளவற்ற தவமும் அதனால் விளையும் ஞானத் தெளிவு முடையோரே எதிலும் பக்ஷபாதமற்ற மயக்கமற்ற நடு உண்மை கண்டு தேரவல்லார். மற்றப்படி உலகத்து வழக்குக்கள் பெரும்பான்மையிலும், வலிமையுடைய மனிதருக்கும் வகுப்புக்களுக்கும் சார்பாகவே நியாயந் தீர்க்கப்படுகின்றது.

"பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால்

மெய்போலும்மே; மெய்போலும்மே

மெய்யுடை யொருவன் சொல்லமாட்டாமையால்

பொய்போலும்மே பொய்போலும்மே."

இங்ஙனம் சொல்வலிமை மட்டுமே யன்றி, ஆள் வலிமை, தோள்வலிமை, பொருள் வலிமை - எல்லாவித வலிமைகளும் நியாயத் தராசைத் தமது சார்பாக இழுத்துக்கொள்ளவல்லன.

எனவே, அய்யங்கார் தம்முடைய உயர்ந்த கல்வியாலும், உயர்ந்த உத்தியோகத்தின் வலிமையாலும், தம்முள்ளத்திலமைந்த பேராவலின் வலியாலும் நாயுடுவையும் பந்துலுவையும் எளிதாகத் தமது சார்பில் திருப்பிக்கொண்டார். அப்பால் நாயுடுவிடம் பணிப்பெண்ணின் பூர்வோத்தரங்களைக் குறித்து விசாரித்தார். அவள் இடையர் வீட்டுப் பெண்ணென்றும், அவளுடைய பிதா பல மாடுகள் வைத்துக் கொண்டு ஊராருக்குப் பால் விற்று ஜீவனம் செய்வாராய்ப் பக்கத்துத் தெருவில் வசிக்கிறாரென்றும், அந்தப் பெண்ணுக்கு இரண்டு மூத்த சகோதரர் இருக்கிறார்களென்றும், அவர்கள் ஆலையில் வேலை செய்கிறார்களென்றும், தலைக்குப் பதினைந்து ரூபாய் சம்பளமென்றும், அவளுக்குத் தாய் இறந்து போய் விட்டாளென்றும், தமையன்மாரின் மனைவிகளே அவர்களுடைய வீட்டில் சமையல் செய்கிறார்களென்றும், ஆதலால் மீனாட்சிக்குத் தன் வீட்டில் எவ்விதமான வேலையுங் கிடையாதென்றும், நாயுடுவின் வீட்டிலும் அவளுக்குக் குழந்தைகளை மேற்பார்த்தல், சாமான்கள் வாங்கிக்கொண்டு வருதல் முதலிய கௌரவமான காரியங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன வென்றும், வீடுவாயில் பெருக்குதல், பாத்திரங் கழுவுதல், துணி தோய்த்தல் முதலிய கீழ்க்காரியங்கள் அவள் செய்வது கிடையாதென்றும், அவள் கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்து நன்றாகத் தமிழ் எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டு இருக்கிறாள் என்றும், அமைதி, பொறுமை, இன்சொல், பணிவு முதலிய நல்ல குணங்களுடையவளென்றும், அவளுக்கு மாசம் நாயுடு வீட்டில் பன்னிரண்டு ரூபாய் சம்பளமென்றும், அதை அவள் வீட்டில் கொடுக்கவில்லையென்றும், நாட்டுக்கோட்டை ம.சி. மாணிக்கஞ் செட்டியார் கடையில் தன் பெயருக்கு வட்டிக்குக் கொடுத்து விடுகிறாளென்றும், அந்தத் தொகை இதுவரை வட்டியுடன் ஐந்நூறு ரூபாய் இருக்குமென்றும், அவளுக்கு வயது இருபதென்றும், இன்னும் விவாகம் ஆகவில்லை யென்றும், விவாகத்துக்கு அவள் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறாளென்றும் நாயுடு விஸ்தாரமாகத் தெரிவித்தார்.

"அவளுடைய பிதாவின் பெயரென்ன? அவர் இப்போது வீட்டிலிருப்பாரா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

"அவளுடைய பிதாவின் பெயர் சுப்புசாமிக் கோனார். அவர் இப்போது வீட்டிலிருப்பார்" என்று நாயுடு சொன்னார். உடனே கோபாலய்யங்காரின் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் நாயுடு, பந்துலு இருவரும் சேர்ந்து மூவருமாகப் பக்கத்துத் தெருவிலிருந்த சுப்புசாமிக் கோனாருடைய வீட்டுக்குப் போனார்கள். அங்கு சுப்புசாமிக் கோனார் காலையிலெழுந்து பழையது சாப்பிட்டு விட்டு, வெற்றிலை பாக்கு புகையிலை போட்டுக்கொண்டிருந்தார். நாயுடுவையும் அவருடைய நண்பரிருவரையும் கண்டவுடன் அவர் எழுந்து நின்று, உள்ளேயிருந்து ஒரு நீளப் பலகை கொண்டு போட்டார். வந்தவர் மூவரும் அதன்மீதுட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, நாயுடு தாங்கள் வந்த நோக்கத்தை சாங்கோபாங்கமாகக் கோனாரிடம் எடுத்துரைத்தார். செக்கச் செவேரென்ற முகமும், கன்னங் கரேலென்ற சுருள் சுருளான கத்தரித்த முடிமயிரும், அகன்ற தெளிந்த அறிவுச்சுடர்கின்ற விழிகளும், துருக்க மீசையும், விரிந்த மார்பும், திரண்ட தோளும், வயிரப் பொத்தான் போட்ட பட்டுச் சட்டையும், தங்கக் கடிகாரமுமாகத் தமக்கு டிப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் மாப்பிள்ளையாக வருவதைக் கண்டு சுப்புசாமிக் கோனார் பரவசமாய் விட்டார். அவருள்ளத்தில் ஆனந்தக்களி ததும்பலாயிற்று. ஆயினும் பிராமணருக்குப் பெண் கொடுத்தால் பாவம் நேருமென்ற ஒரு விஷயம் மாத்திரம் அவர் மனதை மிகச் சஞ்சலப் படுத்திற்று.

"நான் என்ன செய்வேன், சாமி? வயதானவன். எனக்கு இனிமேல் இவ் வுலகத்தாசை ஒன்றுமேயில்லை. எனக்கினிப் பரலோகத்தைப் பற்றிய ஆசைகளே மிஞ்சி யிருக்கின்றன. அதனால் ஸ்ரீீமந் நாராயணனையும் ஆழ்வார்களையும் எம்பெருமானாரையும் ஸ்ரீவைஷ்ணவர்களையும் சரணாகதி யடைந்திருக்கிறேன். எப்போதும் இவர்களையே ஸ்மரித்துக் கொண்டும் இவர்களுக்கு என்னாலியன்ற கைங்கரியங்கள் செய்து கொண்டும் என் வாழ்நாளைச் செலவிடுகிறேன். நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். பிராமணருக்கு நான் சூத்திரப் பெண்ணைக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் நேரும். ஆதலால், நான் இந்த விஷயத்துக்குச் சம்மதப்பட வழியில்லை" என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.

இதைக் கேட்டு கோபாலய்யங்கார் - "கோனாரே, முதலாவது, நான் பிராமணனில்லை. நான் பிராமண தர்மத்துக்குரிய ஆசாரங்களைத் துறந்து சூத்திரனாகி விட்டேன். ஆதலால் தாங்கள் என்னைத் தங்கள் ஜாதியானாகவே பாவித்து, எனக்குத் தங்கள் மகளை மணம் புரிவிக்க வேண்டுகிறேன். மேலும் நிஜமான பிராமணனே பிராமண குலத்தில் மாத்திரமன்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த விஷயத்தில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால், என்னிடம் தமிழில் மனு ஸ்ம்ருதி இருக்கிறது; உங்களிடம் அந்த நூலைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள். உங்களுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமோ, தெரியாதோ? தெரியுமா? அப்படியானால் நீங்கள் நான் சொல்வது மெய்யென்பதைக் கண்கூடாகப் பார்த்தறிந்து கொள்ளலாம். இதில் எவ்விதமான பாவத்துக்கும் இடமில்லை" என்றார்.

"அங்ஙனம் சாஸ்திரமிருப்பது மெய்தான்" என்று வேங்கடாசல நாயுடு சொன்னார்.

"ஆமாம்; அதுவே மனு ஸ்ம்ருதியின் கொள்கை" என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.

"எனினும், உலக ஆசாரத்தில் அவ்விதம் வழங்குவதைக் காணோமே?" என்று சுப்புசாமிக் கோனார் ஆக்ஷேபித்தார்.

"நமது தேசத்தில் பூர்வ சாஸ்திரங்களுக்கும் நடைகளுக்கும் விரோதமான ஆசாரங்கள் பல பிற்காலத்தில் வழக்கமாய் விட்டன. அவற்றுள் இந்த விஷயமும் ஒன்றாம். இவ்விஷயத்தில் நமக்குத் தற்கால ஆசாரம் அதிகப் பிரமாண மன்று. முற்காலத்து சாஸ்திரமே அதிகப் பிரமாணம்" என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

அப்போது வேங்கடாசல நாயுடு சொல்லுகிறார்:- "கேளும், சுப்புசாமிக் கோனாரே! பாவம் என்பதெல்லாம் வீண் பேச்சு. இது சாஸ்த்ரோக்தமான விஷயம். இதில் யாதொரு பாவமும் கிடையாது. அப்படியே பாவமிருந்த போதிலும், அது மாப்பிள்ளையையும் பெண்ணையும் சாருமேயன்றி, உம்மைச் சாராது. அது தவறி, உமக்கும் சிறிது பாவம் வந்து நேரக்கூடுமென்றாலும், அதற்குத் தகுந்த பிராயச்சித்தங்கள் பண்ணிவிடலாம். பெருமாள் கோயிலுக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தினால் போதும். அதில் எவ்வளவு கொடிய பாவமும் வெந்து சாம்பராய்ப் போய்விடும். உமக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும் அய்யங்காரவர்கள் கொடுப்பார்" என்றார்.

பணம் என்ற மாத்திரத்திலே பிணமும் வாயைத் திறக்கும் என்பது பழமொழி. சுப்புசாமிக் கோனார் ஏறக்குறையக் கொட்டாவி யளவுக்கு வாயைப் பிளந்தார்.

"எனக்குக் கொஞ்சம் கடன் பந்தங்களும் இருக்கின்றன. அவற்றையுந் தீர்த்து வைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.

"தங்களுக்கு எத்தனை ரூபாய்க்குக் கடன் இருக்கிறது?" என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

"ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது" என்றார் கோனார்.

"மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறேன்; போதுமா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

"ஓ! யதேஷ்டம்! இந்த வாரத்துக்குள்ளேயே விவாகத்தை முடித்து விடலாம்" என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார். அப்பால், மீனாக்ஷியை அழைத்து அவளுடைய சம்மதத்தையும் தெரிந்து கொண்டால் நல்லதென்று கோபாலய்யங்கார் கூறினார்.

"அவள் இப்போது வீட்டிலில்லை. நானே அவளிடம் சொல்லி விடுகிறேன்; அவள் சிறு குழந்தை. அவள் பிறந்தது முதல் இதுவரை என் வார்த்தையை ஒரு முறைகூடத் தட்டிப் பேசியது கிடையாது. இப்போது, இத்தனை உயர்ந்த, இத்தனை மேன்மையான சம்பந்தம் கிடைக்குமிடத்தில் அவள் என் சொல்லைச் சிறிதேனும் தட்டிப் பேசமாட்டாள்" என்றார் கோனார்.

"எதற்கும் அவளை அழைத்து ஒருமுறை அவளிடமும் கேட்டால் தான் என் மனம் சமாதானமடையும். நாங்கள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறோம். அவளை அழைப்பியுங்கள்" என்று கோபாலய்யங்கார் சொன்னார். அங்ஙனமே கோனார் ஒரு ஆளைவிட்டு மீனாக்ஷியை அழைத்து வரும்படி செய்தார். மீனாக்ஷி வந்தாள். அவளைத் தனியாக அழைத்துப் போய் சுப்புசாமிக் கோனார் விஷயங்களைத் தெரிவித்தார். மாப்பிள்ளையின் படிப்பையும், செல்வத்தையும், பதவியையும் மிகவும் உயர்வாக்கி வர்ணித்தார். மாப்பிள்ளையின் அழகை அவள் பார்க்கும்படி அவரையும் காண்பித்தார். அவள் அவருக்கு வாழ்க்கைப்பட சம்மதமுற்றாள்.

சிறிது நேரத்துக்குள் மகளையும் அழைத்துக்கொண்டு சுப்புசாமிக் கோனார் புறத்து திண்ணைக்கு வந்து சேர்ந்தார். அவளுடைய விழிகளைக் கோபாலய்யங்கார் நோக்கினார். அவள் எதிர் நோக்களித்தாள். 'கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனுமில' என்றார் திருவள்ளுவ நாயனார். அவளைப் பார்த்த மாத்திரத்திலே தம்மை மணம் புரிய சம்மதப்பட்டு விட்டாளென்று கோபாலய்யங்காருக்குத் தெளிவாகப் புலப்பட்டு விட்டது. எனினும், பரிபூர்ண நிச்சயமேற்படுத்திக் கொள்ளுமாறு அவர் சுப்புசாமிக் கோனாரை நோக்கி, "மீனாக்ஷி என்ன சொல்லுகிறாள்?" என்று கேட்டார்.

"அவளிடத்திலேயே நேராகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே" என்றார் கோனார்.

"என்ன மீனாக்ஷி? என்ன சொல்லுகிறாய்? என்னை மணம் புரிந்துகொள்ள சம்மதந்தானா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

மீனாக்ஷி "சம்மதம்" என்று மெதுவாகக் கூறித் தலை கவிழ்ந்தாள். கோபாலய்யங்காருக்கு ஜீவன் மறுபடி உண்டானது போல் ஆயிற்று. அவர் முகத்தில் புன்னகை தோன்றிற்று.

அந்த வாரத்திலேயே கோபாலய்யங்காரும் மீனாக்ஷியும் பிரமஸமாஜத்தில் சேர்ந்து கொண்டார்கள். அவ் விருவருக்கும் பிரம ஸமாஜ விதிகளின்படி, சென்னப்பட்டணத்தில் மேற்படி ஸமாஜக் கோயிலிலே விவாகம் நடைபெற்றது. விவாகம் முடிந்தவுடனே கோபாலய்யங்கார் தமது மனைவியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குப் போய் அங்கு தம் உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டார்.

நந்தலால் பாட்டு (சந்திரிகையின் கதை)

யதுகுல காம்போதி ராகம்-ஆதி தாளம்.

ஸஸ்ஸாஸா-ஸம்மாபதா-பததபபமபா-பாபா
பநீஸதபா-மாகா-ஸரிமகரீ-கெகரிரிஸஸா.

பார்க்கு மரத்திலெல்லாம், நந்தலாலா-நின்றன்
பச்சை நிறந்தோன்றுதடா, நந்தலாலா;
காக்கைச் சிறகினிலே, நந்தலாலா-நின்றன்
கரியவிழி தோன்றுதடா, நந்தலாலா;
கேட்க மொலியி லெல்லாம், நந்தலாலா-நின்றன்
கீத மிசைக்கு தடா, நந்தலாலா;
தீக்குள் விரலை வைத்தால், நந்தலாலா-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்தலாலா.

இந்தப் பாட்டடை மிகவும் மெதுவாக, ஒவ்வோரடியையும் இரண்டு தரம் சொல்லி இசை தவறாமல், தாளந் தவறாமல், கந்தர்வக் குழந்தை பாடுவது போல் அக்குழந்தை மிகவும் அற்புதமாகப் பாடி முடித்தது. கோபாலய்யங்காருக்கு மூர்ச்சை போட்டுவிடத் தெரிந்தது. அவர் தம்முடைய ஜன்மத்தில் இவ்வித சங்கீதம் கேட்டதில்லை; கனவில் கண்டதில்லை; கற்பனையில் எட்டியதில்லை.

''இதுதான் சுவர்க்கம்'' என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

''எது?'' என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.

''இந்தக் குழந்தையின் பாட்டு'' என்று அய்யங்கார் சொன்னார்.

''சங்கீதமா? கவிதையா? இந்தக் குழந்தையின் குரலா? இவற்றுள் எது சுவர்க்கம் போலிருக்கிறது?'' என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.

அதற்கு கோபாலய்யங்கார்- ''மூன்றும் கலந்து சுவர்க்கம் போன்றிருந்தது. விசேஷமாக, இதன் குரல் மிகவும் தெய்வீகமானது. குரல்கூட அவ்வளவில்லை. இந்தக் குழந்தை பாடிய மாதிரியே ஆச்சரியம்'' என்றார்.

''குழந்தையின் அழகையும் பாடுகையில் அது காண்பித்த புத்திக்கூர்மையையும் சேர்த்துச் சொல்லுங்கள்'' என்று பந்துலு சொன்னார்.

''அவையும் சேர்ந்துதான்'' என்று அய்யங்கார் சொன்னார்.

இவர்கள் இங்ஙனம் வியப்புரை சொல்லிக் கொண்டிருக்கையில் அக்குழந்தை எழுந்து அறையை விட்டு வெளியே ஓடிப் போய்விட்டது. அதன் பிறகே பந்துலுவின் மனைவியும் சென்றுவிட்டாள்.

அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி, ''இந்தக் குழந்தையையும் இதன் அத்தையையும் பற்றிய கதை சொல்வதாகத் தெரிவித்தீர்களே? இப்போது சொல்லுகிறீர்களா?'' என்று கேட்டார்.

பந்துலு பூகம்பம் முதலாக நாளதுவரை தாமறிந்து கொண்ட அளவில் அவ்விருவருடைய கதை முழுதையும் சாங்கோபாங்கமாக எடுத்துரைத்தார்.

''என் ஜன்மம் பலிதமாய் விட்டது'' என்றார் கோபாலய்யங்கார்.

''அதெப்படி?'' என்று பந்துலு கேட்டார்.

''இப்படிப்பட்ட பெண்ணொருத்தியை விவாகம் செய்யும் பொருட்டாகவே நான் நெடுங்காலமாகக் காத்திருந்தேன். இப்போது என் மனோரதம் நிறைவேறிவிட்டது'' என்றார் அய்யங்கார்.

இதைக் கேட்டு வீரேசலிங்கம் பந்துலு கலகலவென்று நகைத்தார்.

''ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்று அய்யங்கார் கேட்டார்.

''விவாகம் முடிந்து விட்டதுபோல் நீங்கள் பேசுகிறீர்களே! அதைக் கேட்டு நகைத்தேன். தங்களை மணம் புரிந்து கொள்ள அந்தப் பெண் சம்மதிப்பாளோ மாட்டாளோ? இன்று ராத்திரி அவள் போஜன காலத்தில் நம்மோடிருந்து விருந்துண்பாள். சாதாரணமாக, இந்து ஸ்திரீகளிடம் காணப்படும் பொய்ந்நாணம் அவளிடத்தில் சிறிதேனும் கிடையாது. அப்போது நீங்களிருவரும் பரஸ்பரம் சந்தித்து சம்பாஷணை செய்ய இடமுண்டாகும். நாளைக் காலையில் என் மனைவியின் மூலமாக அந்தப் பெண்ணுடைய சம்மதத்தை விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். அவள் சம்மதமுணர்த்துவாளாயின், பிறகு விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யலாம்'' என்று பந்துலு சொன்னார். இதைக் கேட்டு கோபாலய்யங்கார் ''அப்படியானால் இன்றைக்கும் நாளைக்கும் நான் இங்கேயே தங்களுடைய விருந்தாளியாக இருந்து விடுகிறேன். எனக்கு வேறெங்கும் எவ்விதமான காரியமுமில்லை'' என்றார்.

''அப்படியே செய்யுங்கள்'' என்றார் பந்துலு.

பிறகு வீரேசலிங்கம் பந்துலு தம்முடைய பேனா மைக்கூடு முதலிய கருவிகளை எடுத்து ஏதோ எழுத்து வேலை செய்யத் தொடங்கினார்.

கோபலய்யங்கார் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே நித்திரை போய்விட்டார்.

கோபலய்யங்கார் தூங்கிக் கொண்டிருக்கையில் சமையலறைக்குள் மாதரிருவரும் இராத்திரி போஜனத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். மிக விஸ்தாரமான சமையல்; அறுசுவைகளும் வியப்புறச் சமைந்தது. வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி சமையல் தொழிலில் மிகத் தேர்ச்சி ¦ப்றறவள். நமது விசாலாட்சியோ அவளிலும் ஆயிரமடங்கு அதிகத் தேர்ச்சி கொண்டவள். கோபாலய்யங்கார் பிராமண ஆசாரங்களைக் கைவிட்டுப் பாஷண்டராய் விட்டபோதிலும், ''பிராமணா: போஜனப்ரியா: '' (பிராமணர் உணவில் பிரியமுடையோர்) என்ற வாக்கியத்தை அனுசரிப்பதில் சாமான்ய வைதிக பிராமணர்களைக் காட்டிலும் நெடுந்தூரம் மேற்பட்டவர்.

பிராமணர்களை குற்றஞ் சொல்ல வேண்டுமென்ற கருத்துடன் மேற்படி வாக்கியத்தைப் பலர் உபயோகப்படுத்துகிறார்கள். 'பார்ப்பானுக்குச் சோற்று ருசியில் மோகம் அதிகம்' என்று மற்ற ஜாதியார் சாதாரணமாகச் சொல்லி வருகிறார்கள். பிராமணர்களே சில சமயங்களில் இதைத் தங்கள் ஜாதிக்கு இயற்கையில் அமைந்ததொரு குறை போல பேசிக்கொள்ளுகிறார்கள். சில சமயங்களில் தம்மைத் தாம் வியந்து கொள்ளும் நோக்கத்துடன் ஒரு பெருமையாக அவ்வசனத்தைக் கையாடுகிறார்கள். வேறு சில சமயங்களில் மற்ற ஜாதியாரிடமிருந்து பணங் கேட்பதற்கு முகாந்தரமாக இந்த வாக்கியத்தைத் தவிர்க்கொணாத விதியைப் புலப்படுத்துவது போல் எடுத்துரைக்கிறார்கள். ஆனால் இந்த வாக்கியம் வெறும் பிசகென்று நான் நினைக்கிறேன். ''ஸர்வோ ஜநா: போஜனப்பிரியா:'' எல்லா ஜனங்களும் போஜனத்தில் பிரியமுடையவர்கள் என்பது என்னுடைய அபிப்பிராயம். உணவின் அளவை எடுத்து நோக்கின் சாதாரண பிராமணனொருவனைக் காட்டிலும் சாதாரண சூத்திரன் - மறவன், அல்லது இடையன், அல்லது உழவன், எந்தத் தொழிலாளியும்-நாளன்றுக்குக் குறைந்த பட்சம் மூன்று மடங்கு அதிகமாகத் தின்னுகிறான். ஆங்கிலேயன் ஒன்பது மடங்கு அதிகமாக உண்கிறான். ஜெர்மானியன் இருபத்தேழு பங்கு அதிகமாகத் தின்கிறான். இனி, அளவை விட்டுவிட்டு, ஆகாரத்தின் பக்குவ பேதங்களை எண்ணுமிடத்தே அதில் பிராமணர், அல்லாதார் என்ற பாகுபாட்டுக்கிடமில்லை. செல்வர்கள் உணவைப் பலவகையாகப் பக்குவங்கள் செய்து புசிக்கிறார்கள். ஏழைகள் சிலவகைப் பக்குவங்களே செய்கிறார்கள். பரம ஏழைகளாய், ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாத ஜனங்களே, இந்நாட்டில், லட்சகணக்காக மலிந்து கிடக்கிறார்கள். இவர்கள் கூழும் கஞ்சியும் ஒருகால் மிளகாயும் தவிர வேறுவிதமான பக்குவங்களை உண்ணுதல் அருமையிலும் அருமையிலும் அருமை. இத்தனை கொடிய ஏழ்மை நிலையில் பெரும்பாலும் பள்ளர் பறையர்களும் சூத்திரர்களில் தாழ்ந்த வகுப்பினருமே இருக்கிறார்கள். ஆனால் மற்ற வகுப்பாரிலும் பலர் அந்த ஸ்திதிக்கு மிக சமீபத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமணர்களிலும் அங்ஙனமே பலர் அந்தப் பரிதாபகரமான நிலையில் அகப்பட்டுத் தவிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த தேசத்தில் மற்ற ஜாதி ஏழைகளைக் காட்டிலும் பிராமண ஏழைகளுக்கு முக்கியமாக வைதிக பிராமணர்களுக்கு, இனாம் சாப்பாடு அதிகமாகக் கிடைக்கும் வழியேற்பட்டிருக்கிறது.

எனினும் இவ்விஷயத்தில் பிராமணரென்றும் அல்லாதரென்றும் பிரிவு செய்தல் பொருந்தாது. பொதுப்படையாக ஏழைகளின் வீட்டில் செய்வதைக் காட்டிலும் செல்வர் வீட்டில் கறி குழம்பு முதலிய பதார்த்தங்களில் அதிக வகுப்புக்கள் சமைக்கிறார்களென்று சொல்லாம். இந்த விதிக்குப் பல விளக்குகளுமல்லதால், 'பொதுப்படையாக' என்றேன். ஏனென்றால் செல்வமிருந்த போதிலும் லோப குணமுடையோரின் வீடுகளில் போஜன வகைகள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். தவிரவும், தொழில் செய்யாமல் சோம்பேறிகளாக வாழும் செல்வர்களுக்கும், பொருள் தேடுவதிலும் அதைக் காப்பதிலும் மிதமிஞ்சிய கவலை செலுத்தும் செல்வர்களுக்கும் ஜீர்ண சக்தி எப்போதும் பரம மோசமாகவே இருக்குமாதலால், அவர்கள் வீட்டில் எத்தனை வகையான பக்குவங்கள் செய்தபோதிலும் ஒன்றிலும் ருசியேற்படாது. ஏற்கெனவே, இத்தையோர் போஜனப்பிரியர் என்று சொல்லத்தகார். அன்னத் துவேஷமுடையோரை போஜனப்பிரியர் என்று கூறுவதெப்படி? இந்த விஷயத்தைக் குறித்து இன்னும் அதிக விஸ்தாரமாக எழுதலாம். எனினும், போஜனம் பண்ணுவதில் எல்லோரும் விருப்புடையோரெயெனிலும், போஜன விஷயத்தைக் குறித்து நீண்ட பிரஸ்தாபம் நடத்துவதில் தற்காலத்துப் படிப்புப் படித்தவர்களுக்கு அதிகச் சுவையேற்படாதாகையாலும், இந்நூல் படிப்போரில் எவ்வித ருசியுடையோருக்கும் அதிக அருசியேற்படாமல் கதையெழுத வேண்டுமென்பது என்னுடைய நோக்கமாதலாலும் எனது கருத்தை இங்கு சுருக்கமாகச் சொல்லி முடித்துவிடுகிறேன். எவ்வகையாக நோக்குமிடத்தும் பிராமணர் போஜனப்பிரியர் என்று கூறி அவ்வகுப்பினர் இவ்விஷயத்தில் பொது மனித ஜாதியின்றும் வேறுபட்ட குணமுடையோரென்று குறிப்பிடும் பழமொழி யுக்தமில்லையென்பதே என் அபிப்ராயம். இது நிற்க.

கோபாலய்யங்காருக்கு ஜீர்ண சக்தி அதிகம். வீமஸேனனுக்கு 'விருகோதரன்' ஓநாய் வயிறுடையோன்-என்ற பெயரொன்று உண்டு. ஓநாய்க்குப் பசி அதிகமாம். தின்னத் தின்ன-எவ்வளவு தின்றபோதிலும்-சாதாரணமாக அதன் பசி அடங்குவதில்லையாம். உழைக்கும்போது மிகவும் தீவிரத்துடனும் நிதானத்துடனும் சோம்பரென்பது சிறிதேனுமில்லாமலும் உழைத்தால், மனிதர் இப்படிப்பட்ட பசி பெறலாம். தொழில் செய்வதில் வலிமை செலுத்த வேண்டும். ஒருவனது முழு வலிமையையும் செலுத்திச் செய்யப்படும் தொழிலே தொழிலாம். ஆனால், எவ்வளவு தொழில் செய்த போதிலும், அதனால் உடம்புக்கு சிரமமுண்டாகாத வண்ணமாகச் செய்யவேண்டும். வேர்க்க வேர்க்க கஸ்ரத் எடுப்பவன் சமர்த்தனல்லன். எத்தனை கஸ்ரத் எடுத்தாலும் வேர்வை தோன்றாதபடி தந்திரமாக எடுப்பவனே சமர்த்தன். இதை ஒரு வேளை சாதாரண மல்லர் அங்கீகாரம் செய்யத் திகைக்கக்கூடும். ஆனால் நூறு கஸ்ரத் பண்ணின மாத்திரத்திலேயே உடம்பெல்லாம் வெயர்த்துக் கொட்டிப் போகும் மனிதனைக் காட்டிலும், ஆயிரம் கஸ்ரத் செய்தபின் வெயர்க்கும் மனிதன் அதிக சமர்த்தன் அதிக பலவான் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இந்தக் கணக்கைத்தான் நான் இன்னும் சிறிது தூரம் எட்டிப் போடுகிறேன். கஸ்ரத் செய்யும் தொழிலாயினும், கதையெழுதும் தொழிலாயினும்-எல்லாவிதமான தொழிலுக்கும் தத்துவம் ஒன்றேயாம். அதாவது மனதில் சிரமந் தோன்றிய பிறகு தான் உடம்பில் சிரமந் தோன்றுகிறது. அசைக்க முடியாத பொறுமையுடன் தொழில் செய்தால் மேன்மேலும் புதிய ரத்தம் பெருகி, உடம்பில் மேன்மேலும் ஒளியும் வலியும் விருத்தியடைந்து கொண்டு வரும். இந்த வழியில் வீமசேனனுக்கு ஆயிரம் பொன் கொடுக்கலாமென்னில், கோபாலய்யங்காருக்குப் பத்துப் பொன் கொடுக்கலாம். அவ்வளவு பண்டிதர். எனவே மதுமாமிசப் பழக்கங்களால், வீரேசலிங்கம் பந்துலு எதிர்பார்த்தபடி, கோபாலய்யங்கார் அத்தனை விரைவாக இறந்து போவாரென்று எதிர்பார்க்க இடமில்லை. இது நிற்க.

கோபாலய்யங்கார் போஜன பிரியர்களிலே சிரேஷ்டர். இந்த விஷயம் பந்துலுவின் மனைவிக்கு மிகவும் நன்றாகத் தெரியும். எனவே, விசாலாட்சியின் விழிகளென்னும் வலைக்குள் கோபாலய்யங்காரின் இருதயமென்ற மானை வீழ்த்துவதற்கு இரை போடும் அம்சத்தில் கோபாலய்யங்காருடைய வயிற்றுக்கு ஸ்தூலமாகிய விருந்து போடுவதே தக்க இரையென்று தீர்மானித்துக் கொண்டு, வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி மிகவும் கோலாகலமாகச் சமையல் பண்ணினாள். முப்பது வகைக் கறி; முப்பது வகை சட்டினி; முப்பது வகை பொரியல்;-எல்லாம் பசு நெய்யில். இலை போட்டு ஜலந் தெளித்துப் பரிமாறுதல் தொடங்கிவிட்டது. நாலிலை; குழந்தைக்கொன்று;விசாலாட்சிக்கொன்று; பந்துலுவுக்கொன்று; கோபா-லய்யங்காருக்கொன்று. பந்துலுவின் மனைவி பரிமாறுகிறாள்.

பந்துலுவும் கோபாலய்யங்காரும் வந்து முதலாவதாக உட்கார்ந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் விசாலாட்சியும் குழந்தையும் வந்து உட்கார்ந்தனர். போஜனம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறிது நேரம் கழிந்தவுடனே கோபாலய்யங்கார் விசாலாட்சியை நோக்கி:- ''விசாலாட்சி எங்கே'' என்று கேட்டார். இவள்தான் விசாலாட்சியென்பது அவருக்குத் தெரியாது. பணிப்பெண்ணையும் குழந்தையையும் ஒன்றாக நோக்கியது முதலாக அப்பணிப் பெண்ணே விசாலாட்சி என்ற பிராந்தியில் அவர் மயங்கியிருந்தார்.

''நான்தான் விசாலாட்சி'' என்றாள் விசாலாட்சி.

''நீயா விசாலாட்சி?'' என்றார் கோபாலய்யங்கார்.

''ஆம்'' என்றாள் விசாலாட்சி.

''காலையில் இக்குழந்தையுடன் சோலையில் விளையாடிக் கொண்டிருந்த பெண் யார்?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

''அவள் இக்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கவில்லை. இந்தக் குழந்தைக்குக் காவல் காத்துக் கொண்டிருந்தாள். அவள் பந்துலு வீட்டு வேலைக்காரி'' என்று விசாலாட்சி சொன்னாள்.

கோபாலய்யங்காருக்கு நெஞ்சுக்குள் ஒரு பேரிடி விழுந்தது போலாயிற்று. காலையில் பூஞ்சோலையில் வேலைக்காரி சந்திரிகையை முத்தமிட்டபோது அச்செய்கையை இருவர் பார்த்ததாகவும் அவ்விருவருள் ஒருவர் அந்த வேலைக்காரியின் மீது காதல் கொண்டனரென்றும் சென்ற அத்தியாயத்தின் இறுதியில் சொல்லியிருக்கிறேன். அங்ஙனம் நோக்கிய இருவர் கோபாலய்யங்காரும் பந்துலுவும், காதல் கொண்டவர் கோபாலய்யங்கார். அந்த வேலைக்காரிக்கு இருபது வயதிருக்கும். மிகவும் அழகுடைய பெண். விசாலாட்சியின் அழகு அறிவும் பயிற்சியும் கலந்த அழகு. பணிப்பெண்ணுடைய அழகு கிராமியமானது.

எனிலும், இப்போது விசாலாட்சியை நோக்குமிடத்தே கோபாலய்யங்காருக்கு இவள் அதிக அழகா, அவள் அதிக அழகா என்ற சமுசயமேற்பட்டது. கண்களை மூடிக்கொண்டு மனவிழியால் பணிப்பெண்ணுடைய வடிவத்தை நோக்குவார். பிறகு கண்ணை விழித்து எதிரே நிற்கும் விசாலாட்சியின் முகத்தைப் பார்ப்பார். இப்படி இரண்டு மூன்று தரம் கண்ணை மூடி மூடி விழித்துச் சோதனை செய்து பார்த்ததில் அவருடைய புத்திக்கு இன்னார்தான் அதிக அழகென்பது நிச்சயப்படவில்லை. எனிலும், விசாலாட்சியை மணம் புரிந்து கொள்வதே பொருந்துமென்ற யோசனை ஒரு கணம் அவருக்குண்டாயிற்று. ஆயினும், காதல் வலியதன்றோ? காதலுக்கெதிரே எந்த சக்தி, எந்த யோசனை நிற்கவல்லது? காதல் இறுதியிலே வெற்றி பெற்றுத் திரும். கோபாலய்யங்காரே! உம்முடைய விதி உறுதியாய் விட்டது. உமக்கு விசாலாட்சியை மணம்புரிந்து கொள்ளும் பாக்கியம் இனிக் கிடையாது. காதலை எதிர்த்து யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதன் போக்கு காட்டுத் தீயின் போக்கையத்தது. அது தானாகவே எரிந்து தணியவேண்டும். அல்லது, தெய்வீகச் செயலாகப் பெருமழை பெய்து அதைத் தணிக்கவேண்டும். மற்றபடி, மனிதர் தண்ணீர்விட்டு அவிப்பது என்பது சாத்தியமில்லை.

நெடுநேரம் போஜனத்தில் செலவிட்டார்கள். பல விஷயங்களைக் குறித்து சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கோபாலய்யங்கார் நாவிலிருந்த ரசம் போய்விட்டது. அவர் அந்த அற்புதமான பக்குவங்களை ருசியின்றி உண்டார். பந்துலுவின் மனைவியும் பந்துலுவும் எதிர்பார்த்த வண்ணம் அவர் நிறைய உண்ணவுமில்லை. ஒவ்வொரு வகையிலும் சிறிது சிறிதுண்டார். பேச்சிலும் அவருக்கு அதிக ரசமேற்படவில்லை. ஆகாரம் முடிவு பெற்றது. படுக்கைக்குப் போகுமுன்னர் கோபாலய்யங்காரும் பந்துலுவும் படிப்பறையில் தனியே இருந்து வெற்றிலை போட்டுக் கொண்டார்கள். அப்போது பந்துலுவை நோக்கி கோபாலய்யங்கார்-''பந்துலுகாரு, நான் விசாலாட்சியை விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை'' என்றார். ''ஏன்? அவளிடம் என்ன குறை கண்டீர்?'' என்று பந்துலு கேட்டார்.

அதற்கு கேபாலய்யங்கார் -''அவளிடம் நான் என்ன குற்றம் கற்பிக்க முடியும்? விசாலாட்சி சர்வ சுப லட்சணங்களும் பொருந்தியவளாகவே இருக்கிறாள். எனிலும், மற்றொருத்திக்கு எனது நெஞ்சை நான் காணிக்கை செலுத்திவிட்டேன். மற்றொருத்தியின் மீது காதலுடையேன்'' என்றார்.

''அதை நீங்கள் என்னிடம் காலையில் சொல்லவில்லையே? காலையில் விசாலாட்சியை மணம் புரிந்து கொள்ள மிகவும் ஆவலுடனிருப்பது போல் வார்த்தை சொன்னீர்களே? இப்போது திடீரென்று தங்களுடைய மனம் மாறியிருப்பதன் காணரம் யாது?'' என்று பந்துலு வினவினார்.

''எனக்குக் காலையில் தெரியாத, எனது நெஞ்சை மற்றொருத்திக்குப் பறிகொடுத்துவிட்டேன் என்ற செய்தி எனக்கிப்போதுதான் தெரிந்தது'' என்றார் அய்யங்கார்.

''அ•தெங்ஙனம்'' என்ற பந்துலு கேட்டார். அப்போது கோபாலய்யங்கார் காலையிலே பூஞ்சோலையில் பணிப்பெண்ணும் குழந்தை சந்திரிகையுமிருப்பது கண்டு தாம் பணிப்பெண் மீது காமுற்ற செய்தியையும், அப்பால் அந்தக் குழந்தையின் அத்தை என்ற பேச்சு வரும்போதெல்லாம் தாம் அந்தப் பணிப்பெண்ணே அக்குழந்தையின் அத்தையென்று தவறாகக் கருதி வந்த செய்தியையும், அப்பால் இராத்திரி போஜன சமயத்தில் தமது தவறு தமக்கு விளங்கிய செய்தியையும் பந்துலுவிடம் விரிவாகக் கூறினார். அதைக் கேட்டவுடனே பந்துலு நகைத்தார். ''காதலாவது, உருளைக்கிழங்காவது! அய்யங்கார் ஸ்வாமிகளே, பணிப்பெண்ணை எங்ஙனம் மணம் புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?'' என்று பந்துலு கேட்டார்.

இது கேட்டு கோபாலய்யங்கார்-''அந்தக் காரியம் அவ்வளவு தூரம் சிரமமென்று என் புத்திக்குத் தோன்றவில்லை. நாளைக்குக் காலையில் பொழுது விடிந்தவுடனே அவளையழைத்து அவளுடைய சம்மதத்தை அறிந்து கொள்வோம். அவள் சம்மதப்படுவாளாயின், அப்பால் அவளுடைய பந்துக்களைக் கண்டு பேசி வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்துவிட்டு இன்னும் ஒரு வாரத்துக்குள் விவாகத்தை நடத்திவிடலாம். இதில் சிரமமெங்கேயிருக்கிறது?'' என்றார்.

அப்போது பந்துலு-''தங்களைப் போன்ற ஸ்தானமும் மதிப்புடைய மனிதரை அந்தப் பெண் மணம் செய்துகொள்ள மிக விரைவில் சம்மதப்படுவாள். அவளுடைய பந்துக்களும் கேட்டமாத்திரத்தில் இணங்கிவிடுவார்கள். இதிலெல்லாம் அதிகக் கஷ்டமில்லை. ஆனால் நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அதை உலகத்தார் கண்டு திகைப்படைந்து தங்களைப் புத்தி சுவாதீனமற்றவரென்று நினைப்பார் தங்களுக்கு மதிப்பு மிகவும் குறைந்துபோய்விடும்'' என்றார்.

''சர்க்கார் வேலை போகாதே! அதற்கு யாதொரு ஹானியும் வராது. இங்கிலீஷ் ராஜ்யம்! தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் ஆட்சியில்லை! எந்த ஜாதியார் எந்த ஜாதிப் பெண்ணை மணம் புரிந்து கொண்ட போதிலும், இங்கிலீஷ் ராஜ்யத்தில் தண்டனை கிடையாது' என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

அதற்குப் பந்துலு-''அவ்விஷயம் எனக்குத் தெரியாததன்று. தாங்கள் வேலைக்காரியை மணம் புரிந்து கொள்வதால் உங்கள்மீது ராஜாங்க அதிருப்தி ஏற்படாது. உங்கள் உத்தியோகத்துக்கு யாதொரு தீங்கும் நேராது. ஆனால், உங்களுடைய சிநேகிதர்களும் உங்களுடன் சமபதவியுடைய பிறரும் உங்களை இகழ்ச்சியாகப் பேசுவார்கள். 'மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும் அபகீர்த்தி மரணத்தைக் காட்டிலும் கொடியது என்று கண்ணன் பகவத் கீதையில் சொல்லுகிறார். அந்த அபகீர்த்தியைக் குறித்தே நான் அஞ்சுகிறேன்'' என்றார்.

இதுகேட்டு கோபாலய்யங்கார்-''வெறுமே விதவா விவாகம் செய்து கொண்டாலும் பந்துக்களும் சிநேகிதர்களும் அபகீர்த்தி சாற்றத்தான் செய்வார்கள். அதற்குத் துணிந்த நான் இதற்குத் துணிதல் பெரிதன்று. பந்துக்களும் சிநேகிதர்களும் சிறிது காலம் வரை வாய் ஓயாமல் பழி தூற்றிக் கொண்டிருப்பார்கள். பிறகு அவர்களுக்கே சலிப்புண்டாய்விடும். ஒரே சங்கதியைப் பற்றி எத்தனை நாள் பேசுவது? ஒரே மனிதனை எத்தனை காலம் தூற்றிக் கொண்டிருப்பது? நாளடைவில் எல்லாம் சரியாய்விடும். ஜாதிப்பிரஷ்டம் இருக்கத்தான் செய்யும். சாகும்வரை பந்தக்களுடன் பந்தி போஜனமும் சம்பந்தமும் செய்ய முடியாமல் போகும். ஆனால் இந்த சிரமம் விசாலாட்சியை மணம்புரிந்து கொண்டாலும் ஏற்படத்தான் செய்யும். ஜாதிப் பிரஷ்டம் எப்போதுமுண்டு. ஆனால் அதை நான் பொருட்டாக்கவில்லை. உலகம் விசாலமானது. பிராமணர்கள் நம்மைக் கைவிட்ட போதிலும் சூத்திரர்கள் கைவிட மாட்டார்கள். பிராமணரின் தொகை குறைவு. சூத்திரர்களின் ஜனத்தொகை இந்த நாட்டில் அதிகம். ஆதலால், ஒருவனுக்கு ஜாதிப் பிரஷ்டத்திலிருந்து நேரும் கஷ்டம் அதிகமிராது. சிநேகிதர்களும் இந்த விஷயத்தின் புதுமை மாறி இது பழங் செய்தியாய் விட்ட மாத்திரத்தில் முன்போலவே என்னுடன் பழகத் தொடங்கிவிடுவார்கள். ஊர்வாயை மூட ஒரு உலை மூடியுண்டு. அதன் பெயர் காலம். பழைய சிநேகிதர்கள் கைவிட்ட போதிலும், புதிய சிநேகிதர் ஏற்படுவார்கள். பணம் உள்ளவரை ஒருவனுக்கு சிநேகிதரில்லையென்ற குறைவு நேரிடாது. சர்க்கார் உத்தியோக முள்ளவரை சிநேகிதரில்லையென்ற குறைவு நேராது'' என்றார்.

''இருந்தாலும் தாங்கள் அந்த வேலைக்காரியை மணம்புரிந்து கொள்வதில் எனக்கு சம்மதில்லை. உலகத்தாரின் அபவாதத்தைப் பொருட்படுத்தாமல் நமது மனச்சாட்சியின்படி நடப்பதே தகும் என்பதே நான் அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். உலகத்தின் அபவாதம் பெரிதில்லை. ஆனால், நீங்கள் விரும்புகிறபடி விவாகம் செய்துகொள்ளக் கூடாதென்பதற்கு வேறு காரணங்களுமிருக்கின்றன'' என்று வீரேசலிங்க பந்துலு சொன்னார்.

''அந்தக் காரணங்களையெடுத்து விளக்குங்கள்'' என்றார் கோபாலய்யங்கார்.

''முதலாவது, அந்தப் பணிப்பெண் சிறிதேனும் கல்விப்பயிற்சியில்லாதவள். கல்விப் பயிற்சியில்லாவிடினும் மேற்குலத்துப் பெண்களிடம் பரம்பரையாக ஏற்படக்கூடிய நாகரிக ஒழுக்கங்களும் நடைகளும் தர்ம ஞானமும் கீழ்க்குலத்துப் பெண்களிடம் இரா. இதையெல்லாம் உத்தேசிக்குமிடத்தே, நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளுதல் மிகவும் தகாத காரியம்'' என்று பந்துலு சொன்னார்.

அதற்கு கோபாலய்யங்கார்-''நல்ல படிப்பு, நல்ல பயிற்சி, சிறந்த ஒழுக்கம், நல்ல சங்கீத ஞானம் - இன்னும் எத்தனையோ லட்சணங்களுடைய பெண்ணைத்தான் மணம்புரிந்து கொள்ளவேண்டுமென்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் அதுவெல்லாம் என் மனதில் உண்மையான காதல் தோன்று முன்னர் நினைத்த நினைப்பு. இப்போது மன்மதன் என் நெஞ்சில் சிங்காதனமிட்டு வீற்றிருந்து வேறொரு பாடஞ் சொல்லுகிறான். படிப்புப் பெரிதில்லை. பயிற்சி பெரிதில்லை. ஒழுக்கம் பெரிதில்லை. காதல் தன்னிலேயேதான் இனிது. மற்றதெல்லாம் பதர். காதலொன்றே பொருள். மேலும், கீழ்க்குலத்துப் பெண்கள் தக்க தர்ம ஞானமில்லாமலிருப்பார்களென்று நினைப்பது தவறு. எல்லா ஜாதியாருக்குள்ளும் தர்மவுணர்ச்சியுடைய ஆண்களும் பெண்களும் இருப்பார்கள். அ•தற்றவரும் எல்லா ஜாதிகளிலும் இருப்பார்கள். மேற்குலத்துக்குரிய நாகரிக நடைகளைக் கீழ்க்குலத்துப் பெண்கள் மிக விரைவிலே கற்றுக் கொள்ள முடியும். அந்த நாகரிக நடைகளென்பன செல்வத்தாலும் ஸ்தானத்தாலும் ஏற்படுவன. அவை பரம்பரையாலே தான் விளைய வேண்டுமென்ற அவசியமில்லை. பழக்கத்தால் உண்டாய்விடும். என்னுடன் ஒரு வருஷம் குடியிருந்தால் போதும். அந்தப் பணிப்பெண்ணுக்கு நாகரிக நடைகளெல்லாம் வெகு சாதாரணமாக ஏற்பட்டுவிடும். படிப்பு முதலியனவும் நான் விரைவிலே அவளுக்குக் கற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்துவிடுவேன்'' என்று அய்யங்கார் சொன்னார்.

''உலக அனுபவமில்லாத பதினாலு வயதுப் பச்சைப் பிள்ளைகள் சொல்லக்கூடிய வார்த்தை இது. முப்பது வயதாய், உயர்ந்த சர்க்கார் வேலையிலிருந்து சகலவித லௌகிக அனுபவங்களுமுடைய தாங்கள் இந்த வார்த்தை சொல்வது கேட்டு எனக்கு மிக வியப்புண்டாகிறது. காதல் மூன்று நாள் நிற்கும் பொருள். வெறுமே புதுமையை ஆதாரமாகக் கொண்டது. புதுமை மாறிப் போனவுடன் காதல் பறந்து போய்விடும். அப்பால் கனமான அறிவுப் பயிற்சியாலும் ஒழுக்கத்தாலும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பற்றுதலே நிலையுடையது'' என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.

''மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமையுணர்ச்சிக்கு காதலென்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. அந்த பிராந்தி என் உள்ளத்தில் எழக்கூடியதன்று. அவ்வித மயக்கங்கள் தோன்றாதபடி என் உள்ளத்தை நான் நன்றாகத் திருத்திப் பண்படுத்தி வைத்திருக்கிறேன். காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்துக்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது. சாவித்திரியும் சத்யவானும்; லைலாவும் மஜ்னூவும்; ரோமியோவும் ஜூலியெத்தும் கொண்டிருந்தார்களே, அந்த வஸ்துக்குக் காதலென்று பெயர். அது அழியாத நித்ய வஸ்து. இமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல் பொய்த்துப் போகாது. அத்தகைய காதல் நான் அந்தப் பணிப்பெண் மீது கொண்டிருக்கிறேன்'' என்று அய்யங்கார் சொன்னார்.

செவிடன் காதில் சங்கூதுவது போல் வீரேசலிங்கம் பந்துலு பலபல நியாயங்கள் கூறி அந்தப் பணிப்பெண் மீது கோபாலய்யங்கார் கொண்டிருக்கும் மையலை அகற்றிவிட முயற்சி செய்தார். இவர் பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே கோபாலய்யங்கார் கொட்டாவி விடத் தொடங்கி விட்டடார். அவருக்குப் பந்துலுவின் வார்த்தைகளில் ருசியில்லை. இதையுணர்ந்த பந்துலு-'' சரி இந்த விஷயத்தைக் குறித்து விஸ்தாரமாக நாளைக்குக் காலையில் பேசிக்கொள்ளலாம். இப்போது நித்திரை செய்யப் போவோம்'' என்றார்.

அப்போது கோபாலய்யங்கார்-''அங்ஙனமே செய்வோம். ஆனால் தூங்கப் போகுமுன் தாங்கள் தயவு செய்து எனக்கொரு விஷயந் தெரிவிக்க வேண்டும். அந்தப் பணிப்பெண் யார்? அவளுடைய பெயர் யாது? அவளென்ன ஜாதி? அவளுடைய பேற்றோர் அல்லது சுற்றத்தார் எங்கிருக்கிறார்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு வீரேசலிங்கம் பந்துலு-''அப்பணிப்பெண்ணுக்குப் பெயர் மீனாட்சி. அவள் ஜாதியில் இடைச்சி. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாது. ஓஹோஹோ! இதில் ஒரு முக்கியமான விஷயத்தை யோசிக்க மறந்து விட்டீர்களே! ஒருவேளை ஏற்கெனவே அவளுக்கு விவாகம் ஆய்விட்டதோ என்னவோ?'' என்றார்.

''அதைக் குறித்துத் தங்களுக்கு சம்சயம் வேண்டியதில்லை. நான் காலையிலேயே அவளுடைய கழுத்தை நன்றாக கவனித்தேன். அவளுடைய கழுத்தில் தாலியில்லை'' என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

''தாலி ஒரு வேளை ரவிக்கைக்குள்ளே மறைந்து கிடந்திருக்கக்கூடும். தங்கள் கண்ணுக்கு அகப்படாமலிருந்திருக்கலாம்'' என்றார் பந்துலு.

''அதைக் குறித்தும் சம்சயம் வேண்டியதில்லை. காதலுக்குக் கண் கிடையாதென்று சிலர் தப்பான பழமொழி சொல்லுகிறார்கள். காதலுக்கு மிகவும் கூர்மையான கண்களுண்டு. நான் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்தேன். தாலியில்லையென்பது எனக்குப் பரம நிச்சயம். அவளுக்கு விவாகமாகவில்லை. அவள் முகத்தைப் பார்த்ததிலேயே அவள் விவாகமாகாதவளென்பது எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. எனக்கு இவ்விஷயத்தில் அனுபவம் அதிகம். ஒரு ஸ்த்ரீயின் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இவள் விவாகமானவள் அல்லது ஆகாதவள் என்பது எனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்துவிடும். இது நிற்க. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாவிடினும், வேறு அவளுடைய விருத்தாந்தங்கள் அவளைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியனவற்றை எனக்குச் சொல்லுங்கள்'' என்று கோபாலய்யங்கார் வேண்டினர்.

''எனக்கு அவளுடைய பூர்வோத்தரங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவள் என்னுடைய சொந்த வேலைக்காரியுமன்று. இங்கு எழும்பூரில் இதே தெருவில் நாலைந்து வீடுகளுக்கப்பால் என் நண்பர் வேங்கடாசலநாயுடு என்றொருவர் இருக்கிறார். அவர் பிரமஸமாஜத்தைச் சேர்ந்தவர். இந்த வீடும் அவருக்குச் சொந்தமானதே. இந்த வேலைக்காரி அவருடைய குடும்பத்தில் வேலை செய்பவள். இங்கு நான் தாமதிக்கும் சில தினங்களுக்கு என் மனைவிக்குத் துணையாக வீடு பெருக்கி, மாடு கறந்து, விளக்கேற்றி, இன்னும் வேறு சிறு தொழில்கள் செய்யுமாறு இவளை வேங்கடாசல நாயுடு எங்களிடம் அனுப்பியிருக்கிறார். நாங்கள் ராஜ மஹேந்திரபுரத்துக்குப் போகும்போது அப்பெண் மறுபடி நாயுடு வீட்டில் வேலைக்குப் போய்விடுவாள்'' என்று பந்துலு சொன்னார்.

''நாளைக்குக் காலையில் நான் வேங்கடாசல நாயுடுவைப் பார்க்கவேண்டும். அவர் இங்கு வருவாரா? நாம் அவருடைய வீட்டுக்குப் போகவேண்டுமா?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

''அவரையே இங்கு வரச் சொல்லலாம். நாம் போகவேண்டாம். எனிலும், இந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளும் விஷயத்தைத் தாங்கள் மறந்து விடுவதே யுக்தமாகத் தோன்றுகிறது'' என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.

இதுகேட்டு கோபாலய்யங்கார்:- ''எதற்கும் நாளைக்குக் காலையில் நாயுடுவை இங்கு தருவியுங்கள். மற்ற சங்கதி பிறகு பேசிக்கொள்வோம்'' என்றார்.

அப்பால் இருவரும் நித்திரை செய்யப் போய்விட்டனர். இரவிலேயே வீரேசலிங்கம் பந்துலு தமக்கும் அய்யங்காருக்கும் நடந்த சம்பாஷணையைத் தமது மனைவியிடம் தெரிவித்தார். அவள் மறுநாட் பொழுது விடிந்தவுடனே அச்செய்தியையெல்லாம் விசாலாட்சியிடம் கூறினாள். அது கேட்டு விசாலாட்சி பந்துலுவின் மனைவியுடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து, ''இது போனால் போகட்டும். வேறு தக்க வரன் பார்த்து நீங்களே எனக்கு விவாகம் செய்து வைக்க வேண்டும். உங்களை விட்டால் எனக்கு வேறு புகல் கிடையாது'' என்றாள்.

அப்போது பந்துலுவின் மனைவி:- ''பயப்படாதே, அம்மா. உனக்கு நல்ல புருஷன் கிடைப்பான். உன்னுடைய குணத்துக்கும் அழகுக்கும் ராஜாவைப் போன்ற புருஷன் அகப்படுவான். நான் உனக்கு மணஞ்செய்து வைக்கிறேன்'' என்றாள்.

Friday, September 28, 2012

வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து (சந்திரிகையின் கதை)

மோட்டார் வண்டியிலிருந்து டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரைத் தக்க உபசார வார்த்தைகளுடன் கைகொடுத்தழைத்து வந்து வீரேசலிங்கம் பந்துலு வீட்டுக்குள் தமது படிப்பறையில் நாற்காலியில் உட்கார்த்தி காபி கொணர்ந்து கொடுத்தார். நெய்த் தேங்குழல் நான்கைத்தின்று, ஒரு பெரிய வெள்ளி ஸ்தாலி நிறையக் காபியும் குடித்துவிட்டு, கோபாலய்யங்கார் 'ஹோ' என்று ஏப்பமிட்டுச் சாய்வு நாற்காலியின்மீது சாய்ந்து கொண்டார். அவரிடம் வீரேசலிங்கம் பந்துலு ஒரு வெற்றிலைத் தட்டு நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாசனைத் திரவியங்களுடன் கொண்டு வைத்தார். அது முழுதையும் அய்யங்கார் மென்று மென்று முக்கால் மணி நேரத்தில் ஹதம் பண்ணி விட்டார்.

அப்பால் பந்துலு அவரிடம் ஒரு தெலுங்கு பத்திரிகையை நீட்டினார். அவர் அதை ஆதிமுதல் அந்தம் வரை, விளம்பரங்களுட்பட, ஒரு வரிகூட மிச்சமில்லாமல் வாசித்து முடித்தார்.

கோபாலய்யங்கார் இங்கிலீஷ், ஸம்ஸ்கிருதம். தமிழ், தெலுங்கு நான்கு பாஷைகளிலும் உயர்ந்த பயிற்சியுடையவர். இவர் தெலுங்கு ஜில்லாக்களில் சில வருஷங்களில் வேலை பார்த்த சமயத்தில் தெலுங்கு பாஷையைத் தன் தாய்மொழிக்கு நிகராகப் பயின்று கொண்டார்.

இவர் பத்திரிகை வாசித்து முடித்தபின், இருவரும் வீட்டுக் கொல்லையிலே போய்ச் சிறிது நேரம் உலாவிக் கொண்டிருந்தனர்; பிறகு ஸ்நானம் பண்ணினார்கள்; போஜனம் பண்ண உட்கார்ந்தார்கள்.

தேவலோகத்து விருந்து போன்ற சமையல் பக்குவம். வீரேசலிங்கம் பந்துலுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. இத்தனை ருசியான உணவை அவர் தம்முடைய ஜன்மத்தில் உண்டதில்லை. கனவில் கண்டதில்லை. கற்பனையில் எட்டினதில்லை. தின்னத் தின்னத் தின்ன ருசி தெவிட்டவே யில்லை. கோபாலய்யங்காருடைய முகத்தைப் பந்துலு ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பந்துலுவின் முகத்தை அய்யங்கார் ஒரு முறை திரும்பிப் பார்த்தார்.

பந்துலுவின் மனைவி பரிமாறிக் கொண்டிருந்தாள்.

"யாருடைய சமையல் தெரியுமா?" என்று பந்துலுவின் மனைவி கேட்டாள். "காலையில் வந்தாளே, அந்தப்பெண்ணுடைய சமையலா?" என்றார் பந்துலு.

"ஆம்" என்றாள் பந்துலுவின் மனைவி.

"அந்தப் பெண்ணை இங்குச் சற்றே வரச்சொல். நம்முடைய கோபாலய்யங்கார் அவளுடைய முகத்தின் அழகையும் அவள் சொல்லின் அழகையும் அவளறிவின் அழகையும் பார்க்க வேண்டும். சமையலழகை மாத்திரம் பார்த்தால் போதுமா? அந்த மகா சுந்தரியின் சகல சௌந்தர்யங்களையும் பார்க்க வேண்டாமா?" என்றார் வீரேசலிங்கம் பந்துலு.

"அவளுக்குப் பலமான தலை நோவு. சமையல் சிரமம், யாத்திரை சிரமம் எல்லாம் சேர்ந்து அவளுக்குத் தலைநோவு உண்டாக்கிவிட்டன. இராத்திரி அவளுக்கு உடம்பு நேராய்விடும். அப்போது அய்யங்கார் அவளைப் பார்க்கலாம்" என்று பந்துலுவின் மனைவி சொன்னாள். அப்பால் நெடுநேரம் இருவரும் ஆகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். போஜனம் முடிந்து கை கழுவி விட்டுப் பந்துலுவும் அய்யங்காரும் மறுபடி பந்துலுவின் படிப்பறையில் வந்து நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். மேஜை மேல் பந்துலுவின் மனைவி கொண்டுவந்து வைத்த தாம்பூலத்தை எடுத்துப் போடத் தொடங்குகையில் "இதுவே சுவர்க்கம்" என்று பந்துலு சொன்னார்.

"எது?" என்று பந்துலுவின் மனைவின் கேட்டாள்.

"இப்போது செய்த போஜனம்" என்று பந்துலு சொன்னார்.

"சமையல் ருசியாக இருந்ததா?" என்று பந்துலுவின் மனைவி கோபாலய்யங்காரை நோக்கி வினவினாள்.

"மிகவும் ருசியாக இருந்தது" என்று கோபாலய்யங்கார் சொன்னார். அந்த சமயத்தில் கோபாலய்யங்காருடைய மனம் அங்ஙனம் ருசியாகச் சமையல் செய்த பெண்ணின் அழகையும், புத்தி நுட்பத்தையும், சொல்லினிமையையுங் குறித்து வீரேசலிங்கம் பந்துலு செய்த வர்ணனைகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று. அவள் உண்மையாகவே அத்தனை அற்புதமான பெண்தானா? அல்லது பந்துலு நூலாசிரியராகையால் வெறுமே கற்பனைதான் சொன்னாரா?" என்று அவருக்கு ஓர் ஐயமுண்டாயிற்று.

அப்போது பந்துலு தன் மனைவியை நோக்கி, 'அந்தப் பெண் தன்னுடன் கொண்டு வந்திருக்கும் குழந்தையை இங்கே கூட்டி வா" என்றார். "சரி" என்று சொல்லிப் பந்துலுவின் மனைவி சமையலறைக்குள்ளே போனாள்.

அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி:- "அந்தப் பெண் அக்குழந்தைக்கு உறவெப்படி?" என்று கேட்டார்.

"அந்தப் பெண்ணுடைய தமையனார் மகள் அக் குழந்தை. அவர்களுடைய கதை மிகவும் ரஸமானது. நான் அதை உங்களுக்குப் பின்பு சொல்லுகிறேன். முதலாவது, அக் குழந்தையைப் பார்த்து அதனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்யுங்கள். அத்தையின் புத்திக்கூர்மை அதற்கும் இருக்கிறது. அவளுடைய வயதாகும்போது அக்குழந்தையும் அவளைப் போலவே ஸரஸ்வதி ரூபமாக விளங்கும்" என்று பந்துலு சொன்னார்.

பந்துலுவின் மனைவி குழந்தை சந்திரிகையை அழைத்துக் கொண்டு வந்தாள். செம்பட்டுப் பாவாடை; செம்பட்டுச் சட்டை; செம்பட்டு நாடாவிலே பின்னல்; செய்ய குங்குமப்பொட்டு; அந்தக் குழந்தை விசாலாக்ஷியைப் போல் இருபத்தைந்து வயதாகும்போது ஸரஸ்வதி ஸ்வரூபமாக விளங்குமென்று பந்துலு சொன்னார். ஆனால் அதை இப்போது பார்க்கையில் அது சிறிய லக்ஷ்மீதேவி விக்ரமாக விளங்கிற்று.

அது சிரித்தால் ரோஜாப்பூ நகைப்பது போலிருக்கும். அதன் கைகளும் கால்களும் தங்கத்தால் செய்யப்பட்டன போன்றிருந்தன. அதன் முகம் நிலவைக் கொண்டு சமைக்கப்பட்டது போன்றிருந்தது. அதன் மொழிகள் பொன் வீணையில் கந்தர்வர் வாசிக்கும் நாதம்போல் ஒலித்தன. அதன் கைகால் இயக்கங்கள் தேவ ஸ்திரீகளின் நாட்டியச் செயல்களை யொத்திருந்தன.

இந்தக் குழந்தையைப் பார்த்தவுடனே காலையில் இதன் முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டு நகைத்துக் கொண்டிருந்த பணிப் பெண்ணுடைய அழகிய தோற்றம் கோபாலய்யங்காரின் மனக் கண்ணுக்கு முன்னே எழுந்தது.

"குழந்தாய், உனக்குப் பாட்டுப் பாடத் தெரியுமா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார். "தெரியும்" என்றாள் சந்திரிகை. "எங்கே, ஒன்று பாடு. கேட்போம்" என்றார் கோபாலய்யங்கார்.

"அத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த நந்தலால் பாட்டுப் பாடலாமா?" என்று சந்திரிகை கேட்டாள்.

"பாடு" என்றார் கோபாலய்யங்கார்.

சந்திர்கை பாடத் தொடங்கினாள்.

Thursday, September 27, 2012

விசாலாக்ஷியின் ஏமாற்றம் (சந்திரிகையின் கதை)

ராஜமகேந்திரபுரத்தில் வீரேசலிங்கம் பந்துலு வீட்டைத் தேடிப் போய் விசாலாட்சி விசாரித்தாள். அவர் அங்கில்லை யென்றும், அவள் வந்த நாளுக்கு முதல் நாள்தான் புறப்பட்டுச் சென்னப்பட்டணத்துக்குப் போனா ரென்றும் தெரிய வந்தது. சென்னை எழும்பூரில் பண்டித வீரேசலிங்கம் பந்துலு ஒரு தனி வீட்டில் தம் மனைவியுடன் வந்து தங்கியிருந்தார்.

விசாலாட்சி சென்னப்பட்டணத்துக்கு வந்து, மறுநாட் காலையில் எழும்பூரில் அவர் இருந்த வீட்டிற்குப் போனாள். உள்ளே அவர் மாத்திரம் நாற்காலி மேஜை போட்டு உட்கார்ந்து கொண்டு ஏதோ நூலெழுதிக் கொண்டிருந்தார்.

விசாலாட்சி அவரை நமஸ்காரம் பண்ணினாள். ஜீ. சுப்பிரமணிய அய்யரிடமிருந்து தான் வாங்கிக்கொண்டு வந்த கடிதத்தைக் கொடுத்தாள். வீரேசலிங்கம் பந்துலு தன் எதிரேயிருந்த நாற்காலியின் மீது விசாலாட்சியை உட்காரச் சொன்னார். அவள் தன் மடியில் சந்திரிகையை வைத்துக்கொண்டு அந்நாற்காலியின் மீதுட்கார்ந்தாள். வீரேசலிங்கம் பந்துலு அவள் கொணர்ந்த கடிதம் முழுதையும் வாசித்துப் பார்த்துவிட்டு, அவளை நோக்கி 'இன்றைக்கென்ன கிழமை?' என்று தமிழில் கேட்டார். அவள் 'புதவாரமு' என்று தெலுங்கில் மறு மொழி சொன்னாள்.

"மீகு தெலுகு வச்சுனா?" என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார். "அவுனு சால பாக வச்சுனு" என்றாள் விசாலாட்சி.

இங்கு நமது கதை வாசிப்போரிலே பலருக்குத் தெலுங்கு பாஷை தெரிந்திருக்க வழியில்லை யாதலால், அவ்விருவருக்குள் தெலுங்கில் நடைபெற்ற சம்பாஷணையை நான் தமிழில் மொழி பெயர்த்துத் தருகிறேன்.

"உனக்குத் தாய் தந்தையர் இருக்கிறார்களா?" என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.

"இல்லை" என்றாள் விசாலாட்சி.

"அண்ணன், தம்பி, அக்காள், தங்கை ?"

"எனக்கு யாருமே இல்லை. அதாவது, என்னுடைய விவகாரங்களில் கவனம் செலுத்தி என்னைக் காப்பாற்றக் கூடிய பந்துக்கள் யாருமில்லை. அப்படியே சிலர் இருந்தபோதிலும், நான் இப்போது விவாகம் செய்து கொள்ளப் போவதினின்றும் அவர்கள் என்னை ஜாதிக்குப் புறம்பாகக் கருதி விடுவார்கள்" என்று விசாலாட்சி சொன்னாள்.

"உனக்கு என்னென்ன பாஷைகள் தெரியும்?" என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.

"எனக்குத் தமிழ் தெரியும். தெலுங்கு தெரியும். இரண்டு பாஷைகளும் நன்றாக எழுதவும் வாசிக்கவும் பேசவுந் தெரியும்" என்று விசாலாட்சி சொன்னாள்.

"இங்கிலீஷ் தெரியுமா?" என்று பந்துலு கேட்டார்.

"தெரியாது" என்றாள் விசாலாட்சி.

"கொஞ்சங் கூட?" என்று கேட்டார்.

"கொஞ்சங் கூட தெரியாது" என்றாள்.

"சங்கீதம் தெரியுமா?" என்று பந்துலு கேட்டார்.

"எனக்கு நல்ல தொண்டை. என் பாட்டை மிகவும் நல்ல பாட்டென்று என் சுற்றத்தார் சொல்வார்கள்" என்று விசாலாட்சி சொன்னாள்.

"வீணை, பிடில், ஹார்மோனியம் - ஏதேனும் வாத்தியம் வாசிப்பாயா?" என்று பந்துலு கேட்டார்.

"ஒரு வாத்தியமும் நான் பழகவில்லை" என்றாள் விசாலாட்சி.

"தாளந் தவறாமல் பாடுவாயா?" என்று பந்துலு கேட்டார்.

"தாளம் கொஞ்சங்கூடத் தவறமாட்டேன்" என்று விசாலாட்சி சொன்னாள்.

"எங்கே? ஏதேனும் ஒரு பாட்டுப் பாடிக் காட்டு, பார்ப்போம்" என்று பந்துலு கேட்டார்.

அந்த சமயத்தில் சமையலறைக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவளாகிய வீரேசலிங்கம் பந்துலுவின் கிழமனைவி உள்ளேயிருந்து இவர்கள் பேசிக் கொண்டிருந்த கூடத்துக்கு வந்து ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். அவளைக் கண்டவுடன், விசாலாட்சி எழுந்து நமஸ்காரம் பண்ணினாள். அவள் ஆசீர்வாதங் கூறி வீற்றிருக்க விடை கொடுத்து விசாலாட்சியின் மடியிலிருந்த குழந்தையை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

குழந்தை வீறிட்டு அழத் தொடங்கிற்று.

"என்னிடம் கொடு, நான் அழாதபடி வைத்துக் கொள்ளுகிறேன்" என்று பந்துலு சொன்னார், அவள் அக் குழந்தையைத் தன் கணவனிடம் கொடுத்தாள். அவர் மடிக்குப் போனவுடனே குழந்தையாகிய சந்திரிகை அழூகையை நிறுத்தியது மட்டுமன்றி வாயைத் திறந்து புன்னகை செய்யத் தொடங்கினாள்.

"கிழவருக்கு வேறொன்றுந் தெரியாவிட்டாலும், குழந்தைகளை அழாதபடி வைத்துக் கொள்வதில் மிகவும் சமர்த்தர்' என்றாள் கிழவி.

"ஆமாம்! எனக்கென்ன தெரியும்? படிப்புத் தெரியுமா, இழவா? நீ தான் சகல கலா பண்டிதை" என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு முறுவலித்தார்.

அப்பால், வீரேசலிங்கம் பந்துலு நமக்கு ஜீ. சுப்பிரமணிய அய்யர் எழுதிய கடிதத்தில் கண்டபடி விசாலாட்சியின் விருத்தாந்தங்களை யெல்லாம் விரித்துக் கூறினார்.

அவருடைய மனைவி இதைக் கேட்டு:- "சென்ற வாரம் தங்களைப் பார்க்கும் பொருட்டுத் தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் ஒரு அய்யங்கார் வந்திருந்தாரன்றோ? அவர் தமக்கு ஒரு விதவைப் பெண் பார்த்து விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று தங்களை வேண்டினாரன்றோ? அவருக்கு இந்தப் பெண்ணைக் கொடுக்கலாம். இவளுடைய முதல் புருஷன் ருது ஆவதற்கு முன்னே யிறந்தானா? பிந்தி இறந்தானா?" என்று வினவினாள்.

அப்போது வீரேசலிங்கம் பந்துல்லு:- "அந்த விஷயம் உனக்குச் சொல்லத் தவறி விட்டேனா? இதோ சொல்லுகிறேன் கேள். இவளுக்குப் பத்தாம் வயதிலே அந்தப் புருஷன் இறந்து போனான். அவன் இறந்துபோய் இப்போது பதினைந்து வருஷங்களாயின" என்றார்.

"சரி; அப்படியானால் அந்தப் டிப்டி கலெக்டர் யாதோர் ஆக்ஷேபமின்றி இவளை மணம்புரிந்து கொள்வார். முதற் புருஷனுடன் கூடியனுபவிக்காமல் கன்னிப் பருவத்திலே தாலியறுத்த பெண் தமக்கு வேண்டுமென்று அவர் சொன்னாரன்றோ?" என்று கிழவி கேட்டாள்.

"ஆம்; இவள்தான் அவர் விரும்பிய லக்ஷணங்களெல்லாம் பொருந்தியவளாக இருக்கிறாள். இவளை அவர் அவசியம் மணம் புரிந்து கொள்ள விரும்புவார். நீ சொல்லுமுன்பே, நான் இந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்த மாத்திரத்தில், மேற்படி டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரை நினைத்தேன், ஆனால் 'இந்தப் பெண் அவரை மணம் புரிந்து கொள்ள உடன்படுவாளோ' என்பதுதான் சந்தேகம்" என்று பந்துலு சொன்னார்.

இதைக் கேட்டவுடனே கிழவி:- "ஏன்? அவரிடத்தில் என்ன குற்றங் கண்டீர்? எலுமிச்சம் பழம்போலே நிறம்; ராஜபார்வை; பருத்த புஜங்கள்; அகன்ற மார்பு; ஒரு மயிர் கூட நரையில்லை; நல்ல வாலிபப் பருவம். டிப்டி கலெக்டர் உத்தியோகம் பண்ணுகிறார். எத்தனை கோடி தவம் பண்ணியோ, இவளுக்கு அப்படிப்பட்ட புருஷன் கிடைக்க வேண்டும்" என்றாள்.

அப்போது வீரேசலிங்கம் பந்துலு:- "அந்த கோபாலய்யங்கார் நீ சொன்ன லக்ஷணங்களெல்லாம் உடையவரென்பது மெய்யே. ஆனால் சாராயம் குடிக்கிறார். மாம்ச போஜனம் பண்ணுகிறார். கட்குடியர். வேறென்ன நல்ல லக்ஷணங்களுமுடையவராக இருப்பினும் அவற்றை விரைவில் இழந்து விடுவார்கள். அவர்களுடைய செல்வமும் பதவியும் விரைவில் அழிந்து போய் விடும்" என்றார்.

இது கேட்டு விசாலாக்ஷி:- "சரி, அவர் என்னை விவாகம் செய்துகொள்ளும்படி ஏற்பாடு செய்யுங்கள். அவருடைய கெட்ட குணங்களை யெல்லாம் நான் மாற்றி விடுகிறேன்" என்றாள்.

"குடி வழக்கத்தை மாற்றப் பிரமதேவனாலேகூட முடியாது" என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.

அதற்கு விசாலாக்ஷி:- "என்னால் முடியும். சாவித்ரி தன் கணவனை யமனுலகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரவில்லையா? பெண்களுடைய அன்புக்குச் சாத்தியப்படாதது யாதொன்றுமில்லை. நான் அவருடைய மாம்ச போஜன வழக்கத்தை உடனே நிறுத்தி விடுவேன். மது வழக்கத்தை ஓரிரண்டு வருஷங்களில் நிறுத்தி வைப்பேன். மற்ற லக்ஷணங்களெல்லாம் அவரிடம் நல்லனவாக இருப்பதால் இவ்விரண்டு குற்றங்களிருப்பது பெரிதில்லை. நான் அவரை மணம் புரிந்து கொள்ள முற்றிலும் சம்மதப் படுகிறேன்" என்றாள்.

இது கேட்டு வீரேசலிங்கம் பந்துலு:- "சரி. பாட்டுப் பாடத் தெரியுமென்றாயே? ஏதேனும் கீர்த்தனம் பாடு, கேட்போம்" என்றார்.

"சுருதிக்குத் தம்பூர் இருக்கிறதோ?" என்று விசாலாட்சி கேட்டாள்.

'ஹார்மோனியம் இருக்கிறது' என்று சொல்லி வீரேசலிங்கம் பந்தலுவின் மனைவி உள்ளே போய் ஒரு நேர்த்தியான சிறிய அழகிய 'மோஹின்' பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து விசாலாக்ஷியிடம் கொடுத்தாள்.

பெட்டியை மடிமீது வைத்து விசாலாட்சி முதற் கட்டை சுருதி வைத்துக்கொண்டு மிகவும் சன்னமான அற்புதமான குரலில் தியாகய்யர் செய்த "மாருபல்கு கொன்னா லேமிரா" (மறுமொழி சொல்லாதிருப்ப தென்னடா?) என்ற தெலுங்குக் கீர்த்தனையைப் பாடினாள். கால் விரல்களினால் தாளம் போட்டாள்.

அப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு மோட்டார் வண்டி நின்ற சத்தம் கேட்டது. சேவகனொருவன் ஒரு சீட்டைக் கொண்டுவந்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் கொடுத்தான். அதைப் பார்த்தவுடனே வீரேசலிங்கம் பந்துலு எழுந்து தன் கையிலிருந்த குழந்தை சந்திரிகையை விசாலாட்சியிடம் நீட்டினார். அவள் மேற்படி கீர்த்தனத்தில் பல சங்கதிகளுடன் அனுபல்லவி பாடி முடித்து மறுபடி "மாரு பல்க" என்ற பல்லவி யெடுக்குந் தறுவாயிலிருந்தாள்.

வீரேசலிங்கம் பந்துலு குழந்தையை நீட்டினவுடனே, விசாலாட்சி தன் கையிலிருந்த ஹார்மோனியப் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டாள்.

"என்ன விசேஷம்? யார் வந்திருக்கிறார்கள்?" என்று பந்துலுவை நோக்கி அவருடைய மனைவி கேட்டாள்.

"கோபாலய்யங்காரே வந்து விட்டார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது" என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு மேல் வேஷ்டியை எடுத்துப் போர்த்துக்கொண்டு, மட மட வென்று வெளியே சென்றார்.

இவர் வெளியே போனவுடன், கிழவி விசாலாட்சியை நோக்கி, "அவர்களிருவரும் வந்தால் தமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பார்கள். நாம் சமையலறைக்குப் போய்விடுவோம். இன்று பகலில் கோபாலய்யங்கார் இங்கேயே போஜனம் பண்ணுவார். அவர் பந்துலுவைப் பார்க்க வந்தால், ஒரு வேளை ஆகாரமாவது இங்கு செய்யாமல் போவது வழக்கமில்லை. மேலும் இப்போது அவருக்கு ரஜாக்காலம். ஆதலால் நாம் விருந்துக்கு அழைத்தால் மறுத்துச் சொல்ல வேண்டிய ஹேது இராது. நீயும் இங்கேயே இரு. நாளைக்குப் போகலாம். பந்துலுவுக்கும் எனக்கும் மாத்திரமென்று ஒரு ரஸம், அன்னம், சட்னி, அப்பளம் பண்ணிவைக்கக் கருதியிருந்தேன். இப்போது விருந்து வந்து விட்டது. நேற்று வாங்கிக் கொண்டு வந்த வெங்காயமும் புடலங்காயும் நிறைய மிஞ்சிக் கிடக்கின்றன. வெங்காய சாம்பார், தேங்காய் சட்னி, மைசூர் ரஸம், புடலங்காய் பொடித்தூவல், வடை, பாயஸம் இவ்வளவும் போதும். அப்பளத்தை நிறைய பொரித்து வைப்போம். கோபாலய்யங்காருக்குப் பொரித்த அப்பளத்தில் மோகம் அதிகம். சரி, நீ காலையில் ஸ்நானம் பண்ணிவிட்டுத் தான் வந்திருக்கிறாய். குழந்தையை வேலைக்காரியிடம் கொடுத்தால் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பாள். நீ கைகால் அலம்பிவிட்டு என்னுடன் சமையலுக்கு வா" என்றாள்.

விசாலாட்சி "அப்படியே சரி" என்றாள். மாதர் இருவரும் சமையலறைக்குள்ளே புகுந்தனர். வேலைக்காரியும் குழந்தை சந்திரிகையும் அவ்வீட்டுக் கொல்லையிலிருந்த விஸ்தாரமான பூஞ்சோலையில் மர நிழலில் வீற்றிருந்து பட்சிகளின் விளையாட்டுக்களையும் அற்புதமான பாட்டுகளையும் ரஸித்துக் கொண்டிருந்தனர்.

குழந்தை சந்திரிகைக்கு வயது இப்போது மூன்று தானாயிற்று. எனிலும், அது சிறிதேனும் கொச்சைச் சொற்களும் மழலைச் சொற்களும் இல்லாமல் அழுத்தந்திருத்தமாக வார்த்தை சொல்லும். அந்தக் குழந்தையின் குரல் சிறிய தங்கப் புல்லாங்குழலின் ஓசையைப் போன்றது. குழந்தையின் அழகோ வர்ணிக்குந் தரமன்று. தெய்விக ரூபம்; வனப்பின் இலக்கியம்.

சோலைப் பறவைகளெல்லாம் இக் குழந்தையின் அழகைக் கண்டு மயங்கிக் களிகொண்டு இதன் தலையைச் சுற்றிச் சுற்றி வட்டமிடலாயின. பலவிதக் குருவிகளும், குயில்களும், கிளிகளும், நாகணவாய்களும் தங்களுக்குத் தெரிந்த நாதங்களில் மிகவும் அழகிய நாதங்களைப் பொறுக்கியெடுத்து, இக்குழந்தையின் முன்னே வந்து நின்றொலித்தன. வானரங்கள் தமக்குத் தெரிந்த பாய்ச்சல்களிலும் நாட்டியங்களிலும் மிகவும் வியக்கத்தக்கனவற்றை இக் குழந்தைக்குக் காண்பித்தன.

புன்னகை செய்த மலர்ச் சிறுவாயைச் சந்திரிகை மூடவே யில்லை. வானமும், சூரியனும், ஒளியும், மேகங்களும், மரங்களும், செடிகளும், கொடிகளும், மலர்களும், சுந்தரப் பட்சிகளும் கூடிக் காலை நேரத்தில் விளைவித்த அற்புதக் காட்சியிலும், பறவைகளின் ஒலிகளிலும் சந்திரிகை சொக்கிப்போய் விட்டாள்.

ஒரு சமயம் அவள் தன்னை மறந்து எழுந்து வானத்தை நோக்கி நின்று இரண்டு கைகளையும் கொட்டிக்கொண்டு கூத்தாடுவாள். ஒரு சமயம் பட்சிகளின் ஒலிகளை அனுசரித்துத் தானும் கூவுவாள். இங்ஙனமிருக்கையில், வேலைக்காரி குழந்தையை நோக்கி:- "நீ ஒரு பாட்டுப் பாடு" என்றாள். "அத்தை கற்றுக் கொடுத்த `நந்தலால்' பாட்டுப் பாடலாமா?" என்று சந்திரிகை கேட்டாள்.

"அந்த அம்மா உனக்குத் தாயில்லையா? அத்தையா?" என்று வேலைக்காரி கேட்டாள்.

அதற்குச் சந்திரிகை:- "என் தந்தையும், தாயும் நான் பிறந்தன்றைக்கே செத்துப் போய்விட்டார்கள். இந்த சங்கதி எனக்கு அத்தை சொன்னாள். நடுராத்திரி வேளையாம். பூமி நடுங்கிற்றாம். பேய்க்காற்றடித்ததாம். சோனை மழை பெய்ததாம். எங்கள் ஊர் முழுதும், எல்லா வீடுகளும் இடிந்து விழுந்து, அத்தனை ஜனங்களும் செத்துப்போய் விட்டார்களாம். எங்கள் வீடும் இடிந்து அப்பா, தாத்தா, பாட்டி, என்னுடைய அக்காமார் ஐந்து குழந்தைகள் ஆகிய எல்லாரும் செத்துப் போய்விட்டார்கள். அம்மாவும் அத்தையும் இருந்த குச்சில் மாத்திரம் இடிந்து விழவில்லை. அம்மா வயிற்றுக்குள்ளே நான் இருந்தேன். அப்பால் நான் அந்த இராத்திரியிலேயே பிறந்தேன். நான் பிறந்தவுடனே அம்மா செத்துப் போனாள். இதுவெல்லாம் அத்தை எனக்குச் சொன்னாள். அது முதல் எனக்குப் பசுவின் பாலும் சாதமும் கொடுத்து, அத்தைதான் காப்பாற்றிக்கொண்டு வருகிறாள்" என்று தன் குழந்தை பாஷையில் கால்மணி நேரத்தில் சொல்லி முடித்தது. ஆனால் உடைந்த சொற்களும், நிறுத்தி, நிறுத்தி, யோசித்து, யோசித்து, மெல்ல மெல்லப் பேசுவதும் இருந்தனவேயல்லாது, பொருள் விளங்காததும் உருச் சிதைந்ததுமாகிய குதலைச் சொல் ஒன்றுகூடக் கிடையாது.

இங்ஙனம் அந்த அழகிய குழந்தை பேசிக் கொண்டு வருகையில் அதன் விழிகளிலும் இதழ்களிலும் பொறி வீசியெழுந்த அன்புச் சுடரையும் அறிவுச் சுடரையும் பணிப் பெண் மிகவும் உற்றுநோக்கி கவனித்துக் கொண்டு வந்தாள். அவள் அதன் அழகில் மயங்கிப்போய் அதனை எடுத்து மார்பாரத் தழுவிக் கொண்டு முகத்தோடு முக மொற்றி முத்தமிட்டாள்.

அந்த சமயம் காலை பதினொரு மணியிருக்கும். சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்தப் பணிப் பெண் அவளை முத்தமிடும் செய்கையை இருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். அவ்விருவரில் ஒருவர் அவள்மீது காதல் கொண்டார்.

Wednesday, September 26, 2012

விசாலாக்ஷிக்குக் கிடைத்த உதவி

சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து சரியாக மூன்று வருஷங்களாயின. 1904-ஆம் வருஷத்தின் இறுதி நடைபெற்றது. அப்போது சென்னப்பட்டணத்தில் 'சுதேசமித்திரன்' பத்திராதிபராகிய ஜீ. சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக்கப்பால் பம்பாயில் நடைபெறப் போகிற 'காங்கிரஸ்' என்ற பாரத ஜன சபைக்கொரு பிரதி நிதியாகச் செல்ல வேண்டுமென்ற கருத்துடன் யாத்திரைக்கு வேண்டிய உடுப்புகள், தின்பண்டங்கள் முதலியன தயார் செய்து கொண்டிருந்தார்.

அக் காலத்தில் திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் ஜீ. சுப்பிரமணிய அய்யர் மகா கீர்த்தி பெற்று விளங்கினார். அவருக்குக் கொடிய ரோகமொன்றினால் உடம்பெல்லாம் முகமெல்லாம் சிதைந்து முள்சிரங்குகள் புறப்பட்டிருந்தன. இருந்தாலும் நிகரற்ற மனோதைரியத்துடன் அவர் தேசப் பொதுக் காரியங்களை நடத்தி வந்தார். மேற்கூறிய 1904 டிஸம்பர் மாசத்திடையே ஒரு நாட் காலையில் அவர் தம் வீட்டு மேடையின் மேல் தம்முடைய விஸ்தாரமான புஸ்தகசாலையினருகே ஒரு சாய் நாற்காலியின்மீது சாய்ந்துகொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார்.

அவர் முன்னே ஒரு சுமங்கிலிப் பெண் - அவருடைய இளைய மகள் - ஒரு பிரம்மாண்டமான ஊறுகாய்ப் பரணியைக் கொண்டு வைத்தாள்.

"இதில் என்னம்மா, வைத்திருக்கிறது?" என்று அய்யர் கேட்டார்.

"நெய்யிலே பொரித்த எலுமிச்சங்காய் ஊறுகாய்; நல்ல காரம் போட்டது" என்று மகள் சொன்னாள்.

"இதையெல்லாம் எப்படிச் சுமந்துகொண்டு போகப்போகிறோம்? அந்த வேலைக்காரனோ பெரிய குருட்டுமுண்டம்" என்று அய்யர் முணுமுணுத்தார்.

இதற்குள், மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்ற மகள் திரும்பி வந்து, "அப்பா, வாயிலிலே ஒரு பிராமண விதவை ஒரு சிறு குழந்தையுடன் வந்து நிற்கிறாள். ஏதோ அவசர காரிய நிமித்மாக உம்மை உடனே பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறாள்" என்றாள்.

"அவளுக்கு எத்தனை வயதிருக்கும்?" என்று ஜீ. சுப்ரமணிய அய்யர் கேட்டார்.

"இருபது வயதிருக்கலாமென்று தோன்றுகிறது" என்று மகள் சொன்னாள்.

"சரி. ஒரு நாற்காலியைக் கொணர்ந்து என் எதிரே போடு; அந்தப் பெண்ணை வரச் சொல்" என்று அய்யர் சொன்னார்.

மகள் அங்ஙனமே ஒரு நாற்காலி எடுத்துக்கொண்டு வந்து அவரெதிரே போட்டாள்; அப்பால் கீழே சென்றாள். சில க்ஷணங்களுக்குள்ளே, நம்முடைய விசாலாக்ஷி குழந்தை சந்திரிகையுடன் அந்த மேடைக்கு வந்து ஜீ. சுப்ரமணிய அய்யருக்கெதிரே போட்டிருந்த நாற்காலியின்மேல் உட்கார்ந்தாள்.

எந்த விசாலாக்ஷி? சென்ற அத்தியாயத்தில் பூகம்பத்திலே தப்பிப் பிழைத்த விசாலாட்சி. அங்ஙனமே பூகம்பத்தில் பிழைத்த சந்திரிகை என்ற குழந்தையுடன் வந்து ஜீ. சுப்பிரமணிய அய்யர் முடியசைப்பால் உணர்த்திய குறிப்பின்படி, அவரெதிரே ஆசனத்தில் அமர்ந்தாள். "எந்த ஊரம்மா?" என்று அய்யர் கேட்டார்.

"பொதியை மலைச்சாரலில் குற்றாலத்துக்கருகே வேளாண்குடி என்ற கிராமம்" என்று விசாலாட்சி சொன்னாள்.

"ஓஹோஹோ! மூன்று வருஷங்களுக்கு முன்பு ஏறக்குறைய இதே மாசத்தில் மேற்படி கிராமத்தில், சூத்திரத் தெருக்களெல்லாம் தப்பிப் பிழைக்க, அக்ரஹாரம் மாத்திரம் பூகம்பத்தில் அழிந்து போனதாகக் கேள்விப்பட்டேன்; அதே வேளாண்குடிதானா?" என்று அய்யர் கேட்டார்.

விசாலாக்ஷி "ஆம்" என்றாள்.

"நீ மிகவும் யௌவனமுடையவளாகவும் அழகுடையவளாகவும் இருக்கிறாயே! உனக்கு இந்தக் கைம்பெண் நிலைமை நேர்ந்து எத்தனை காலமாயிற்று?" என்று அய்யர் கேட்டார்.

"பதினைந்து வருஷங்களாயின" என்று விசாலாக்ஷி சொன்னாள்.

"உனக்கு இப்போது எத்தனை வயது?" என்று அய்யர் கேட்டார்.

"இருபத்தைந்து" என்று விசாலாட்சி சொன்னாள்.

"பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையாய் விட்டாயா?" என்று அய்யர் கேட்டார்.

"ஆம்" என்று விசாலாட்சி சொன்னாள்.

அதைக் கேட்டவுடனே தமது சொந்த மகளொருத்தி இளம் பிராயத்திலே விதவையானதும், பிறகு தாம் அவளுக்குப் பம்பாயிலே சென்று தென்னாட்டு வைதிக பிராமணரொருவருக்கு விவாகம் செய்து கொடுத்ததும், அம் மகள் தன் கணவனுடன் நீடு சுகித்து வாழும் பாக்கியம் பெறாமல் மிக விரைவிலே மடிந்ததும், தம்முடைய தர்ம பத்தினி உயிர் துறந்ததும் - ஆகிய இச் செய்திகளெல்லாம் ஜீ. சுப்பிரமணிய அய்யரின் ஞாபகத்துக்கு வர, அப்போது, சிங்கத்துக்கும் இடிக்கும் அஞ்சாத அவருடைய வீர நெஞ்சம் இளகி, அவர் பச்சைக் குழந்தைபோல் விம்மி விம்மி அழத் தலைப்பட்டார். சில க்ஷணங்களுக்குள்ளே தம்மைத் தாம் தேற்றிக் கொண்டு, ஜீ. சுப்பிரமணிய அய்யர் விசாலாட்சியை நோக்கி, "நீ இங்கே வந்ததன் நோக்கம் யாது?" என்று கேட்டார்.

"என்னைத் தக்க கணவனொருவனுக்கு வாழ்க்கைப்படுத்திக் கொடுக்க வேண்டும். என் கையில் ஒரு கொழும்புக் காசுகூடக் கிடையாது. ஆதலால், என் கணவன் பணமுடையவனில்லா விட்டாலும் நல்ல படிப்பும் மாசந்தோறும் கொஞ்சம் பொருள் சம்பாதிக்கும் திறமும் உடையவனாக இருக்க வேண்டும். இந்தக் குழந்தையும் என்னோடுதான் இருக்கும்" என்றாள்.

"இந்தக் குழந்தை ஏது?" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

"இது என் தமையனாரின் குழந்தை. வேளாண்குடி அக்ரஹாரம் முழுமையும் பூகம்பத்தில் அழிந்தபோது, நானும் இக்குழந்தையின் தாயும் மாத்திரம் மழைக்கும் காற்றுக்கும் அந்த பூகம்பத்துக்கும் இரையாகாமல் உயிர் தப்பினோம். பூகம்பமும் புயற் காற்றும் பெருமழையும் அடங்கிச் சிறிது நேரத்துக்கப்பால் இக் குழந்தை பிறந்தது. இதைப் பெறும் கடமை தீர்ந்தவுடன் தாயும் பரலோகம் போய்விட்டாள். சாகும்போது இதன் காவலை என்மீது சுமத்திக் கட்டளையிட்டாள்" என்று விசாலாக்ஷி சொன்னாள்.

"இந்த மூன்று வருஷங்களாக நீ ஆகாரத்துக்கு என்ன செய்கிறாய்?" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

"செம்புப் பிச்சை; உவாதான மெடுத்து வயிறு வளர்த்து இந்தக் குழந்தையையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்" என்றாள்.

ஜீ. சுப்பிரமணிய அய்யர் உடனே தம்முடைய கைப்பெட்டியைத் திறந்து நூறு ரூபாய் நோட் ஒன்றை எடுத்து விசாலாக்ஷி கையில் கொடுத்தார். விசாலாக்ஷி அதனை எழுந்து நின்று வாங்கி, இரண்டு கண்களிலும் ஒற்றிக்கொண்டு, தன் புடவைத் தலைப்பில் முடித்து இடுப்பிலே சொருகிக் கொண்டாள்.

"சரி, அம்மா, நீ போய் வா" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் சொன்னார். அப்போது விசாலாக்ஷி சொல்லுகிறாள்:- "ஐயா, நான் தங்களைப் பிதா ஸ்தானமாக பாவித்துத் தங்களிடம் பணம் வாங்க உடம்பட்டேன். எனிலும், நான் இங்கு வந்தது தங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு போவதற்கன்று என்பதைத் தாங்கள் மறக்கக் கூடாது; கணவனை வேண்டி உங்களிடம் வந்தேன்" என்றாள்.

அது கேட்டு, ஜீ. சுப்பிரமணிய அய்யர்:- "அந்தக் காரியம் என்னால் செய்து கொடுக்க முடியாது" என்றார்.

"தங்களைத் தவிர எனக்கு வேறு புகலுமில்லை" என்று விசாலாக்ஷி வற்புறுத்தினாள்.

"என்னால் சாத்தியமில்லையே! நான் என்ன செய்வேன்?" என்றார் அய்யர்.

"நீங்கள் தயவு வைத்தால் சாத்தியப்படும்" என்று விசாலாக்ஷி சொன்னாள். "உன்னிடம் நல்லெண்ணமில்லாமலா, நீ கேட்காமலே உனக்கு நூறு ரூபாய் கொடுத்தேன்?" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

"அவ்வளவு தயவு போதாது. இன்னும் அதிக தயவு செலுத்த வேண்டும்" என்று விசாலாக்ஷி மன்றாடினாள்.

ஜீ. சுப்பிரமணிய அய்யர் தலையைச் சொரிந்தார். சில க்ஷணங்களுக்கப்பால் விசாலாக்ஷியை நோக்கிச் சொல்லுகிறார்: - "ராஜமகேந்திரபுரத்தில் என்னுடைய சிநேகிதர் ஒருவர் இருக்கிறார். அவருடைய பெயர் வீரேச லிங்கம் பந்துலு. அவர் விதவைகளுக்கு விவாகம் செய்து வைப்பதில் மிகவும் சிரத்தையுடன் உழைத்து வருகிறார். உன் வசம் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கிறேன். அதை அவரிடத்தில் கொண்டு கொடு. அவர் உனக்கு வேண்டிய சௌகரியம் செய்து கொடுப்பார்" என்றார்.

"சரி" என்றாள் விசாலாக்ஷி.

உடனே, ஜீ. சுப்பிரமணிய அய்யர் தம்முடைய மேஜையின் மேல் வைத்திருந்த மணியைக் குலுக்கினார். கீழேயிருந்து அவருடைய மகள் வந்து, "என்ன வேண்டுமப்பா?" என்று கேட்டாள்.

"அந்த வேலைக்காரப் பயல் இன்னும் வரவில்லையோ?" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் உறுமினார்.

"அவன் பட்டணத்துக்கன்றோ போயிருக்கிறான், ஸ்மித்ஷாப்பிலே போய் மருந்து வாங்கிக் கொண்டுவர? இனி அவன் பன்னிரண்டு மணிக்கு மேலேதான் வருவான். உமக்கென்ன வேண்டும்?" என்றாள்.

"என்னுடைய மேஜை மேலே, பேனா மைக்கூடு வைத்திருக்கிறேன். மேஜை திறந்துதான் இருக்கிறது. அதற்குள்ளே வலப் பக்கத்து அறையில் கடிதமெழுதுந் தாளும் உறைகளும் கிடக்கின்றன. ஒரு தாளும் ஒரு உறையும் கொண்டுவா. மையொத்தும் தாளையும் எடுத்து வா. அடியில் வைத்தெழுத ஒரு தடிப் புஸ்தகம் கொண்டு வா" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் சொன்னார்.

அவர் வேண்டிய சாமான்களை யெல்லாம் மகள் கொண்டு வந்து கொடுத்தாள். ஜீ. சுப்பிரமணிய அய்யர் ஒரு கடிதமெழுதி உறைக்குள்ளே போட்டு, அதை மகளிடம் கொடுத்து "உறையைச் சரியாக ஒட்டிக் கொண்டுவா" என்றார். அவள் அதை ஒட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள். கொடுத்துவிட்டு, மகள் மறுபடி பேனாவையும் மைக்கூட்டையும் மையொத்தும் தாளையும் கொண்டு மேஜையில் வைத்துவிட்டுக் கீழே சென்றுவிட்டாள். ஜீ. சுப்பிரமணிய அய்யர் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே விசாலாட்சியை நோக்கி, "உனக்குத் தெலுங்கு தெரியுமா?" என்று கேட்டார். "தெரியும்" என்றாள் விசாலாட்சி.

"எங்கே படித்தாய்?" என்று கேட்டார்.

"எங்களூரில் நானிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தெலுங்கப் பிராமணரொருவர் இருந்தார். நான் சிறு குழந்தைப் பிராய முதலாகவே அந்தக் குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாகப் பழகிக் கொண்டு வந்தபடியால் எனக்குத் தெலுங்கு பாஷை தெலுங்கர்களைப் போலவே பேச வரும்" என்றாள்.

"சரி. உனக்குக் கூடிய சீக்கிரத்தில் நல்ல மணமகனுடன் விவாகம் நடைபெறும். நீங்கள் தம்பதிகளிருவரும் நெடுங்காலம் இன்புற்று வாழக் கடவீர்" என்று சொல்லி, அய்யர் அவளிடம் காயிதத்தைக் கொடுத்தார்.

அவள் அக் கடிதத்தை வாங்கிக் கண்ணிலே ஒற்றிக் கொண்டு மடியில் வைத்துக் கட்டிக் கொண்டாள். பிறகு ஜீ. சுப்பிரமணிய அய்யரை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றனள். அக் குழந்தையும் ஜீ.சுப்பிரமணிய அய்யரை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே போயிற்று.

Tuesday, September 25, 2012

பூகம்பம் (சந்திரிகையின் கதை)

பொதியை மலைச் சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புகள். எனவே, காலையில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணீயமான பக்ஷிகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கும்.

இந்த ஊரில் மற்ற வீதிகளினின்றும் ஒதுக்கமாக, மேற்றிசையில், நதிக்கருகே ஓர் அக்ரஹாரம், அதாவது பிராமணர் வீதி இருந்தது. அந்த அக்ரஹாரத்தில் குழந்தைகளெல்லாம் எப்போதும் பக்ஷிகளின் நாதங்களுக்கிடையே வளர்ந்தது பற்றியோ, வேறு எந்தக் காரணத்தாலோ, மிகவும் இனிய குரலுடையனவாயிருந்தன. அக் குழந்தைகள் - விசேஷமாகப் பெண் குழந்தைகள் - பேசும்போது, சாதாரணமாக நம்மைப் போலவே, மனுஷத் தமிழ் பாஷையே பேசுமெனினும், அந்த பாஷையைக் குயில்கள் போலவும், கிளிகள் போலவும் நாகணவாய்ப் புட்கள் போலவும், அற்புதமான குரலில் பேசின.

அந்த அக்ரஹாரத்தின் மேலோரத்திலே கிழக்கைப் பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. கோயிலுக்கெதிரே புல் ஏராளமாக வளர்ந்து கிடக்கும். அங்குப் பசுக்களும் ஒரு சில கழுதைகளும் மேய்ந்து கொண்டிருக்கும்.

அல்லது, சில பசுக்கள் கிருஷ்ணன் சந்நிதிக்கெதிரே படுத்துக் கொண்டு சுவாமியை நோக்கி ஜபம் பண்ணிக் கொண்டிருப்பதுபோல் அசைபோட்டுக் கொண்டிருக்கும். அவற்றின்மீது காக்கைகள் வந்து உண்ணிகளைக் கொத்தி இன்புறுத்தும். சில சமயங்களில் கண்ணோரத்தைக் கொத்துவது போல் விளையாடி மாட்டுக்குப் பொழுது போகச் செய்துகொண்டிருக்கும். இதை யெல்லாம் மரக்கிளைகளின் மீதுள்ள பக்ஷிகள் பார்த்து வியப்புரை கூறிக் கொண்டிருக்கும்.

அன்புக்கும் அமைதிக்கும் சாந்திக்கும் அழகுக்கும் இலக்கியமாகத் திகழ்ந்தது அவ் வேளாண்குடியூர் அக்ரஹாரம். அங்கு, பெண்மக்கள் எல்லாரும் மகாசுந்தரிகள். ஆண்மக்கள் மிகவும் நல்ல குணமுடையோர். ஆனால் பெரும்பாலும் பரம ஏழைகள். பூர்வீகச் சொத்து-நிலம், தோட்டம் முதலியன - எல்லோருக்கும் சிறிது சிறிதுண்டு. ஆனால், அதிலிருந்து வரும் வரும்படி வெறுமே போஜனத்துக்குக் கூடக் காணாது. இதில் வேஷ்டிகள், புடவைகள், ரவிக்கைகள், பாவாடைகள். குடுமிக் கலியாணம், பூணூல் கலியாணம், விவாகங்கள், ருது ஸ்நானங்கள், ருது சாந்திகள், சீமந்தங்கள். பல பல பண்டிகைகள், உற்சவங்கள், விழாக்கள் என்பன ஓயாமல் நிகழுமாதலால், அவ்வூர் கிருஹஸ்தர்கள், மேன்மேலும் தம் நிலம் முதலியன சுருங்கவும் வறுமை மேன்மேலும் வளரவும், ஏக்கம் பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், வயது முதிர்ந்தோரிடையே இத்தனை ஏக்கமும் மனக்குறையும் குடிகொண்டிருந்தன என்ற செய்தி அவ்வூர்க் குழந்தைகளுக்குத் தெரியாது; பக்ஷிகளுக்குத் தெரியாது, கோயிலெதிரே எப்போதும் செழுமையாக வளர்ந்த புற்றரைகளில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கும், கழுதைகளுக்கும் தெரியாது. இவை எப்போதும் மகிழ்ச்சியிலும், ஆரவாரத்திலும், பாட்டிலும், ஆனந்தக் களியிலும் மூழ்கிக் கிடந்தன.

இந்த அக்ரஹாரத்தில் மற்றெல்லாப் பிராமணர்களைக் காட்டிலும் அதிக ஏழையான மகாலிங்கையர் என்பவர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பம் மிகப் பெரிது. வீடு மிகச் சிறிது. அவருடைய கிழத் தாய் தந்தையர் இருவர்; விதவையான தங்கை ஒருத்தி. சுமார் முப்பது வயதுள்ள மனைவி ஒருத்தி. அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆறாவது ப்ரஸவம் நெருங்கிய சமயம்.

இத்தனை பேருக்கும் ஆகாரம் வேண்டுமே? மகாலிங்கையருக்குப் பூர்வ சொத்துக் கிடையாது. இளமையும், ஊக்கமும், எப்படியேனும் பணம் சம்பாதிக்கலா மென்ற நம்பிக்கையும் அவரைப் விட்டுப் பிரிந்து நெடுங் காலமாய் விட்டது. அவருக்குச் சுமார் நாற்பது வயதுக்கு மேலாகவில்லை. அதற்குள்ளே குழந்தைகளின் தொகை வலியாலும், மனைவியின் வாய் வலியாலும், தாய் தந்தையரின் நோய் வலியாலும், விதவைத் தங்கையின் இளமை வலியாலும் மேற்படி மகாலிங்கையர் மனத்துயர் பெருகித் தலை மயிரெல்லாம் அன்னத் தூவி போல் நரைத்துக் கூனிக் குறுகி மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழி வீழ்ந்து முகம் சுருங்கித் திரை கொண்டு, இளமையிலே பாராட்டிய சிங்கார ரஸமிகுதியால் மேக நோய் கொண்டு, முகத்திலும் முதுகிலும் தோட்களிலும் பரந்த மேகப் படைகளுடையவராய் விளங்கினார்.

இப்படியிருக்கையில் ஒரு மார்கழி மாதத்து இரவில், வானம் மைபோல் இருண்டிருந்தது. நக்ஷத்திரங்களெவையும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கிராமத்தார் எல்லாரும் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கிடந்தார்கள். வெளியே பெருமழையும் சூறைக் காற்றும் மிகவும் உக்ரமாக வீசத்தொடங்கின. இரண்டு க்ஷணத்துக்கு ஒருமுறை, உலகம் தகர்ந்து விடச் செய்வன போன்ற இடியோசைகள் செவிப்பட்டன. மரங்கள் ஒடிந்து விழும் ஒலி கேட்டது. தோப்புகளெல்லாம் சூறைபோகும் ஒலி பிறந்தது. பக்கத்துக் குன்றுகள் ஒன்றுக்கொன்று மோதிச் சிதறுவன போன்ற ஓசை தோன்றிற்று.

அக்ரஹாரத்தில் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கியிருந்த ஜனங்கள் இன்றுடன் உலகம் முடிந்து போய்விட்டது என்று தம் மனதில் நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.

குழந்தைகளெல்லாம் பயமிகுதியால் கோ கோ என்று அலறின. மாதர்கள் புலம்பினர். ஆண்மக்கள் விம்மினர். சூறைக்காற்றின் ஆர்ப்பு மிகுதிப்பட்டது.

இப்படியிருக்கையில் பூகம்பம் தொடங்கிற்று. அந்த அக்ரஹாரத்திலுள்ள வீடுகளெல்லாம் பழைய வீடுகள். அத்தனை வீடுகளும் சிதறிப் போயின. அத்தனை ஜனங்களும் மடிந்து போயினர்.

மகாலிங்கையர் வீட்டு வாயிற் புறத்திலிருந்த குச்சிலொன்று மாத்திரம் விழவில்லை. வீட்டு இரேழியில் கூடியிருந்த கிழவர், கிழவி, மகாலிங்கையர், அவருடைய ஐந்து பெண் குழந்தைகள் - எல்லார்மீதும் வீடு விழுந்து, அவர் களத்தனை பேரும் பிணங்களாகக் கிடந்தனர். வாயிற்குச்சிலில் பிரஸவ வேதனையிலிருந்த மகாலிங்கையருடைய மனைவியும் இவளுக்குத் துணையாக அவருடைய விதவைத் தங்கையு மிருந்தனர்.

இரவு சுமார் ஏழு மணிக்குத் தொடங்கிய சூறைக்காற்றும் மழையும், காலை நான்கு மணி சுமாருக்கு, பூகம்பத்துடன் முடிவு பெற்றன. அரை மணி நேரத்துக்கெல்லாம் உலகம் அமைதி பெற்றுவிட்டது. மறுநாள் பொழுது விடிந்தது. விதவைத் தங்கை - அவள் பெயர் விசாலாட்சி - வெளியே வந்து பார்த்தாள். எல்லா வீடுகளும் விழுந்திருந்தன. எங்கும் மனித குடல்களும், மிருக, பட்சிகளின் உடம்புகளும் பிரேதங்களாக விழுந்து கிடந்தன. முழுக்காட்சியும் அவள் பார்க்க நேரமில்லை. காற்றினாலும் மழையினாலும் மோதுண்டு வீதியில் வந்து கிடந்த பிரேதங்களை மாத்திரமே அவள் கண்டாள். இடிந்த வீடுகளுக்குள்ளே செத்துக்கிடக்கும் ஜனங்களை அவள் காணவில்லை.

எனினும். தன் வீட்டில் எல்லாரும் செத்தது அவளுக்குத் தெரியுமாதலால், மற்ற வீடுகளிலும் அப்படியே நடந்திருக்க வேண்டுமென்றும் அதுகொண்டே தெருவில் ஆட்களைக் காணவில்லை யென்றும் அவள் ஊகித்துக் கொண்டாள். அப்பொழுது மீளவும் அவளுடைய மனதில், சென்ற பயங்கரமான இரவில் நிகழ்ந்த பயங்கரமான செய்திகள் நினைப்புறலாயின. பூகம்பம் தோன்றினவுடனே, மகாலிங்கையருடைய பிதாவாகிய கிழவர், "ஐயையோ, பூமி ஆடுகிறதே! நாமெல்லோரும் வாயிற் புறத்திலுள்ள குச்சிலுக்குப் போய் விடுவோம். அது தான் இவ் வீட்டில் சற்றே உறுதியான இடம். என்னை அங்கே கொண்டு விடுங்கள்" என்று அலறினார். அந்தச் சத்தம் மாத்திரம் விசாலாட்சியின் செவியிற் பட்டது. அப்புறம் நடந்த பேச்சொன்றும் அவள் செவியிற் படவில்லை. வாயிற்குச்சிலுக்குள் வெளித் திண்ணை வழியாகத்தான் புகலாம்; வீட்டுக்குள்ளிருந்தபடியே அங்கு வர வழியில்லை. எனினும், ஒரு சாளரப் பொந்து வழியாக அந்தக் கிழவருடைய பேரோலம் மாத்திரம் புயற் காற்றொலியையும் மிஞ்சி அவளுடைய செவியிற் பட்டது.

ஆனால், 'அங்ஙனம் அவர்கள் குச்சிலுக்குள் வருவது மாத்திரம் சாத்தியமில்லை' யென்பதை அவள் உடனே ஊகித்துக் கொண்டாள். ஏனெனில், உள்ளே யிருந்தவர்கள் வீட்டு வாயிற்கதவைத் திறந்தன்றோ, திண்ணையிலேறி அதன் வழியாகக் குச்சிலுக்குள் வரவேண்டும்? வாயிற் கதவைத் திறந்த மாத்திரத்திலே சப்த மேகங்களும், ஊழிக்காற்றும் வீட்டுக்குள் புகுந்து விடுமன்றோ? ஆதலால், அவர்கள் வெளியேற வில்லையென்று நினைத்துக் கொண்டாள். ஓரிரண்டு க்ஷணங்களில் திடீரென்று உள் வீடெல்லாம் இடிந்து விழுந்த ஒலியும், அங்கிருந்தோர் எல்லாம் கூடி யலறிய பேரொலியும் அவள் செவியிற் பட்டன. எல்லோரும் செத்தார்கள் என்று நிச்சயித்துக் கொண்டாள். தானிருந்த குச்சிலும் விழுமென்று அவள் மிகவும் எதிர்பார்த்தாள். அது விழவில்லை. அதற்குள்ளே பூகம்பம் நின்று போய்விட்டது. சிறிது நேரத்துக் கெல்லாம் புயற்காற்றும் மழையும் அடங்கிப் போயின.

இச் செய்திகளை யெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு விசாலாட்சி தன்னைச் சூழ இடிந்து கிடக்கும் வீடுகளையும் ஒடிந்து கிடக்கும் மரங்களையும் பார்த்து நிற்கையிலே, குச்சிலுக்குள்ளிருந்து "குவா! குவா!" என்ற சத்தம் வந்தது.

உள்ளே போய் பார்த்தாள். அண்ணன் மனைவியாகிய கோமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து கிடந்தது. விசாலாட்சி அதற்கு வேண்டிய சிகிச்சைகளெல்லாம் செய்து கொண்டிருக்கையில், கோமதிக்கு மரணாவஸ்தை நேர்ந்து விட்டது. அவள் சாகும்போது:- "விசாலாட்சி! விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடனிருக்க மாட்டேன். என் பிராணன் போகுமுன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்து கொள். விதவா விவாகம் செய்யத் தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டு விட்டு, தைரியத்துடன் சென்னப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ளாவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்குச் சந்திரிகை என்று பெயர் வை" என்றாள்.

விசாலாட்சி 'சரி' என்றாள். கோமதியின் உயிர் பரலோகஞ் சென்று விட்டது.

Monday, September 24, 2012

தர்மலோகம் (ஞானரதம்)

சில தினங்களின் பிறகு, ஒரு நாள் ஞான ரதத்தில் ஊர்ந்து தர்மலோகத்திற்குப் போனேன். கந்தர்வ லோகத்திற்குப் போனவுடன் தேரிலிருந்து இறங்கி யதேச்சையாகத் திரிந்ததுபோல, இங்கும் சஞ்சரிக்கலாமென்று கருதித் தேரை விட்டு இறங்கினேன். அப்போது, தெளிந்த வதனமும், அகன்ற அடங்கிய விழிகளும், கருமையாகச் சுருள்கள் அமைந்த தாடியும், வலக்கையிலே ஒரு சுவடியும் கொண்ட ஒரு வாலிபன் என் முன்னே வந்து, "தேரை விட்டிறங்க வேண்டாம். அதிலேயே இரு; நானும் ஏறிக் கொள்ளுகிறேன். உன்னுடன் வந்து உனக்கு இந்நாட்டின் விஷயங்களைக் காண்பிக்கவேண்டும் என்று எனக்குத் தர்மதேவதையின் கட்டளை" என்றான்.

நான் அவனைக் கண்டவுடனே, அவனிடம் எனக்கு ஒரு விதமான அச்சமும் மதிப்பும் ஜனித்தன. அவனைப் போன்ற துணைவன் இருந்தால் பல அரிய விஷயங்கள் தெரிவதுடன், நற்கதியும் பெறலாம் என்று எனக்கு எக்காரணத்தாலோ மிக நிச்சயமாகத் தோன்றியது. அந்த வாலிபன் தேர்மீது வந்து ஏறிக்கொண்டான். மறுபடியும் அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தேன். ஆகா! என்ன அற்புத வடிவம்! அவன் தேகத்திலே ஒரு சுருங்கல் கிடையாது. ஒரு கோணல் இல்லை. அவனது அங்கங்களெல்லாம் தத்தம் இயற்கையளவுக்குச் சிறிதும் மாறுபடாமல் கணித தேவதையால் அமைக்கப்பட்டன போன்று விளங்கின. உடல் முழுவதும் ஒரு பிரகாசம் காணப்பட்டது. அது கந்தர்வ லோகத்தவரிடம் காணப்பெற்ற மயக்குந் தன்மை கொண்ட 'லாகிரி'ப் பளபளப்பன்று; இயற்கையின் திகழ்ச்சி. பிரகிருதியிலே, மலர், செடி முதலிய தத்தம் கடைமைகளை நேர்மையுறச் செலுத்தும் பொருள்களிலே, ஓர் விதமான திகழ்ச்சி தெரியவில்லையா? அவ்வகைப் பட்டது. சாஷ்டாங்கமாக அவன் பாதத்தில் விழுந்து வணங்கினேன். அவன் "தர்மம் சர," (அறத்தை ஒழுகு) என்று ஆசீர்வாதம் செய்தான்.

பின்பு, "மகனே, என் பெயர் தபஸ். நான் இந் நாட்டில் வழி காட்டும் தொழில் உடையவன். அவரவர்கள் எவ்வெத் தருமங்களைக் காண விரும்புகிறார்களோ அவ்வவற்றைக் காட்டுவேன்.

திமிங்கல முதல் புழுவரை ஒவ்வோருயிர்க்கும் அததற்குரிய தருமங்கள் உண்டு. நட்சத்திரங்கள் சூரிய சந்திரன் முதலாக அணுக்கள் வரை ஒவ்வொரு வஸ்துவுக்கும் உரிய தர்மங்களுண்டு. மேலும், ஒன்றிற்கே காலதேச வர்த்த மானங்களுக்குத் தக்கபடி தருமங்கள் மாறுபடுகின்றன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு வர வேண்டுமானால், பதினாயிரம் வருஷங்கள் போதா. ஆதலால், நீ எந்த தர்மங்களை முக்கியமாக அறிய விருப்பமுள்ளது என்று குறிப்பிடுவாயோ, நான் அவற்றை மட்டும் உனக்குக் கொண்டு காட்டுவேன். வேறு பல விஷயங்களையும் நீ பொதுப்படையாகப் பார்த்துக்கொண்டு போகலாம்" என்று கூறினான். அதற்கு நான், "முனிவரே, நான் பிராமண தருமத்தையும், க்ஷத்திரிய தருமத்தையும் அறிய விரும்புகிறேன்" என்றேன்.

"நல்லது, என்னுடன் வா; பிரதமத்திலே அறக்கடவுளின் ஆலயத்தில் போய் வழிபாடு செய்துவிட்டு வரலாம்" என்றான். இருவரும் உடன் சென்றோம்.

இடைவழியில் என்ன பொருள்கள் உள்ளதென்பதைப் பார்க்கக்கூட முடியாதபடி கண் மூடித் திறக்கு முன்பாகத்தூய வெண்மை நிறங்கொண்ட ஸ்படிகத்தால் மிக விசாலமாகக் கட்டப்பட்ட ஓர் ஆலயத்தினருகே வந்து சேர்ந்தோம். பின்புறத்திலிருந்திறங்கித் தபோமுனி முன் செல்ல, நான் அவரைத் தொடர்ந்து, அவ்வாலயத்துக்குள்ளே இருவரும் புகுந்தோம். "ஜயதர்ம ராஜாய, ஜயயமாய, ஜய வைவஸ்வதாயா, ஜய ஸூர்ய தேஜஸ்வினே, ஜய மஹோக்ராய, ஜய மஹாசாந்தாய," என்ற ஒலிகள் கேட்டன. என் மனம் திடுக்கிட்டது. கை கால்கள் நடுங்கின. உடம்பெல்லாம் வெயர்த்து விட்டது. பதறிப் போய், "முனிவரே, எங்கே அழைத்துச் செல்லுகிறீர்?" என்று கேட்டேன். "யம சன்னிதானத்துக்கு" என்றார். "ஏன்? ஐயா, எதற்கு?" என்று அலறினேன். முனிவர் என் பக்கமாகத் திரும்பி என் மெய்யைத் தடவித் தமது விசாலமான அருள் விழிகளின் பார்வையை எனது கண்களிலே செலுத்தி, "அஞ்சாதே, அறத்துக்கு அஞ்சலாமா?" என்றனர். எனது பொறுத்தலரிய பயம் தெளிந்து விடும்போல் இருந்தது. அதற்குள் மூர்ச்சை போய் விழுந்து விட்டேன். அப்போடு சில கனவுகள் கண்டேன்.

"ஆ! என்ன தீய கனவுகள்! பெரிய பெரிய புழுக்கள் வந்து என்னை விழுங்குவது போலிருந்தது. ஐயோ! என்ன பாதகம் செய்தோ நரகத்தில் வந்து விழுந்துவிட்டேன். நரகத்தில் நெருப்பால் சுடுவார்கள், அங்கத்தையெல்லாம் வெட்டி வெட்டிச் சித்திரவதை செய்வார்கள் என்று சொன்னார்களே! அப்படி யெல்லாம் செய்தாலுங்கூட நான் பொறுத்திருப்பேனே, பொறுக்க முடியாத அசுசி கொண்ட உயிர்களுக்கும் பொருள்களுக்குமிடையே என்னைப் போட்டு இம்சை செய்கிறார்களே! ஈசா, அசுத்தமான எண்ணங்கள் எண்ணியதற்கும், அசுத்தமான வஸ்துக்களை விரும்பியதற்கும் இதுவா தண்டனை! ஐயோ! அந்த நாளில் தெரியாமற் போய்விட்டதே. உற்றார், நண்பர்கள், அயலார், எல்லோரும் அசுத்த சிந்தைகளில் ஆழ்ந்திருந்தபடியால், அவர்களுடைய சகவாசத்தாலல்லவோ, நானும் கெட்டுப்போய்விட்டேன். எனக்குத் தெரியாதே," என்று கூவினேன்.

"அதோ, அதோ, அதோ பார்! எனக்குத் தெரிந்தவர்களாக எத்தனையோ பேர் வந்து நான் படும்பாடுகளையே அனுபவித்துக் கொண்டு கிடக்கிறார்கள். சிலர் என்னைக் கண்டு வெட்கமடைகிறார்கள். ஓர் பிரமாண்டமான சங்கு பூச்சியின் கொம்புகளின் கீழ் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். சிலர் என்னைக் கண்டு அழுகிறார்கள்.

அப்பப்பா! நத்தை, நண்டு, பாச்சை, பல்லி - எல்லாம் பெரிய பெரிய ஆகிருதி - இவற்றினிடையேயும், இவற்றைக் காட்டிலும் அசுத்த வஸ்துக்களினிடையேயும், நான் கண்ட அனுபவங்களை இங்கே எழுதவும் கூச்சமுண்டாகிறது. மானிடர்களே! அசுத்த எண்ணங்களை நீக்குங்கள். அன்பினால் சொல்லுகிறேன். அசுசியான சிந்தனைகள் வேண்டாம் ஈசா, அனலிலே போடும், என்னை அனலிலே போடும். எனக்கு இந்த நிலை போதும், போதும். இனிப் பாவம் செய்யமாட்டேன்" என்று கூறி விம்மி விம்மி அழுதேன்.

"பின் பார்க்கிறேன். என்னை மற்றோரிடத்தில் போட்டிருந்தார்கள். என் மேலெல்லாம் நோய்கள் தோன்றி இருந்தன. கரிய குஷ்டம், யானைக்கால், பக்ஷவாதம், க்ஷயம், குன்மம்; ஒன்றா, இரண்டா? உடலிலே பிரியங் கொண்டு அதன் போஷணைக்காக அதர்மங்கள் செய்யும் மூடர்களே, உங்களை எச்சரிக்கின்றேன். ஐயோ! ஏன் கெடுகிறீர்கள்?"

சிறிது நேரம் கழிந்தது. நெருப்புக்குள்ளே என்னைச் சில பிசாசுகள் கொண்டு தள்ளின. ஆரம்பத்தில் அனல் வந்தாலும் பெரிதில்லை என்று எண்ணிய நான் அனற் குழியைக் கண்டவுடன் கால்களால் உதைத்தும், பல்லால் கடித்தும், கையால் மோதியும் அந்தப் பிசாசுகளிடமிருந்து திமிறிக்கொள்ள முயன்றேன். "ஐயோ! அவைகளுக்குத் தான் என்ன பலமடா? என்னை ஒவ்வொரு நெருப்புக் குழியாக முறையே போட்டுப் போட்டு எடுத்தன. மேல் தபிக்கிறதே, அங்கங்களெல்லாம் வேகின்றனவே. ஐயோ, வெட்டி வெட்டி ஆட்டிறைச்சியைத் தொங்க விடுவதுபோல் எனது கைகளையும், கால்களையும் தொங்கவிடுகிறார்களே என் முண்டத்தைத் தீப்பாறைகளில் மோதுகிறார்களே, என்னை எவரும் காப்பவர்களில்லையா? காப்பவர்களில்லையா? தபோமுனியே, வந்து ரக்ஷிக்கமாட்டாயா?" என்று கதறினேன். மூர்ச்சை தெளிந்து கண்களை விழித்துப் பார்த்தேன்.

தபோமுனி என் முகத்தை நீரால் துடைத்து, என்னைத் தூக்கி நிறுத்திக் கொண்டு தனது அருள் விழிகளிலே நீர் பொழிய, "மகனே, இனி, நீ சுகம் பெறுவாய். பிராப்த கருமங்கள் அனுபவித்தா லொழியத் தீரமாட்டா. நீ கண்ட கனவுகளை எல்லாம் மறந்துவிடு. முன் சென்ற துன்பத்திற்கு இப்போது நினைத்து வருந்துதல் பேதைமை. இனி, நல்லற வழியிலே நான் உன்னைக் கொண்டு சேர்க்கின்றேன். 'ஜய தர்மராஜாய' என்று சொல்" என்றார்.

"ஜய தர்மராஜாய" என்று வாழ்த்தினேன். பின்பு பல வளைவுப் பாதைகளின் வழியே சுற்றிச் சுற்றி என்னைக் கொண்டு போய், முனிவன் தர்மராஜாவின் சபையிலே கொண்டு சேர்த்தான். பளிங்குத் தளம், பளிங்குச் சுவர்கள், பளிங்குத் தூண்கள், வயிரச் சிங்காதனம். அதன் கீழே பொன்னாற் செய்யப்பட்ட பாம்பு, புலி இவற்றின் உருவங்கள் நசுங்கிக் கிடந்தன. சபா மண்டபத்திற்கு மேல்விதானம் கிடையாது. ஆகாயமே கூரை. சூரிய கிரணங்கள் நேரே தர்மராஜாவின் முடிமீது வந்து விழுகின்றன; அவருடைய ரத்தின மகுடத்தை ஜாஜ்வல்யமாகச் செய்கின்றன. சூர்யகுமாரனாதலால், அவனையும் அவன் சபையிலுள்ளோரையும் சூர்ய கிரணங்கள் சுடவில்லை யென்று தெரிந்து கொண்டேன். நெருப்பை நெருப்பு சுடுமா? தர்மராஜாவின் மகுடத்துக்கு நேரே உயர ஓர் அக்கினி வாள் இடைவானிலே பொறிகள் பறக்குமாறு தக தக வென்று ஒளி வீசி நிற்கின்றது. இது தர்மத்துக்கு ரக்ஷணை. தர்மத்தைப் பிறர் துன்பப்படுத்த வந்தால் அவர் தலையிலும், தர்மம் தானே சிறிது தவறுமாயின் அதன் தலையிலும் இவ்வாள் விழுந்து நாசப்படுத்திவிடும் என்பது அறிந்தேன்.

தர்மராஜாவின் முகத்தைப் பார்த்தேன். பால கங்காதர திலகரின் முகத்துச் சாயல் கொஞ்சம் தென்பட்டது. இலேசான சாயல். ஆனால், தர்மராஜா தாமே காலமாதலால், காலத்தினால் மனிதர் முகத்தில் ஏற்படுத்தப்படும் சிதைவுகள் அவருடைய திவ்விய வதனத்தில் காணப்படவில்லை. பொன் வர்ணமுடையதும் வயிர ஸாரங் கொண்டதும் ஆகிய ஒரு அற்புத உலோகத்திலே வார்த்து, அதனுள்ளே மகா சக்தி கொண்ட உயிர்த் திகழ்ச்சி செலுத்தப்பட்டிருக்கிறது போல விளங்கிற்று.

இத்தனைக்கும் மேலே, அருட்ஜோதி கூத்தாடுகின்றது. தர்மம் இரக்கமில்லாதது என்று நான் பல சமயங்களில் நினைத்திருக்கிறேன். சிங்காதனத்தைப் போலவே நெஞ்சமும் வயிரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாமென்று நினைத்தேன். அது பிழை. தர்மம் பக்ஷபாதமற்றது. குருட்டன்பு இல்லாதது. ஆனால், அருளும் விவேகமும் கலந்து வார்க்கப்பட்ட விக்கிரகம் தர்மம்.

தபோமுனி என்னைக் கொண்டு தர்மராஜாவின் திருமுன்னே நிறுத்தினார். தருமன் முகமலர்ந்து "வருக" என்று சொல்லி, "ஓம்" என்று ஆசீர்வதித்தான். அவன் வாய்திறக்கு முன்பாகவே நான் அவன் தாளில் வீழ்ந்து சாஷ்டாங்கமாக வணங்கி அவன் பாத விரல்களைக் கண்ணீரால் நனைத்துவிட்டு எழுந்து நின்றேன்.

தர்மன் என்னை நோக்கி "உனது பாவங்களெல்லாம் நீங்கிப் போயின. உன் குறைகளெல்லாம் தீர்ந்து நீ பரிபூர்ணம் பெறும் மார்க்கத்திலே செல்வதற்குத் தகுதியுடையவனாய் விட்டாய். இனி இந்திரிய விருத்திகளிலே உன் மனம் செல்லமாட்டாது. அற்பப் பொருள்களிலே ஆசை வைக்கமாட்டாய். ஆணவத்திலே அடங்கி நிற்க மாட்டாய். மனம் உன் வசப்பட்டு நீ சொன்னபடி யெல்லாம் கேட்கும். தபோமுனி நீ விரும்பியதையெல்லாம் காட்டுவான். உனக்கு மங்கள முண்டாகுக!" என்றான். அவனை மறுபடியும் வணங்கி விடை பெற்றுக்கொண்டேன்.

அடர்ந்ததோர் காட்டிற்கு என்னை முனி அழைத்துச் சென்றான். அதனருகே ஏறக்குறைய இருபது சிறிய கூரை வீடுகளுள்ள ஒரு கிராமம். ஒவ்வொரு கூரை வீட்டையும் சூழ்ந்து ஒரு தோட்டம். வீடுகள் நெருக்கமாகச் சேர்ந்திருக்கவில்லை. விஸ்தாரமான இடைகள் விட்டுக் கட்டப்பட்டிருந்தன. வனப்பு, சுத்தம், வணங்குதற்குரிய எளிமை என்னும் இம் மூன்று குணங்களுக்கும் ஒவ்வொரு வீடும் இலக்கியமாக விளங்கிற்று. அசுசியான தோற்றமேனும், நாற்றமேனும், அங்கு தேடித் தேடிப் பார்த்தாலும் கிடையாது. அவ்வனத்திலும் அதி சுத்தமாயிருந்த வீட்டிற்குள் நானும் முனிவனும் சென்றோம். அங்கே ஒரு பிராமணன் விசாலமான தோள்களும், ஞானச் சுடர் விடும் முகமும், பரந்த கண்களும், வெளுத்து நீண்ட தாடியும் உடையவனாக வீற்றிருந்தான்.

அவனுக் கெதிரே ஐந்தாறு சிஷ்யர்கள் சுவடிகள் கையிலே வைத்துக்கொண்டு பாடங் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் தபோமுனியும் போனவுடன் எங்களுக்கு வழக்கப்படி உபசாரங்கள் கூறி உட்கார வைத்து விட்டு, மாணாக்கர்களை நோக்கி: -

"மக்களே, இன்றைக்குப் பாடம் போதும், போய் வாருங்கள்" என்றான்.

நான் "பாடம் நடத்துங்கள். நாங்கள் இடையூறாக வந்ததைக் கருதவேண்டாம்" என்றேன். அதற்குப் பிராமணர் "அதனால் பாதகமில்லை. ஏற்கெனவே பாடத்தை முடிக்கும் நேரமாய்விட்டது. அதற்கேற்ப நீங்களும் வந்து சேர்ந்தீர்கள். உங்கள் வரவினால் பாடத்திற்கு விக்கினமில்லை. இந்த உலகத்தில் அவரவர் தர்ம சேவைக்கு விக்கினங்கள் ஏற்படமாட்டா" என்று கூறினான்.

தபோமுனி அந்த உபாத்தியாயரை நோக்கி, "கண்வாசாரியாரே, இவர்கள் என்ன பாடம் படித்துக்கொண்டிருந்தார்கள்?" என்று கேட்டான். அதற்குக் கண்வர் "இவர்கள் கணிதசாஸ்திரம் படிக்கிறார்கள்" என்றார்.

தபோமுனி : - "முன் நான் வரும்போது சிற்ப சாஸ்திரம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்களே?"

கண்வர் :- "ஆம், அவர்கள் தொழிலாளிகள். இப்போது இருந்தவர்கள் பிரம, க்ஷத்திரிய என்னும் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்."

"சர்வ சாஸ்திரங்களின் கடல்" என்று நான் வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

அதுகேட்ட கண்வர் :- "அப்படி யொன்றுமில்லை. எனக்கு வேதாந்த சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இவற்றைத் தவிரச் சிற்பம், கணிதம் என்ற இரண்டுதான் தெரியும். வந்து கேட்கும் மாணாக்கர்களுக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கிறேன். அது எனது தர்மம்" என்றார்.

இவ்வளவு நேரத்தின் பிறகு தபோமுனி கண்வாசாரியாரிடம் என்னைச் சுட்டிக் காட்டி, "இவருக்குப் பிராமண தர்மத்தைக் காட்டவேண்டு மென்பதாகத் தங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்" என்றார். கண்வர் புன்னகைசெய்து, "ஆகா! சர்வ தர்மங்களுக்கும் தாமே மூலஸ்தானமா யிருக்கும்போது, என்னை ஒரு பொருளாகக் கருதி வந்தது வியப்பே. தமது கட்டளைக் கிணங்கி அவர் கேட்பதெல்லாம் கூறும் கடமையைச் சிரமேற்கொண்டிருக்கிறேன்" என்றனர். எனக்குத் தொடக்க முதலாகவே இருந்த ஆவலை எவ்வாறோ அடக்கி வைத்துக்கொண்டிருந்தேன். இப்போது அவர் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தவனாய், அவ்வாசாரியனிடம் நியாயஸ்தலத்திலே சாக்ஷியிடம் கேட்பது போல் - ஆனால் வணக்கம், பக்தி, சிரத்தை, இவற்றுடன் - கேள்விகள் சோனாமாரியாகப் பொழிந்தேன். அவரும் சலிப்பில்லாமல், ஐயந்திரிபற மறுமொழிகள் சுருங்கச்சொல்லி விளங்க வைத்துக் கொண்டு வந்தார்.

சில கேள்விகளையும் உத்தரங்களையும் இங்கே குறிப்பிடுகின்றேன்.

கேள்வி : - "ஸ்வாமி. ஒருவன் பிறக்கும் போதே பிராமணனாகப் பிறக்கிறானா? அல்லது பயிற்சியால் பிராமணனாகிறானா?"

உத்தரம் : - "பிறக்கும்போது மனிதர்களெல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகின்றார்கள். "சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:" என்று பகவான் சொல்லி யிருக்கிறார்."

கேள்வி :- "ஸ்வாமி, இந்த விதி அனுபவத்தில் இருக்கிறதா?"

உத்தரம் :- "ஆம், எனது பிதா க்ஷத்திரியர்; நான் பிராமணன்; என் மக்கள் பன்னிரண்டு பேரில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன். மற்றவர்களையெல்லாம் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய என்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, சுபாவம் முதலியவற்றைக் கருதி, உரியவாறு பயிலும்படி செய்திருக்கிறேன்."

கேள்வி :- "மண்ணுலகத்திலே பாரததேசத்தில்தான் வர்ணா சிரம பேதங்கள் இருக்கின்றன. அங்கே தாம் சொல்வது போல நடக்கவில்லையே?"

உத்தரம் :- "பாரத தேசத்தில்தான் வர்ணாசிரம பேதங்களிருப்பதாகச் சொல்வது பிழை. சகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில்தான் வர்ணாசிரம நெறி சீர்கெட்டு போயிருக்கின்றது. பூர்வத்திலே பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத்தான் இருந்தது. அதற்கு அந் நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துக்கள். புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய சகல நூல்களும் சாக்ஷி. இப்போது பாரத நாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறைதான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறி விட்டது. அது பற்றியே, அந்நாட்டினர், வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்."

கேள்வி: - "பிராமண தர்மங்களை எனக்குப் போதனை செய்ய வேண்டும்."

உத்தரம்: - "சங்கிரகமாகச் சொல்லுகிறேன். பிராமண வர்ணத்தார் ஒரு ஜன சமூகத்தின் அறிவுச் செல்வத்திற்குக் காவலாளிகள்; அறிவுப் பயிருக்கு உழவர்கள். அவரவர் தத்தம்மால் இயன்ற சாஸ்திரங்களைப் படித்து வைத்துக் கொண்டு அவற்றை வெவ்வேறு வர்ணத்தாருக்கு உரிமை நோக்கிக் கற்பிக்க வேண்டும். அவ்வாறு கற்பிப்பதற்கு, தமது உணவு மட்டிற்கு மேற்பட்ட எவ்விதமான கிரயமும் வாங்கலாகாது. 'எவன் வீட்டில் மறுநாள் ஆகாரத்திற்கு இன்றே நெல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவன் பிராமணன் ஆகமாட்டான்' என்று யாக்ஞ வல்கியர் சொல்கிறார்.

"ஜனங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கெல்லாம் அறிவின்மையே காரண மாதலாலும், அந்த அறிவின்மை ஏற்படாமற் பாதுகாப்பதே பிராமணன் கடமை யாதலாலும் பிராமணர்களே பொறுப்பாளிகளாவார்கள். ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர்

சூத்திர தர்ம போதனையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண்மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும். வைசிய தர்மம் குறைந்தால், அறிவு வகுப்பினர் தாம் வைசிய நூல் கற்பதும் கற்பிப்பதுமே முதற் கடமையாகக் கொண்டு, கையில் அகப்பட்டவர்களையெல்லாம் மெய்யான வைசியராக்கி விடுவார்கள். க்ஷத்திரிய தர்மங்திற்கும், பிராமண தர்மத்திற்கும் ஊனம் வர இடங்கொடுக்கவே கூடாது. க்ஷத்திரிய பிராமண தர்மங்களுக்கு ஊனம் நேரிடுமாயின் ஜன சமூகம் முழுவதுமே க்ஷீணமடைந்து போய்விடும்.

"அப்படி ஏதேனும் மகா விபத்து நேரிடக்கூடிய தருணத்தில், `அவரவர் தத்தம் தர்மங்களை மட்டுமே கருதி நிற்போம், மற்றவர் தர்மங்களை நாமேன் கருதவேண்டும்' என்று சும்மா இருத்தல் கூடாது. வீடு தீப்பற்றி எரியும்போது, தகப்பன் தன் காரியஸ்தலத்திற்கும், மகன் பள்ளிக்கூடத்திற்கும், பெண்கள் பூஞ்சோலைக்கும், தாய் கோயிலுக்கும், வேலைக்காரன் காய் கிழங்குகள் வாங்கும் பொருட்டுக் கடைக்கும், பரிசாரகன் சமையலுக்காகத் தண்ணீருக்கும், உல்லாசமாகப் புறப்பட்டுக் கொண்டிருக்கலாமா? நெருப்பை அவிக்க முயல வேண்டியது எல்லோருக்கும் கடமை. காரியஸ்தலத்திற்குப் போவதைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்; கோயில்களையும், பள்ளிக்கூடங்களையும் கள்வன் கொண்டுபோய் விடமாட்டான்; மறுநாள் கவனித்துக் கொள்ளலாம். விளையாட்டுக்குப் பூக்கொய்து வருதல் பெரிதன்று; காய்கிழங்குகள் பெரிதில்லை; சமையல் பெரிதில்லை. வீட்டிலே பற்றியிருக்கும் நெருப்பை அவிப்பது தான் பெரிது. அதற்குத்தான் எல்லோரும் பாடுபட வேண்டும். கலியிலே வர்ண வேறுபாடுகள் பொய்; வெறும் ஏமாற்று. பாரத நாட்டைப் பி நீர் கேட்டீர், பாரத நாட்டில் இப்போது கலி யுகம். ஆனால், இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளில் கலியுகம் நீங்கிக் கிருதயுகம் பிறக்கப்போகின்றது. அப்போது அந்த நாட்டிலே உண்மையான வர்ணாசிரம பேதங்கள் ஏற்பட்டு விளங்கும். இப்போதிருக்கும் வஞ்சனைப் பேதங்கள் நீங்கிவிடும்.

"பாரமார்த்திகத்திலே பிரம்மஞான முடையவனே பிராமணன் என்ற பெயருக்குத் தகுதியுடையவனாவான். 'வஜ்ரஸூசிகை' என்ற உபநிஷத்திலே இதை நேர்த்தியாக எடுத்து விளக்கியிருக்கின்றார். ஆனாலும், விவகாரத்திலே உலகத்தாருக்கு அறிவுப்பயிற்சி கொடுக்கும் வகுப்பினர் பிராமணராவார்கள். சகலவிதமான நூல்களிலும் பயிற்சி கொண்டிருத்தல், அதனை உலகத்தாருக்குப் போதனை செய்து, உலகத்துத் தொழில்களெல்லாம் இனிது நடப்பதற்கு ஆதரவாயிருத்தல், லௌகிகப் பெருமைகளிலே ஆசையில்லாமை - இவையே சுருங்கச் சொல்லுமிடத்துப் பிராமண தர்மத்தின் சாராம்சங்களாகும்" என்று முடித்தார்.

பேசி முடிந்தவுடன் திடீரென்று எழுந்து வெளியே போனார். உடனே திரும்பி எங்களிடம் வந்து சந்தியா தியானத்திற்கு நேரமாய் விட்டதென்று தெரிவித்தார். மூவரும் எழுந்து, கிராமத்திற்கு வெளியே சிறிது தூரத்துக்கு அப்பால் மாஞ்சோலையை யடுத்துள்ள ஆற்றங்கரைக்குச் சென்றோம். சூர்ய கோளம் மேற்றிசை வானத்திலே பாதி மறைந்திருந்தது. மேகங்கள் எல்லாம் நெருப்புத் தீவுகள் போலத் தோன்றின. பிரகிருதி தேவி அற்புதமான அழகுடன் விளங்கினள். அத்தருணத்தில் ஸ்நாநம் முடித்துத் தனித்தனியாகத் தூரத்தில் உட்கார்ந்து கொண்டு முனிவர்கள் இருவரும் பிரம்மத் தியானத்திலே அமர்ந்திருந்தனர். நான் "ஓம்" என்று ஜெபித்து சாந்தி தேவியை வரிக்கலாயினேன்.

ஜபதபங்கள் முடித்துக் கொண்டு மறுபடியும் கண்வ முனிவரின் வீட்டிற்கு வந்தோம். அங்கு நானும் தபோ முனிவரும் அவரிடம் விடைபெற்றுக் கொள்ள விரும்பிச் சில வார்த்தைகள் சொன்னோம். அதற்குக் கண்வர், "இராப் பொழுதாய்விட்டது. தாம் இருவரும் இன்றிரவை எனது சிறு குடிலிலேயே கழித்துக் கொண்டு போக வேண்டும்" என்றார்.

'எனக்கு உடனே, "மறுநாள் காலை ஆகாரத்திற்கு வீட்டிலே நெல் வைத்திருப்பவன் பிராமணனாக மாட்டான்" என்று சொல்லிய வசனம் ஞாபகத்திற்கு வந்தது. ஆதலால் அவர் மிகவும் எளியவராயிருப்பாரென்பது கருதி "வேண்டியதில்லை. நாங்கள் சென்று வருகிறோம், தயவுசெய்து மன்னிக்க வேண்டும்" என்றேன்.

கண்வமுனிக்கு எனது ஹிருதயம் தெரிந்து விட்டது.

"சகோதரா, தர்மமுள்ள இடத்தில் வறுமை கிடையாது. நீர் அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். தயவுசெய்து இவ்விரவு தங்கியே போகவேண்டும்" என்றார்.

எனக்கு வெட்கம் பொறுக்க முடியவில்லை. தலைகுனிந்து விட்டேன். முனிவர்கள் இருவரும் புன்னகை செய்தார்கள். பின்பு, இராப்பொழுதை அங்கேயே கழிப்பதாகத் தீர்மானம் செய்து கொண்டோம்.

கண்வர் வீட்டு நடையிலே ஓர் பாயின்மீது உட்கார்ந்திருந்தபோது, கந்தர்வ லோகத்தில் சுகந்த மாளிகையின் மாடத்திலே பர்வத குமாரியுடன் பஞ்சணைமீது உட்கார்ந்திருந்த பொழுதைக் காட்டிலும், என் மனதில் அதிக சாந்தி ஏற்பட்டு விளங்கிற்று. கண்வரும் தபோ முனிவரும் வேதாந்த விசாரணை செய்யத் தொடங்கினார்கள். தபோமுனிவர் விவகாரத்தின் நடுவிலே சில அருமையான விஷயங்கள் சொல்லினர். அப்போது கண்வருடைய பத்தினியும் வந்து உட்கார்ந்து கொண்டு சிரவணம் செய்தாள்.

கண்வருடைய பத்தினியை நோக்கும்போது, வேதங்களிலே படித்திருக்கும் மைத்ரேயி முதலிய ஸ்திரீகளின் சித்திரம் மனவிழியிலே எழுந்தது. கற்பு, தெளிவு, அடக்கம், அறிவு, தயை என்ற குணங்கள் அனைத்தும் அந்த தேவியைச் சூழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. முனிவர்களின் ஜீவகளை சம்பாஷணை ரஸத்தால் இயக்கத்தில் விளங்குவதும், தேவியின் ஜீவகளை அடக்கத்தில் ஒளிர்வதும், ஒப்பு நோக்கும்போது மிக நான்றாயிருந்தது. சிறிது நேரத்திற்கு அப்பால் கண்வரின் குமாரன் வந்து தாயின் பக்கத்திலே உட்கார்ந்தான். ஆ! இந்த வாலிபனைத் தவவேடத்திலே கண்டபோது என் மனம் பொறுக்கவில்லை. இவனை ராஜ குமாரனாக அமுத விழிகொண்ட மாதர்களோடு கொஞ்சிக்கொண்டிருக்கப் பார்க்க வேண்டும். இவனைச் சேனாதிபதியாக வாலிப வீரர்கள் சேர்ந்திருக்கும் சைன்ய முகத்திலே பார்க்க வேண்டும். கிரக கணங்களை அழைத்துக் கொண்டு பால சூரியன் முன்வருவதைப் போலிருக்கும் இவனுக்கா மரவுரி? இவனுக்கா வெறும் தானியமும், காய் கனிகளும் சேர்ந்த உணவு? இவனுக்கா சுனை நீர்ப்பானம்? இவனுக்கா இடைவிடாத ஏட்டுக் கவலை, கடபட விவகாரம்? முனிவர் பன்னிரண்டு குமாரர்களிலே தவத்திற்கென்று இவனைத் தெரிந்தெடுத்தது பிழையென்று என் சிந்தைக்குப் புலப்பட்டது. நான் இப்படி யோசனை செய்து கொண்டிருக்கும்போதே முனிவர்களின் வேதாந்த தர்க்கம் முடிந்துவிட்டது. தபோமுனி என் சிந்தையை விழியால் நேருக்கு நேராகப் பார்த்தவர் போன்று, "இத்தனை ராஜ லக்ஷணம் வாய்ந்த குமாரனைத் தாம் பிராமண தர்மத்திற்கு எடுத்துக் கொண்டு, மற்றப் பிள்ளைகளை யெல்லாம் வெளியே அனுப்பி விட்டமைக்கு முகாந்தரம் தெரிவிக்க வேண்டும்" என்று கண்வரிடம் கேட்டார்.

கண்வர் மகனை நோக்கிக் "குழந்தாய், இன்றைக்கு சோதிஷத்திலே - அதாவது, வானத்து கிரக நக்ஷத்திரங்களை அளக்கும் கணித நூல். எருமை மாடு கெட்டுப்போனால், வழிசொல்லப் படிக்கும் பல நூலன்று - தரிசனாப்பியாஸம் (பார்த்துப் பழகல்) செய்ய வேண்டிய தினமாயிற்றே. நீ தனியே போயிருந்து நக்ஷத்திர ஸ்தானங்களைச் சரியாகத் தெரிந்துகொண்டு வா" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

மகனைப் பற்றிப் புகழ்ச்சியாகச் சில வார்த்தைகள் சொல்ல நேரிடுமாதலால், அவற்றை அவன் காதில் விழும்படி சொல்ல முனிவருக்கு விருப்பமில்லை. குமாரன் வெளியே சென்றான். பின்பு முனிவர் பின்வருமாறு சொல்லலாயினர்:-

"அதர்மத்தைக் கொல்வதைக் காட்டிலும், அஞ்ஞானத்தைக் கொல்வதற்கு அதிக வீரத்தன்மை வேண்டும். ஜனங்களுக்கு சரீர சம்பந்தமான இன்மைகளைத் தவிர்த்து ரக்ஷிப்பது சூத்திர, வைசியர்கள் கடமை. தர்மத்தை க்ஷத்திரியன் ரக்ஷிக்கிறான். நான் முன்பு சொல்லியபடி, ஞானத்தைப் பிராமணன் சம்ரக்ஷணை செய்கிறான். பிராமணனுக்கு அளவற்ற வீர்யம் வேண்டும். அளவற்ற தேஜஸ் வேண்டும். அளவற்ற திடமும் பராக்கிரமமும் வேண்டும். அஞ்ஞானத்தின் படைகள் எண்ணற்றன. அஞ்ஞான ஊற்று வற்ற வற்றத் தொலையாது. அஞ்ஞான விருக்ஷத்தின் வேர் ஆதிசேஷன் முடிவரையிலே உண்டு. அப்படைகளை வெல்வதும், அவ்வூற்றை வற்றடிப்பதும், அந்த விஷமரத்தை வேரறுப்பதும், சாமான்யமான காரியமன்று.

"மகாபாரதப் போரிலே, பார்த்தனைவிடக் கிருஷ்ணனுக்கு வேலை அதிகம். கிருஷ்ணனுக்கு எவ்வளவு வேலையுண்டோ, அவ்வளவு, வேலை வேதவியாசருக்கு முண்டு."

நானாவிதமான விஷயங்களைப்பற்றி சம்பாஷணை செய்துவிட்டு, இலேசான ஆகாரமுண்டு, பின் நித்திரைக்குப் போய்விட்டோம். மறுநாள் காலையில் எழுந்து தபோமுனிவரும் நானும் நித்யானுஷ்டானங்கள் முடித்துக் கொண்டு, சத்தியராமன் என்ற க்ஷத்ரிய வீரனுடைய மாளிகைக்குச் சென்றோம். தபோ முனிவர் வரவைக் கேட்டவுடனே, சத்தியராமன் எதிர்கொண்டு வந்து, உபசாரங்கள் பேசி ஓர் மண்டபத்திற்கு அழைத்துப் போய், எங்களை ஆசனங்களிலே அமர்வித்துத் தானும் வீற்றிருந்தான். முனிவர் மெல்ல என் கதையைத் தொடங்கினார். ன் தனது வீரத்தோள்கள் குலுங்க நகைத்துப் பின், "நான் காவலாளி, எனக்குச் சாதுரியமாகவும், தெளிவாகவும் ஒரு விஷயத்தை எடுத்து உபதேசிக்கும் திறமை கிடையாது. மேலும் தருமராஜனுடைய சேனைத் தலைவர்களில் என்னிலும் க்ஷத்திரிய குணங்களிலே சிறந்தோர் பலர் இருக்கின்றார்கள். அவர்களை யெல்லாம் விட்டுத் தரும திருஷ்டாந்தமாக அடியேனைத் தெரிந்து கொண்டதை, நான் பாக்கியமாகக் கருதுகின்றேனாயினும்,எனது தகுதியின்மையைப் பற்றிய உணர்ச்சி என் மனதிலிருந்து மாறவில்லை" என்றான்.

பின்பு, என்னை நோக்கி, "தாம் கேள்விகள் கேட்டால் என்னால் இயன்றமட்டும் மறுமொழிகள் சொல்லி சந்தேக நிவர்த்தி செய்யக் காத்திருக்கிறேன்" என்று கூறினான்.

"க்ஷத்திரியனுக்குரிய கடமைகளிலே, முதற்பட்டதும், மற்றக் கடமைகளுக்கெல்லாம் ஆதாரமுமாகிய மூலதர்மம் யாது? அதை எனக்குத் தெளிவுறக் கூறவேண்டும்" என்றேன்.

முன்னே வீற்றிருந்த வீரனுடைய சிங்க முகத்திலே ஒளி வீசிற்று. கண்கள் அறிவுப் பொருளை உமிழ்வன போலத் தோன்றின. உடல் முழுவதிலும் ஒரு புதிய திகழ்ச்சியும், பூரிப்பும் கண்டேன்.

பரவசமடைந்து குரு சொல்லும் வசனங்களை அநுபவ நிலையிலிருக்கும் சீடன் கேட்பதுபோல அடங்காத தாகத்துடன் கேட்கலாயினேன்.

"மித்திரா, க்ஷத்திரியனுடைய கடமைகள் பலவற்றிற்கும் எது தாய் என்று கேட்டாய். க்ஷத்திரியனுடைய முயற்சிகளுக்கெல்லாம் அடியிலுள்ள ஊற்றெது வென்று வினவினாய். அதனைச் சொல்லுகிறேன், கேள். அது போர்! போர்தான் க்ஷத்திரியனுடைய முதல் தருமம். போர்தான் உண்மையான க்ஷத்திரியனுக்கு மூச்சு. போரே அவனுடைய உயிர். எந்த க்ஷணத்திலே போரை நிறுத்துகின்றானோ, அந்தக் கணத்திலே க்ஷத்திரியன் பேடியாய் விடுகிறான். பின்பு அவன் மரம், அவன் பிரேதம், அவன் பொய், அவன் பேசுதற்கரிய இகழ்ச்சியாக முடிக்கின்றான். மித்திரா, நான் உனக்கு வேதாந்த சாஸ்திரம் சொல்லக்கூடியவனன்று. அதர்மம் ஆதியிலே எப்படி உண்டாயிற்றென்பதை நமது முனிவர் போன்ற ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள். ஆனால், ஒரு செய்தி மட்டும் நான் அறிவேன். அதர்மம் எப்போதும் நமது முன்னே நிற்கின்றது. எதன் பொருட்டு நிற்கின்றது? உன் கையால் கொலையுண்டு சாகும் பொருட்டாக. அது என்ன சொல்லுகிறது? 'அப்பா, உன் கையிலேயுள்ள கோடரியை என் தலையிலே அடித்து என் தலையை இரண்டு கூறாகப் பிளந்து விடு' என்று சொல்லுகிறது.

"அதர்மங்கள் ரக்த பீஜமுடையவை. கொல்லக்கொல்ல மேன்மேலும் பிறந்துகொண்டே யிருக்கும். க்ஷத்திரியனுடைய கடமை யாதென்றால் அவற்றைத் தன் உயிருள்ளவரை வெட்டித் தள்ளிக்கொண்டே யிருக்க வேண்டும். நாள்தோறும் சூர்யன் இருளைச் சுற்றிச் சுற்றித் துரத்திக் கொலை செய்துகொண்டு வருகிறான். சூரியனே முதலாவது க்ஷத்திரியன். எங்கள் குலத்துக்குப் பிதா மகன்.

"அதர்ம நாசத்திற்காகப் போர் செய்துகொண்டே யிருப்பதுதான் க்ஷத்திரிய தருமமென்று சொன்னேன். அத்தொழிலுக்கு உரிய பயிற்சியும் சாதனங்களும் கைக் கொள்ளுதல் அவசியமென்று கூறுதல் மிகையாம்" என்று முடித்தான்.

நித்தியமாக இருக்கும் அதர்மங்களை நாம் அடிக்கடி கொல்வதில்தான் என்ன பிரயோஜனம் என்றெண்ணித் திகைக்கலானேன். அந்தக் கேள்வியை சத்தியராமனிடம் கேட்டதற்கு அவன் சிறிதேனும் மயங்குதலின்றிப் பின் வருமாறு உத்தரமளித்தான்.

"தமோகுணம் கேட்கின்ற கேள்வி! மித்திரா, கர்மம் (தொழில்) செய்யாமல் மனிதன் அரை க்ஷணமேனும் இருக்க முடியாது. நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொழில் செய்துகொண்டே யிருக்கவேண்டும் என்பது விதி. அந்தக் கர்மத்தைக் கடலலைப்பட்ட துரும்புபோலச் செய்யாமல், சூர்யனை போலச் செய்வது பெருமையல்லவா? சாதாரண சரீர சுகங்களைப் பற்றிய காரியங்களிலே கூட மனிதன் இவ்வித யோசனை செய்வதில்லை. ஓயாமல் அழுக்காகும் உடலை நித்தியம் ஏன் தண்ணீரால் கழுவ வேண்டும்? கழுவக் கழுவ அதுதான் மேன்மேலும் அசுத்தப் பட்டுக்கொண்டு வருகிறதே, என்று யோசித்து எவனேனும் ஸ்நாநம் இல்லாமல் இருக்கிறானா? கணத்திலே தோன்றி அழியும் உடலுக்குச் செய்யும் உபசாரம் நிரந்தரமாகிய தர்மத்துக்குச் செய்யலாகாதா?

"மேலும், அதர்மம் தர்மத்திற்கு உணவு. ஆதலால் தர்மம் இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். இது நியாயமே. அதர்மம் முற்றிலும் இறந்து சூன்யமாய்ப் போய்விடுமானால், பின்பு தர்மம் உண்ண உணவில்லாமல் தானும் மடிந்துவிடும்" என்றான்.

தர்ம லோகத்தில் எனக்கு நெடுங்காலம் வசிக்கும் பாக்கியமில்லை. க்ஷத்திரிய வீரனுடைய வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு பலவிடங்களுக்கு என்னைத் தபோ முனிவர் கொண்டு சென்றார். அதன் பிறகு ஜீரணமாகாத ஓர் உணவு நெடுநேரத்திற்கப்பால் வயிற்று வலியுண்டாக்குவது போல, எனது புண்ணியத்தால் எரிக்கப்படாத ஓர் கர்மம் ஏதோ ஓர் மூலையினின்று வெளிப்பட்டு என் உள்ளத்திலே தர்ம சாதனைக்கு விரோதமாகிய ஓர் விருப்பத்தைக் கொண்டு நுழைந்தது. தபோமுனிவர் எனக்குப் பல தார்மிகப் புதுமைகளைக் காட்டிக் கொண்டிருக்கும்போதே அவ்விருப்பம் மீட்டுமீட்டும் எனது ஹிருதயத்தில் கிளைத்துக் கொண்டிருந்தது.

சில தினங்களுக்கப்பால், ஒரு சமயம் என்னைத் தனியே விட்டுவிட்டுத் தபோமுனி ஏதோ வேலையாகப் போயிருந்தார். பிராரப்த கர்மப் பயன்! நான் தனியேயிருக்கும்போது நீசமனம் இலேசாகப் பர்வதகுமாரியின் உருவத்தைக் கொண்டு எதிரே நிறுத்தியது. 'ஆ! என்ன இன்பமாயிருந்தது அந்தக் காலம்!' என்று நினைத்தேன்.

எதிரே நின்ற மோகன விக்கிரகம் இன்னும் - சிறிது நெருங்கிற்று. நான் அதைத் தழுவும் பொருட்டாக எழுந்தேன். எனது கைகளுக்கிடையே மின் வெட்டு முன் பர்வதகுமாரி வந்து நின்றாள். இதழ்களோடு இதழ் பொருத்தி ஒரு க்ஷணம் மோக பரவசத்திலே இருந்தேன். இரண்டு மூன்று பூமிகள் இடிந்து விழுந்ததுபோலப் "படேர்" என்று ஒரு சப்தம் கேட்டது. "கோ" என்றலறி மூர்ச்சை போட்டு விழுந்தேன்.

கண்ணை விழித்துப் பார்க்கும்போது பழைய திருவல்லிக் கேணியில் பழைய இடத்திலே என்னைச் சுற்றிச் சிலர் விசிறிக் கொண்டு நிற்பதைக் கண்டேன். "என்ன செய்கிறீர்கள்" என்று கேட்டதற்கு, "நீ பேய்கண்டவன்போல அலறினாய். நாங்கள் வந்து பார்க்கும்போது மூச்சில்லாமலிருந்தது. பலவிதமான சைத்யோபசாரங்கள் செய்தபிறகு இப்போது மூச்சு விடுகிறாய்" என்றார்கள்.

"ஐயோ, மூச்சுப் போயிருந்தாலும் பெரிய காரியமில்லையே, தர்மத்தைத் தவறிவிட்டேனே!" என்று கூறிக் கண்ணீர் சிந்தினேன்.

Sunday, September 23, 2012

மண்ணுலகம் (ஞானரதம்)

எனக்குத் தலைநோவு பலமாயிருந்தது. படுக்கையை விட்டிறங்கிக் கிழக்கே இரண்டு மூன்று சந்துக்களுக்கப்பால், ஏதோ பெயர் மறந்துபோன தெருவில், நான் கூலி கொடுத்து வாசம் செய்துகொண்டிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தேன் அந்த வீட்டைக் கொஞ்சம் வர்ணிக்

கலாமா? கந்தர்வ நாட்டைப் பற்றிக் கேட்டீர்களே! இந்த மண்ணுலகத்தில் நமக்குள்ள சௌகரியங்களைப் பற்றிச் சிறிது கேளுங்கள்.

நானிருந்த வீட்டிற்கு முன்பக்கத்திலே ஓர் கூடமும் அதைச் சுற்றி இரண்டு மூன்று அறைகளும் உண்டு. மேற்கே பார்த்த வீடு. அந்தக் கூடத்திற்குத் தென்புறத்திலே ஒரு முற்றம். இது முன் பகுதி; பின் பகுதியிலே சில அறைகள். ஒரு முற்றம். மேல் மெத்தை. அதில் இரண்டறைகள். இவ்விரண்டு பகுதிகளுக்குப் பொதுவாகத் தென்பாரிசத்திலே கொல்லைப் புறத்தில் ஓர் கிணறும் தண்ணீர்க் குழாயும் உண்டு. பின் பகுதியில் நான், என் சிறிய தாயார், மனைவி, மைத்துனிப் பெண், தம்பி, எனது குழந்தை ஆகிய அறுவரும் வசிப்பது. முன் பகுதியில் ஒரு ராயர் பெரிய குடும்பத்தோடிருந்தார். அவருக்குப் பகல் முழுதும் உழைத்துக் கொண்டிருக்கும்படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ, ஓர் உத்தியோகம். உடம்பிலே கோபிமண் முத்திரைகள் எத்தனையோ அத்தனை குழந்தைகள். அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம். அந்த முற்றத்திலேயே ஒரு பசுமாடு. இத்துடன் ஒட்டுக்குடியாக அவருடைய பந்துக்கள் சிலர் வசித்தார்கள்.

நான் இருந்த பகுதியிலேனும் மேன்மாடமென்று ஒன்றிருந்தபடியால், கொஞ்சம் காற்று வரும். ராயர் கூட்டத்தாருக்கு அதுகூடக் கிடையாது. இரவிலே கொசுக்களின் தொல்லை பொறுக்க முடியாது. எனக்குத் தூக்கமே வராது. ராயருக்குக் காச நோயாதலால் அவர் இருமிக் கொண்டேயிருக்கிற சப்தம் ஓயாமல் கேட்கும். அவருடைய குழந்தைகள் ஒன்று மாற்றி மற்றொன்று அழுது கொண்டே யிருக்கும். கர்ப்பிணியாகிய அவர் மனைவி இடையிடையே விழித்துக் குழந்தைகளையோ, அல்லது கடவுளையோ அல்லது ராயரைத்தானோ, யாரையோ கன்னட பாஷையிலே திட்டிவிட்டு மறுபடியும் உறங்கி விடுவாள்.

ராயர் வீட்டு விஷயங்கள் இவ்வாறிருக்க, நமது வீட்டுச் சம்பிரமங்கள் இதைக் காட்டிலும் விசேஷம்.

கதையை இடையிலே விட்டு விட்டேனே. வீரராகவ முதலித் தெருவிலிருந்து வீட்டிற்கு வந்தேனா? வரும் வழியிலே "ஜட்கா" வண்டிகள், "துரை"கள் போகும் "கோச்சு"கள், புழுதி, இரைச்சல், துர்நாற்றம், இவற்றை யெல்லாம்கடந்து, முன் பகுதியிலே பசுமாடு, ராயர் வீட்டம்மாள், குழந்தைக் கூட்டங்கள் முதலிய விபத்துகளுக்கெல்லாம் தப்பிப் பின் புறத்திலே "மெத்தை"க்கு வந்து சேர்ந்தேன். அங்கே எனது படுக்கை, படிப்பு, எழுத்து, பகலில் ஸ்நேகிதர்கள் வந்தால் அவர்களுடன் சல்லாபம் முதலிய நாலாயிர விஷயங்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்ட அறையின் வெளிப்புறத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வந்து ஏனென்றாள். "தலை நோவு பொறுக்க முடியவில்லை. கொஞ்சம் மிளகு அரைத்துக் கொண்டு வா" என்றேன். "ஆமாம்; இரண்டு நாளைக்கொரு முறை இதொரு பொய்த் தலைவலி வந்துவிடும், என்னை வேலை யேவுகிறதற்காக. அதெல்லாம் சரிதான், பால்காரி வந்து மத்தியானம் பணம் கேட்டுவிட்டுப் போனாள். ராயர் வீட்டு அம்மாள் குடக்கூலிக்கு ஞாபகப்படுத்தச் சொன்னாள். ராயர் நேற்றே சொன்னாராம். இந்த மாதம் குழந்தைக்குக் காப்பு வாங்க ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தீர்கள். என்னைத் தான் ஏமாற்றுகிறது வழக்கமாகவே போய்விட்டது," இன்னும், அது இது என்று ஆயிரங் கணக்கு சொன்னாள். அன்று மாலை அவள் சொல்லிய கணக்குகளை எல்லாம் தீர்க்கவேண்டுமானால் குறைந்தபக்ஷம் மூன்று லக்ஷம் ரூபாய் வேண்டும் என்று என் புத்திக்குப் புலப்பட்டது. கடைசியாக "தெருவிலே போகிற நாய்களுக்கெல்லாம் பணத்தை வாரி யிறைக்கிறது; வீட்டுச் செலவைப் பற்றிக் கேட்டால் முகத்தைச் சுளிக்கிறது; இப்படிச் செய்து கொண்டே வந்தால், அப்புறம் என்ன கிடைக்கும்? மண் தான் கிடைக்கும்" என்று ஆசீர்வாதம் பண்ணிப் பிரசங்கத்தை முடித்தாள்.

"தலைநோவு தீர்ந்து போய்விட்டது. நீ தயவுசெய்து கீழே போகலாம்" என்று வணக்கத்துடன் தெரியப்படுத்திக் கொண்டேன்.

"ஆமாம்! ஊர்க்காரர் கூடவெல்லாம் ஓயாமல் பேசித் தொண்டைத் தண்ணீரை வற்ற வைத்துக் கொண்டிருக்கலாம்.

நான் ஒரு வார்த்தை பேசவந்தால் உடனே கோபம் வந்துவிடும்" என்றாள். அவள் மனதில் என்னைச் சமாதானப் படுத்துவதாக எண்ணம். அப்பால், பல தினங்கள் கழிந்த பின்புதான், நான் தர்மலோக யாத்திரை செய்வதாகத் தீர்மானம் செய்து வைத்திருந்தேன். இடையே நிகழ்ந்த சிற்சில சம்பவங்களும், காலதேச வர்ணனைகளுமே இங்கே எழுதப்படும். மண்ணுலகம் மிகப் பெரிது அதில் என் அனுபவ முழுவதையும் எழுத வேண்டுமானால் மகாபாரதத்தைப் போலப் பதினெட்டு மடங்கு புஸ்தகமாகும். இங்கு ஓரிரண்டு "மாதிரி ஸீன்"களே குறிப்பிடப்படும்.

20-ம் தேதி : - குழந்தைக்குக் காய்ச்சல். மனைவிக்குக் காதுவலி. எனக்குப் பித்தக் கிறுகிறுப்பு.

21-ம் தேதி : - தம்பிக்குப் பாடசாலைச் சம்பளம் கொடுக்க வேண்டிய கடைசி நாள். நான் காரியஸ்தலத்திலிருந்து பணம் கொண்டுவந்து வைக்க மறந்து விட்டேன். அவன் அது பற்றிப் பாடசாலைக்குப் போவதையே நிறுத்தி விட்டான். நான் சுதேசிய விஷயத்தில் ஊக்கத்துடன் பாடுபடுவதன் பொருட்டாக, என்னை இப்போதும் கவனித்து வரும்படியாக ராஜாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள், எனது தம்பியிடம் செய்த சம்பாஷணையில் "உம்முடைய அண்ணனது சிநேகிதரான இன்னாரை ராஜாங்கத்தார் பிடிக்கப் போகிறார்கள்" என்ற மங்கள சமாசாரம் சொல்லி விட்டுப் போனதாகத் தம்பி வந்து சொன்னான்.

22-ம் தேதி : - மனைவிக்கும் சிறிய தாயாருக்கும் மனஸ்தாபம் வந்து விட்டது. ஒருவரையொருவர் மாற்றி என்னிடம் பிழைகூறத் தலைப்பட்டார்கள். என் ஜீவதர்மமாகிய 'சுதேசியம்' தப்பு முயற்சியென்றும், வீணென்றும், அதில் நான் தலையிட்டதிலிருந்து குடும்பத்துக்குப் பற்பல கேடுகளுண்டாகு மென்றும் சிறு தாயார் சன்மார்க்க போதனை செய்தாள். என் மூக்கில் அடிக்கடி ஒருவித ஊறுதல் உண்டாவது போலத் தோன்றிற்று. அது ஓர் பொல்லாத நோயாயிருக்குமோ என்ற மூடத்தனமான கவலை கொண்டேன். அக் கவலையிலிருந்து மனதை அடிக்கடி திருப்பியும், மனம் மீட்டும் மீட்டும் அதில் போய் விழுந்தது.

23-ம் தேதி : - வெற்றிலையில் சுண்ணாம்பு அதிகமாகச் சேர்ந்து விட்டபடியால், வாயெல்லாம் புண்ணாய்ப் போய்விட்டது. வாய்க்குள் ஜலம் விடுவதற்குக் கூடத் தகுதியில்லை. எனக்கு சாதாரணமாகவே உழைப்பு அதிகமாதலால், அத்துடன் சோறும் விழுங்க முடியாமற் போகவே, சோர்வும் முகக் கடுகடுப்பும் அதிகப்பட்டன. இத்யாதி, இத்யாதி.

நாள் தவறினாலும், இந்தக் கணக்குத் தவறுவதில்லை. சீச்சீ! இந்த மண்ணுலகம் ஓரிடமா? இதில் மனிதன் வசிக்கலாமா? ஆமைகளும், ஓநாய்களும் வாழலாம். இது துன்பக் களம். இது சிறுமைக் களஞ்சியம். இது நரகம். இதில் வெறுப்படையாத மனிதர்களின் முகத்திலேகூட விழிக்கலாகாது.

வீட்டு வியாபாரங்களையும் எனது சொந்த வர்த்தமானங்களையும் குறித்துச் சில திருஷ்டாந்தங்கள் காண்பித்தேன். இனி, வெளி வியாபாரங்கள், எனது மித்திரர், அயலார் முதலியவர்களின் செய்திகள் ஸம்பந்தமாகச் சில திருஷ்டாந்தங்கள் காண்பிக்கிறேன். திருவல்லிக்கேணியிலே “செ……ஸங்கம்” என்பதாக ஓர் தேச பக்தர் சபை உண்டு. அதில் தேசபக்தர்கள் தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து, “காரியங்கள்” – ஒரு காரியமும் நடக்கவில்லை – நடத்தினோம். நாங்கள் தேசபக்தர்கள் இல்லையென்று, அந்தச் சுவை ஒன்றுமில்லாமற் போனதிலிருந்தே நன்கு விளங்கும்.

நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர்களெல்லாம் புளியஞ்சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர்; ‘காலணா’வின் அடியார்க்கும் அடியார்.

ஆனால், எங்களிலே ஒவ்வொருவனும் பேசுவதைக் கேட்டால் கைகால் நடுங்கும் படியாக இருக்கும். பணத் தொண்டரடிப்பொடியாழ்வார் எங்களெல்லோரைக் காட்டிலும் வாய்ப் பேச்சில் வீரர். ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலாமென்பான். மற்றொருவன் மணலைக் கயிறாகத் திரிக்கலாமென்பான். ஒருவன் “நாம் இந்த ரேட்டில் – இந்த விதமாகவே – வேலை செய்து கொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறுமாதத்தில் காற்றாய்ப் போய்விடும்” என்பான். மற்றொருவன் “சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக்கிறார், ஆறு வருஷத்தில் கிடைத்து விடுமென்று எனக்குத் தோன்றுகிறது” என்பான். தவளையுருவங் கொண்ட மூன்றாமொருவன் “ஆறு மாதமென்று சொல்லடா” என்று திருத்திக் கொடுப்பான்.

ப………………… ஆழ்வார் எங்களிலே முக்கியஸ்தர், அவர் இதை எல்லாம் கேட்டுப் பரமானந்தமடைந்து கொண்டிருப்பார். ஆனால் ஒரு தேவதை அவரிடம் வந்து, உங்களுக்கு நான் ஸ்வராஜ்யம் நாளை ஸூர்யோதத்திற்கு முன்பு சம்பாதித்துக்கொடுக்கிறேன். நீ உன் வீட்டிலிருந்து அதற்காக ஒரு வராகன் எடுத்துக் கொண்டுவா” என்று சொல்லுமாயின், அந்த ஆழ்வார், “தேவதையே உனக்கு வந்தனம் செய்கிறேன். ஓம் சக்தியை நம: ஓம் பராயை நம: இத்யாதி; அம்பிகே, இந்த உபகாரத்துக்கு நாங்கள் உனக்கு எவ்வாறு நன்றி செலுத்தப் போகிறோம்? எங்கள் உடல், பொருள், ஆவி மூன்றும் உன்னுடையதே யாகும், ஆனால், ஒரு வராகன் கேட்ட விஷயத்தைப் பற்றி நான் ஒரு வார்த்தை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதைக் கேள். நீ சொல்லுகிற காரியமோ பொதுக் காரியம். அதற்குப் பொது ஜனங்கள் பணம் சேர்த்துக் கொடுப்பதே பொருத்தமுடையதாகும். நான் ஒருவன் மட்டிலும் கையிலிருந்து பணம் செலவிடுதல் பொருத்தமன்று. இவ்விஷயத்தைப் பற்றி நாங்கள் அடுத்த வாரம் கூடப் போகிற ‘மீட்டிங்’கில் பேசித் தீர்மானம் செய்கிறோம். அதன் பிறகு நீ பெருங்கருணையுடன் எழுந்தருள வேண்டும். இப்போது போய் வருக. வந்தே மாதரம்” என்று மறுமொழி சொல்லியனுப்பி விடுவார்.

ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை, ஸாரமில்லை, ஸத்துக் கிடையாது: உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாய் இருக்கும் வாழ்க்கை; ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகின்றான். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி விட்டுவிட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனே தான் இருக்கிறான், ஆனால், “நான் ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்புவதற்கிடமில்லையே” என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கிடமில்லையென்றெண்ணி ஏமாற்றுகிறான். ஐயோ மூடா நீ ஏமாற்றுவதனால், முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்றா நினைக்கிறாய்? மனித ஜாதிக்கு தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம். இறங்காத விஷம். இதன் பெயர் பணம்.

இப்பேய்க்கு வணங்கும்படி அவனைத் தூண்டிவிடுவது விருப்பம்; அதாவது ருசி நீங்கிய விருப்பம்; அறிவற்ற விருப்பம்; ருசிஸஹிதமான விருப்பமுடையோர் கந்தவர்கள். ஸத்திய லோகக் கருவி.

இன்னும் எத்தனையோ காட்சிகள் மண்ணுலகத்திலிருந்து எடுத்துக் காட்டவேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், பயனற்ற இவ்வுலகத்தைப் பற்றி அதிகமாக விஸ்தரிப்பது பயனுடைய கார்யமாகாது என்பது கருதி இத்துடன் நிறுத்தி விடுகின்றேன்.