Tuesday, January 3, 2012

புதிய கோணங்கி


வேதபுரத்தில் ஒரு புதுமாதிரி குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத்தைந்து தாள பேதங்களும், அவற்றிலே பல விந்நியாசங்களும் காட்டுகிறான். தாள விஷயத்திலே மஹா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு, மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆள்நெட்டை, தடியன். காலிலே ஹைதராபாத் ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக் காலையிலே, அவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வது போலச் செய்கிறான், நல்ல கெட்டிக்காரன். அவன் சொன்னான்:-

“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
சொல்லடி, சொல்லடி, சக்தி மாகாளி,
வேத புரத்தாருக்கு நல்ல குறிசொல்லு;
தரித்திரம் போகுது, செல்வம் வருகுது;
படிப்பு வளருது, பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான்; ஜயோவென்று போவான்,
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரந் தெரியுது;
மந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது; வளருது!
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு,
சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ.
அந்தரி, வீரி, சண்டிகை, சூலி;
குடுகுடு குடுகுடு”

இப்படி அவன் சொல்லிக் கொண்டு போவதை நான் மெத்தையிலிருந்து கேட்டேன். இதென்னடா புதுமையாக இருக்கிறதென்று ஆச்சரியத்துடன் அவனை நிற்கச் சொன்னேன். நின்றான். கீழே இறங்கிப்போய், அவனை ஸ்மீபத்தில் அழைத்து “எந்த ஊர்?” என்று கேட்டேன். “சாமி, குடுகுடுக்காரனுக்கு ஊரேது, நாடேது? எங்கேயோ பிறந்தேன், எங்கேயோ வளர்ந்தேன். எங்கெல்லாமோ சுத்திக்கொண்டு வருகிறேன்” என்றான். அப்போது நான் சொன்னேன்:-

“உன்னைப் பார்த்தால் புதுமையாகத் தெரிகிறது. சாதாரணக் கோணங்கிகளைப் போலில்லை. உன்னுடைய பூர்வோத்தரங்களைக் கூடியவரையில் ஸவிஸ்தாரமாகச் சொல்லு. உனக்கு நேர்த்தியான சரிகை வேஷ்டி கொடுக்கிறேன்” என்றேன். அப்போது குடுகுடுக்காரன் சொல்லுகிறான்: “சாமி, நான் பிறந்த இடந்தெரியாது. என்னுடைய தாயார் முகம் தெரியாது; என்னுடைய தகப்பனாருக்கு இதுவே தொழில். அவர் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். ‘ஒன்பது கம்பளத்தார்’ என்ற ஜாதி. எனக்குப் பத்து வயதாக இருக்கும்போது தஞ்சாவூருக்கு என் தகப்பனார் என்னை அழைத்துக்கொண்டு போனார். அங்கே வைசூரி கண்டு செத்துப்போய்விட்டார். பிறகு நான் இதே தொழிலில் ஜீவனம் செய்துகொண்டு பல தேசங்கள் சுற்றி ஹைதராபாத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது இருபதிருக்கும். அங்கே ஜான்ஸன் என்ற துரை வந்திருந்தான். நல்ல மனுஷ்யன். அவன் ஒரு ‘கம்பெனி’ ஏஜண்டு; இந்தியாவிலிருந்து தாசிகள், நட்டுவர், கழைக் கூத்தாடிகள், செப்பிடு வித்தைக்காரர், ஜாலக்காரர் முதலிய பல தொழிலாளிகளைச் சம்பளம் கொடுத்துக் கூட்டிக்கொண்டு போய், வெள்ளைக்காரர் தேசங்களிலே பல இடங்களில் கூடாரமடித்து வேடிக்கை காண்பிப்பது அந்தக் கம்பெனியாரின் தொழில். விதிவசத்தினால் நான் அந்த ஜான்ஸன் துரை கம்பெனியிலே சேர்ந்தேன். இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களிலே ஸஞ்சாரம் செய்திருக்கிறேன். அமெரிக்காவுக்குப் போயிருக்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு சண்டை தொடங்கினபோது, மேற்படி ‘கம்பெனி’ கலைந்து போய்விட்டது. எங்களுக்கெல்லாம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பிவிட்டார்கள். உயிருள்ளவரை போஜனத்துக்குப் போதும்படியான பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனாலும் பூர்வீகத் தொழிலைக் கைவிடுவது ஞாயமில்லை என்று நினைத்து இங்கு வந்த பின்னும் பல ஊர்களில் சுற்றி, இதே தொழில் செய்துவருகிறேன்.

ஐரோப்பா முதலிய தேசங்களில் சுற்றின காலத்தில் மற்றக் கூத்தாடிகளைப்போல வீண் பொழுது போக்காமல், அவ்விடத்துப் பாஷைகளைக் கொஞ்சம் படித்துவந்தேன். எனக்கு இங்கிலீஷ் நன்றாகத் தெரியும். வேறு சில பாஷைகளும் தெரியும். அநேக புஸ்தகங்கள் வாசித்திருக்கிறேன். இங்கு வந்து பார்க்கையிலே அவ்விடத்து ஜனங்களைக் காட்டிலும் இங்குள்ளவர்கள் பல விஷயங்களிலே குறைவுபட்டிருக்கிறார்கள். 

நம்முடைய பரம்பரைத் தொழிலை வைத்துக்கொண்டே ஊரூராகப் போய் இங்குள்ள ஜனங்களுக்குக் கூடியவரை நியாயங்கள் சொல்லிக்கொண்டு வரலாமென்று புறப்பட்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய விருத்தாந்தம்” என்றான்.

ஒரு ஜரிகை வேஷ்டி எடுத்துக் கொடுக்கப்போனேன். போன தீபாவளிக்கு வாங்கினது; நல்ல வேஷ்டி. 

“சாமி வேண்டியதில்லை” என்று சொல்லி விட்டு அவன் மறுபடி உடுக்கையடித்துக்கொண்டு போய்விட்டான். போகும் போதே சொல்லுகிறான்:-

“குடு குடு குடு குடு குடு குடு குடு குடு
சாமி மார்க்கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது;
எட்டுலட்சுமியும் ஏறி வளருது,
பயந் தொலையுது, பாவந் தொலையுது
சாத்திரம் வளருது, சாதி குறையுது,
நேத்திரம் திறக்குது, நியாயந் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது
சொல்லடி சக்தி மலையாள பகவதி
தர்மம் பெருகுது தர்மம் பெருகுது.”

என்று சொல்லிக் கொண்டே போனான். அவன் முதுகுப்புறத்தை நோக்கி, தெய்வத்தை நினைத்து, ஒரு கும்பிடு போட்டேன்.

2 comments:

  1. :))

    புதிய கோணங்கி சுவாரசியமான ஆளா இருக்காரே!

    இன்னும் என்னென்ன சொன்னார்?

    ReplyDelete
  2. இன்னமும் சொல்லியிருக்காரா? தேடிப்பார்க்கணும்.

    ReplyDelete