Friday, January 20, 2012

தேசீயக் கல்வி (பகுதி 1)


தேசீயக் கல்வி (1)

தேசமென்பது குடிகளின் தொகுதி. இது கொண்டே நமது முன்னோர் குடிக்கட்டுகளினின்று விலகி நிற்போரைப் பரதேசிகள் என்றனர் போலும். 

குடும்பக் கல்வி

தேசக் கல்விக்குக் குடும்பக் கல்வியே வேர். 

வீட்டுப் பழக்கந்தான் நாட்டிலும் தோன்றும். வீட்டில் யோக்கியன் நாட்டிலும் யோக்யன்; வீட்டில் பொறுமையுடையவன் நாட்டிலும் பொறுமையுடையவன். மனைவியின் பொருளைத் திருட மனந்துணிந்தோன் கோயிற் பணத்தைக் கையாடக் கூசமாட்டான். தான் பெற்ற குழந்தைகளுக்கிடையே பக்ஷபாதஞ் செய்பவன் ஊரில் நியாயாதிபதியாக நியமனம் பெறத்தக்கவன் ஆகமாட்டான். குடும்பம் நாகரீகமடையாவிட்டால், தேசம் நாகரீகமடையாது. குடும்பத்தில் விடுதலை இராவிடில் தேசத்தில் விடுதலை இராது. 

ஒரு குடும்பத்தார் கூடித் துன்பமில்லாமல் வாழ்வதற்கு காட்டுமிருகங்களும் பிற மனிதரும் தடுக்காத வண்ணம் ஆதியில் மனிதர் காட்டை அழித்து வீடுகட்டினார்கள். வீடுகள் கூடி, ஊர் ஆயிற்று.

வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப்பட்டு வாழத் தகுந்த இடத்துக்கு வீடு என்ற பெயர் கொடுத்தனர் போலும். ‘விடத்தக்கது வீடு’ என்ற பிறால உடை ஒப்பத்தக்கதன்று. ‘விடத்தக்கது வீடு’ என்பது கற்றோர் துணிபாயின், அக்கற்றோர் வீட்டில் குடியிருப்பது யோக்கியதையன்று; அவர்கள் காட்டில் சென்று வாழ்தல் தகும். குழந்தைகள் வீட்டையே அரணாகக் கருதுகிறார்கள். ஸ்திரீகளும் அப்படியே செய்கிறார்கள். இடைவயதிலுள்ள ஆண் மக்கள் பெரும்பாலும் வீட்டைக்காட்டிலும் வெளி இடங்களில் அதிக இன்பம் காண்கிறார்கள். இந்த விஷயத்தில், குழந்தைகள், ஸ்திரீகள் முதலியோர்களின் கொள்கையை ஆண்மக்கள் பின்பற்றுதல் தகும் என்று நம்புகிறேன். ‘வீட்டிலிருந்து வெளியே ஓடிப்போய், வீட்டாருடன் கலகம் பண்ணிக்கொண்டு வாழ்வதே மேல் என்று கருதும் மக்களின் கூட்டங்களே பெரிய படைகளாய் உலகத்தில் பெரிய போர்களை நிகழ்த்து, எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகச் செய்கின்றன. வீடு துயரிடம் ஆவதற்குக் காரணம் விடுதலையும் அன்பும் இல்லாமையே. வீட்டில் அண்ணன் தம்பிகளையும் தாய் தந்தையரையும் அக்கா தங்கைகளையும் பெண்டு பிள்ளைகளையும் அடிமைப்படுத்தி ஆளச் சதிசெய்யும் ஜனங்களின் கூட்டங்களே, தேசங்களையும் அடக்கி அடிமையாக்கி ஆளச் சதி செய்கின்றன. 

வீடு துன்பமாக இருப்பதின் மூலகாரணம் கணவனுக்கும் மனைவிக்கும் மனப் பொருத்தமில்லாமை. ஸ்திரீ புருஷ விரோதத்தால் உண்டாகும் துன்பங்களே வீட்டுத் துன்பங்களுக்கெல்லாம் ஆதாரம். 

கொடுங்கோன்மை தவறு என்றும், கொடுங்கோன்மை இழைத்தால் அதற்குமேல் கொடுங்கோன்மை அவசியம் விளையும் என்றும், அவனவன் வீட்டிலிருப்போரைக் கொல்லாமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்வானாயின், உலகத்தில் கொடுங்கோன்மையும் போரும் விளையக் காரணமில்லையென்றும் நான் கருதுகிறேன். குடும்ப வாழ்க்கையே மற்றெல்லா வாழ்க்கைகளிலும் சிறந்தது. இதனால் அன்றோ திருவள்ளுவரும், 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

என்றார். 

காதல் விடுதலை வேண்டுமென்று கூறும் கக்ஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அது நியாயம் என்பதற்கு அந்தக் கஷியார் காட்டும் ஆதாரங்கள் பல முதலாவது, பூமண்டல முழுதில் சென்றகால நிகழ்கால அனுபவங்களை ப்ரமாணமாகக் காட்டுகிறார்கள். அதாவது பூமண்டலத்தின் சரித்திரத்தில் வ்யபிசாரம் ஜனவழக்கத்தில் தள்ளப்படாமலும் ஏக பத்நீவ்ரதம் பாதிவ்ரத்யம் என்ற இரண்டுவித தர்மங்களும் பெரும்பாலும் ஆதர்சங்களாகவும் நடைபெற்று வருகின்றனவென்றும் அக்னி ஸாக்ஷி வைத்து ‘உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை’ என்று பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் ஸஹிக்கத்தக்க அல்லது ஸஹிக்கத்தகாத பந்தங்களாகவே முடிகின்றனவென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதப்போது மாற்றிக்கொள்ளுதலே நியாயமென்றும் இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதாரக் கொள்கைக்கே ஹானி உண்டாகிறதென்றும், ஆதலால், விவாகம் ‘சாச்வத பந்தம்’ என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கக்ஷியார் சொல்லுகிறார்கள். மேலும், ஐரோப்பாச் சட்டத்திலும் மகமதியச் சட்டத்திலும் ஸ்திரீ புருஷர் தனது விவாகத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்ற நியாயம் ஏற்பட்டிருத்தல், தமது கொள்கையை மனுஷ்ய நீதி ஏற்கெனவே அங்கீகாரஞ் செய்துகொண்டுவிட்டது என்பதற்கு ஒரு பலமான திருஷ்டாந்தம் என்று மேற்படி விடுதலைக் காதல் (Free Love) கக்ஷியார் சொல்லுகிறார்கள். 

ஆனால், தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம் மேற்படி விடுதலைக் காதற்கொள்கையை அங்கீகாரம் செய்தல் ஸாத்யமில்லை. ஏனென்றால், தேசமாவது குடும்பங்களின் தொகுதியென முன்னரே காட்டியுள்ளோம். குடும்பங்களில்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடிலோ, தேசீயக்கல்வியைப் பற்றிப் பேச இடமில்லை. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மனை வாழ்க்கைக்கும் பொருந்தாது, மனை வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்துபோய்விடும். இன்று வேறு மனைவி, நாளை வேறு மனைவி என்றால், குழந்தைகளின் நிலைமை என்னாகும்? குழந்தைகளை நாம் எப்படி ஸம்ரக்ஷணை பண்ண முடியும்? ஆதலால், குழந்தைகளுடைய ஸமரக்ஷணையை நாடி ஏகபத்நீவ்ரதம் சரியான அனுஷ்டானம் என்று முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது. 

தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ்ப் பாஷையைப் ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உபபாஷையாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசீயம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியும் என்பதில் ஐயமில்லை. தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண சஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும். இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி, ஆர்யபாஷா விரோதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்துவிடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேசமுழுதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும், தமிழ் நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக. 

ஆரம்பப் பள்ளிக்கூடம்: உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக் கூடம் வீதமாக எத்தனை பள்ளிக் கூடங்கள் ஸாத்யமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள். ஆரம்பத்தில் மூன்று உபாத்தியாயர்கள் வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் போதும். இவர்களுக்கு சம்பளம் தலைக்கு மாஸம் ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு குறையாமல் ஏற்படுத்த வேண்டும். உபாத்தியாயர்கள் பி.ஏ., எம்.ஏ. பட்டதாரிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மெட்றிகுலேஷன் பரீக்ஷை தேறினவர்களாக இருந்தால் போதும். மெட்றிகுலேஷன் பரீஷைக்குப் போய் தவறினவர்கள் கிடைத்தால் மிகவும் நல்லது. இந்த உபாத்தியாயர்களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்க வேண்டும். இந்த உபாத்யாயர்களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்கவேண்டும். திருஷ்டாந்தமாக இங்ஙனம் தமிழ் நாட்டில் ஏற்படும் தேசீயப் பாடசாலைகளில் உபாத்யாயர்களாக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வதர்மாபினமும், எல்லா ஜீவர்களிடத்திலும் கருணையும் உடைய உபாத்யாயர்களைத் தெரிந்துதெடுத்தால் நன்று. அங்ஙனம் தேசாபிமானம் முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கெனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைத்த போதிலும், பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுதற்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆரோக்கியமும், திட சரீரமும் உடைய உபாத்தியாயர்களைத் தேர்ந்தெடுப்பது நன்று.

பாடங்கள்

(அ) எழுத்து, படிப்பு, கணக்கு.

(ஆ) இலேசான சரித்திரப் பாடங்கள்.

வேதகால சரித்திரம், புராண கால சரித்திரங்கள், பெளத்த காலத்துச் சரித்திரம், ராஜபுதனத்தின் சரித்திரம் இவை மிகவும் சிரத்தையுடன் கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடம் ஏற்படுத்தப்போகிற கிராமம் அல்லது பட்டணம் எந்த மாகாணத்தில் அல்லது எந்த ராஷ்ட்ரத்தில் இருக்கிறதோ, அந்த மாகாணத்தின் சரித்திரம் விசேஷமாகப் பயிற்றுவிக்கப் படவேண்டும். [இங்கு நான் மாகாணம் அல்லது ராஷ்ட்ரம் என வகுத்திருப்பது சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் முதலிய தற்காலப் பகுதிகளைக் குறிப்பதன்று; பாஷைப் பிரிவுகளுக்கு இசைந்தவாறு வகுக்கப்படும் தமிழ்நாடு, தெலுங்குநாடு, மலையாள நாடு முதலிய இயற்கைப் பகுதிகளைக் குறிப்பது.] இந்தச் சரித்திரங்களில் மஹா கீர்த்தி பெற்று விளங்கும் பருவங்களை உபாத்தியாயர்கள் மிகவும் உத்ஸாகத்துடனும், ஆவேசத்துடனும், பக்தி சிரத்தையுடனும் கற்பிக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டும். அதிபால்யப் பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன. ஆதலால், பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தின் அற்புதமான பகுதிகளை யூட்டி, அசோகன், விக்ரமாதித்யன், ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜுனன் இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும், அவற்றால் அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமைகளையும் பிள்ளைகளின் மனதில் பதியும்படி செய்வது, அந்தப் பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருத்தி மேன்மைப் படுத்துவதற்கு நல்ல ஸாதனமாகும். 

தேச பாஷையின் மூலமாகவே இந்தச் சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்கலும் கற்பிக்கப் பட வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாஷையின் மூலமாகப் பயிற்றப்படாத கல்விக்கு தேசீயக் கல்வி என்ற பெயர் செலுத்துதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ? இது நிற்க. 

ஹிந்து தேச சரித்திரம் மாத்திரமே யல்லாது ஸெனகர்யப்பட்டால் இயன்றவரை அராபிய, பாரஸீக, ஐரிஷ், போலிஷ், ருஷிய, எகிப்திய, இங்கிலீஷ், ப்ரெஞ்சு, அமெரிக்க, இத்தாலிய, கிரேக்க, ஜப்பானிய, துருக்க தேசங்கள் முதலியவற்றின் சரித்திரங்களிலும் சில முக்கியமான கதைகளும் திருஷ்டாந்தங்களும் பயிற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் நல்லது. 

(இ) பூமி சாஸ்திரம்

ஆரம்ப பூகோளமும், அண்ட சாஸ்திரமும், ஜகத்தைப் பற்றியும், ஸூர்ய மண்டலத்தைப் பற்றியும், அதைச் சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும், நக்ஷத்திரங்களைப் பற்றியும், இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பூமிப் படங்கள், கோளங்கள், வர்ணப் படங்கள் முதலிய கருவிகளை ஏராளமாக உபயோகப்படுத்த வேண்டும். ஐந்து கண்டங்கள், அவற்றிலுள்ள முக்கிய தேசங்கள், அந்தத் தேசங்களின் ஜனத்தொகை, மதம், ராஜ்ய நிலை, வியாபாரப் பயிற்சி, முக்கியமான விளை பொருள்கள், முக்கியமான கைத்தொழில்கள் இவற்றைக் குறித்து பிள்ளைகளுக்குத் தெளிந்த ஞானம் ஏற்படுத்த வேண்டும். முக்கியமான துறைமுகப் பட்டணங்களைப் பற்றியும் அவற்றில் நடைபெறும் வியாபாரங்களைக் குறித்தும் தெளிந்த விவரங்கள் தெரிய வேண்டும். மேலும் இந்தியர்களாகிய நம்மவர் வெளித்தேசங்களில் எங்கெங்கே அதிகமாகச் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்ற விஷயம் பிள்ளைகளுக்குத் தெரிவதுடன், அங்கு நம்மவர் படிப்பு, தொழில், அந்தஸ்து முதலிய அம்சங்களில் எந்த நிலையிலே இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிய வேண்டும். மேலும் உலகத்திலுள்ள பல தேசங்களின் நாகரிக வளர்ச்சியைக் குறித்து, பிள்ளைகள் தக்க ஞானம் பெற வேண்டும். 

பாரத பூமி சாஸ்த்ரம், இந்தியாவிலுள்ள மாகாணங்கள், அவற்றுள் அங்குள்ள தேச பாஷைகளின் வேற்றுமைக்குத் தகுந்தபடி இயற்கையைத் தழுவி ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் – இவை விசேஷ சிரத்தையுடன் கற்பிக்கப் படவேண்டும். வெளி மாகாணங்களைக் குறித்துப் பின்வரும் அம்சங்களில் இயன்றவரை விஸ்தாரமான ஞானமுண்டாக்க வேண்டும்: அதாவது, பாரத பூமி சாஸ்த்ரத்தில், மற்ற மாகாணங்களில் வசிக்கும் ஜனங்கள், அங்கு வழங்கும் முக்கிய பாஷைகள், முக்கியமான ஜாதிப் பிரிவுகள், தேச முழுமையும் வகுப்புக்கள் ஒன்று போலிருக்கும் தன்மை, மத ஒற்றுமை, பாஷைகளின் நெருக்கம், வேதபுராண இதிஹாஸங்கள் முதலிய நூல்கள் பொதுமைப்பட வழங்குதல், இவற்றிலுள்ள புராதன ஒழுக்க ஆசாரங்களின் பொதுமை, புண்ணிய க்ஷேத்திரங்கள், அவற்றின் தற்கால நிலை, இந்தியாவிலுள்ள பெரிய மலைகள், நதிகள் இந்தியாவின் விளைபொருள்கள், அளவற்ற செல்வம், ஆஹார பேதங்கள், தற்காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறியிருக்கும் பஞ்சம் தொத்து நோய்கள் இவற்றின் காரணங்கள், ஜல வஸதிக் குறைவு, வெளி நாடுகளுக்கு ஜனங்கள் குடியேறிப்போதல் – இந்த அம்சங்களைக் குறித்து மாணக்கருக்குத் தெளிவான ஞானம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பாரத தேசத்தின் அற்புதமான சிற்பத் தொழில்கள் கோயில்கள், இவற்றைப்பற்றி மாணாக்கருக்குத் தெரிவிக்க வேண்டும். 

உங்கள் சொந்த ராஷ்ட்ரம் அல்லது மாகாணத்தின் பூமி சாஸ்திரம்.

இது கற்றுக்கொடுப்பதில், ஜனப்பாகுபாடுகளைப் பற்றிப் பேசுமிடத்து, ஹிந்துக்கள் மகம்மதியர்கள் என்ற இரண்டு பிரிவுகளே பிரதானம் என்பதையும், இவர்களில் முகம்மதியர்களிலே பெரும்பாலார் ஹிந்துக்களின் சந்ததியில் தோன்றியவர்கள் என்பதையும், அங்ஙனமின்றி வெளி நாட்டோரின் சந்ததியாரும் இப்போது முற்றியும் ஸ்வதேசிகளாக மாறிவிட்டனர் என்பதையும், மாணாக்கர்கள் நன்றாக உணரும்படி செய்ய வேண்டும். மேலும், பூமி சாஸ்திரப் பயிற்சியில் விளைபொருள் முதலியவற்றை திருஷ்டாந்தங்களின் மூலமாகத் தெளிவுபடுத்துவதுடன், இயன்றவரை பிள்ளைகளை யாத்திரைக்கு அழைத்துச் சென்று பிற இடங்களை நேருக்கு நேராகக் காண்பித்தல் நன்று. பூமிப் படங்கள், கோளங்கள் முதலியவற்றிலெல்லாம் பெயர்கள் தேச பாஷையிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.


தொகுப்பாசிரியர் பெ.தூரன் அவர்களின் குறிப்பு:

இக்கட்டுரை ஐந்து பகுதிகளாக 1920 மே மாதம் 13, 18, 20, 21, 28 என்ற தேதிகளில், சுதேசமித்திரனில் வெளியாகியுள்ளது. இவற்றைத் தொகுத்து ஒரே கட்டுரையாக சமூகம் என்ற பகுதியில் பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்டுள்ளார்கள். ஸ்ரீமான் ஜினராஜ தாஸரின் கருத்தையும், வேறு சில பகுதிகளையும் இக்கட்டுரையின் இரண்டாம் பாகமாகவும் தந்துள்ளார்கள். இதில் ஒரு சிலவற்றைப் பொருந்தாத முறையிலும் பதிப்பித்துள்ளனர். ஒரு பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, அப்படியே இங்கு சேர்த்துள்ளேன்.


ஆனால், சுதேசமித்திரனில் வெளியானதைவிட, இதில் சற்று விரிவாகவே இருக்கிறது.

தேசீயக்கல்வி (2) என்ற பகுதியும் புதிதாகச் சேர்ந்துள்ளது. என்ன காரணம் பற்றி இதைச் சேர்த்தார்கள் என்பதை அறிய வழியில்லை. 


பாரதியார் புதுச்சேரியை விட்டு மீண்டும் அன்றைய தமிழகத்திற்கு வந்துவிட்டார். ஆனால் 1920ஆம் ஆண்டு நவம்பர் மாத மத்தியில்தான் மித்திரனில் இரண்டாம் முறையாகச் சேர்ந்தார் என்று ஊஹிக்க முடிகிறது. தேதி திட்டமாகத் தெரியவில்லை.


தேசீயக்கல்வி என்ற கட்டுரையோ மே மாதத்தில் வெளியாகியுள்ளது. அது சமயம் பாரதியார் கடயத்திலிருந்துகொண்டு பலவித முயற்சிகள் செய்கின்றார். தமது நூல்களை வெளியிடுவதற்குப் பெரியதொரு திட்டம் வகுக்கிறார். அமிர்தம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்தவும் விரும்புகிறார். ஆனால் அவருக்குப் பொருள் உதவி செய்ய மக்கள் முன்வரவில்லை என்பது வருந்தத்தக்கது.


ஆனால், பாரதியார் தமது எழுத்துப் பணியை நிறுத்தவில்லை; சோர்வடையவில்லை.

இந்த நேரத்தில் எழுதியதே இக்கட்டுரை என்று கருதலாம். 


இக்கட்டுரை சிந்தித்தற்குரியது. தேசீயக் கல்வி எவ்வாறு அமைய வேண்டும் என்று பாரதியார் விரும்பினார் என்பதை இதில் அறிகிறோம். 


முதலாவது தேசீயக் கல்வியென்றால் அது தாய் மொழியில் அமையவேண்டும். 

அப்படியில்லாவிட்டால் அது தேசீயக் கல்வியாகமாட்டாது.


ஸ்லேட், பென்சில் என்பவற்றிற்குக்கூடத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்பது அவர் எண்ணம். இக்காலத்தில் உருவாகிப் பழக்கத்திற்கு வந்துள்ள கலைச்சொற்கள் அன்றி இருந்திருந்தால் நிச்சயம் அவற்றையே கையாண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

ஆசிரியருக்குக் குறைந்தது 30 ரூபாய் சம்பளம் என்று அவர் கூறுவது அக்காலத்திற்குப் பொருந்தியதேயன்றி, எக்காலத்திற்கும் அவர் சம்பளம் நிர்ணயம் செய்யவில்லை.

இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் இக்கல்வித்திட்டத்தை முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும் என்று பாரதியார் விழைகின்றார். அவர்களுக்குத் தனியாக அவரவர் மதம் போதிக்கப்படும் என்று உறுதி கூறுகிறார். இதில் எவ்விதமான குழப்பமும் உண்டாக நியாயமில்லை. அவர் எழுதியுள்ளதைக் கவனியுங்கள் – முக்கியமான குறிப்பு:- ஹிந்துக்களல்லாத் பிள்ளைகள் இப்பாடசாலைகளில் சேர்ந்தால், அவரவர் மதக் கொள்கைகளை அன்னியமத தூஷணையின்றி பெருந்தன்மையாகக் கற்றுக் கொடுப்பதற்குரியன செய்ய வேண்டும்.


இவ்வாறு கூறியிருந்தாலும், மற்ற சமயத்தவர்களுக்குத் தேசீயப் பாடத்திட்டத்தில் ஹிந்து சமயத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுள்ளதாகத் தோன்று. 


இதை அடிப்படையாகக்கொண்டு பலருக்கும் ஏற்றவாறு பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். பாரதியார் வழங்கியுள்ள தேசீயக் கல்வித்திட்டம் ஆழ்ந்து கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்தியப் பண்பாட்டை நன்குணர வழிசெய்வது. தேசீய ஒருமைப்பாட்டை உண்டாக்கவல்லது. “தேசீயக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது  மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம்” எவ்வளவு அழுத்தமாகப் பாரதியார் கூறியுள்ளார் பார்த்தீர்களா!


இவருடைய கல்வித்திட்டம் மாற்றத்திற்குரியதேயாகும். யாரும் என்றைக்கும் பொருந்திய திட்டத்தை வகுக்க முடியாது. இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமே முக்கியம். எளிய தமிழில் சொல்லித் தரவேண்டும், இயன்ற இடத்திலெல்லாம் தமிழ்ப்பெயர்களை வழங்கவேண்டும், என்றும் அவர் கூறியுள்ளதை நன்கு மனத்திற் கொள்ளவேண்டும். அன்று பாரதியாருக்குக் கிடைத்த சொற்களைப் பயன்படுத்தியுள்ளதையும் நோக்க வேண்டும்.

No comments:

Post a Comment