Friday, December 23, 2011

காமதேனு


நம்பிக்கையே காமதேனு

இன்று ராமானுஜ தரிசனம் முக்கிய ஹிந்து தரிசனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் ஆரம்பத்தில் அப்படி இல்லை. ராமானுஜ மதத்தைக் காக்கும் பொருட்டு ராமானுஜரின் முக்கிய சிஷ்யராகிய கூரத்தாழ்வான் கண்களைப் பறிகொடுக்கும்படியாக நேரிட்டது. இவருடன் பெரியநம்பி என்ற யோகிக்கும் அதே தண்டனை ஏற்பட்டது. பெரியநம்பி அப்போது கிழவர். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கொல்லையிலே பெரியநம்பி கண்போன வேதனையைப் பொறுக்கமாட்டாமல் பக்கத்தில் வேண்டியவர்கள் எவரும் இல்லாமல் கூரத்தாழ்வான் மடியில் படுத்துக்கொண்டு மஹா ஸ்ந்தோஷத்துடன் உயிர் துறந்தார். கூரத்தாழ்வானே “தரிசனத்துக்காகத் தரிசனத்தை இழந்தேன். அது எனக்குப் பெரிய பாக்கியம்” என்று மகிழ்ச்சி கொண்டாடினார். தம்முடைய கொள்கை நிலைபெறும் என்ற நம்பிக்கை அவர்கள் மனத்தில் உறுதியாக நின்றது.

நம்பினார் கெடுவதில்லை

சிவாஜி மஹாராஜா இளம்பிள்ளையாக இருந்தபோது மஹாராஷ்டிரம் என்ன நிலையில் இருந்தது? சிவாஜி இறக்கும்போது என்ன நிலைமை? சிவாஜி துணிவினால் ராஜ்ய ஸ்ம்பத்தை அடைந்தான். நம்பிக்கையினால் நெப்போலியன் ராஜா பிரான்ஸ் தேசத்தைக் கட்டியாண்டு ஐரோப்பா முழுவதிலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிறுத்தினான். நம்முடைய முயற்சியின் ஆரம்பத்தில் நம்மைப் பிறர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். பலர் துணைசெய்ய மாட்டார்கள். ஆனால் நம்பிக்கையைக் கைவிடாமல் இருந்தால் காலக்கிரமத்தில் வெளியுதவிகள் தாமே வரும். ஆரம்பத்தில் நமக்கு நாமே துணை. எத்தனை இடையூறுகள் எவ்வளவு பெரிதாகி வந்தபோதிலும் எடுத்த காரியத்தை ஒரே உறுதியாக நடத்திக்கொண்டு போவதே ஆரிய லக்ஷணம். அவ்வாறு செய்யக் கூடியவனே மனிதரில் சிறந்தவன். 

நம்பினார் கெடுவதில்லை
நான்கு மறைதீர்ப்பு – இது
நான்கு மறைதீர்ப்பு.

திருநாவுக்கரசர்

மனிதனுக்குப் பகை புறத்திலில்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்து கிடக்கிறார்கள். பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்கள் நம்மை ஐயம் அடைய வொட்டாமல் தடுக்கும் உட்பகைகளாம். இவை அனைத்துக்கும் ஒரே பெயர்: அதாவது, நம்பிக்கைக் குறைவு. இந்த ராக்ஷஸனை அழித்தாலொழிய நமக்கு நல்ல காலம் வராது. பகீரதன் கங்கையை வரவழைத்த கதையை இந்தக் காலத்தில் நாம் பொய்க் கதையாகச் செய்துவிட்டோம். முன்னோர் அக்கதையின் உட்பொருளைக் கொண்டனர். நம்பிக்கையினால் ஆகாய கங்கையைப் பூமியிலே வரவழைத்தார்களாம். எத்தனை பெரிய ஆபத்துக்கள் வந்து குறுக்கிட்ட போதிலும், அவற்றை நம்பிக்கையினால் வென்றுவிடலாம். 

“கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே”

என்று திருநாவுக்கரசு சுவாமி பாடியிருக்கிறார்.

சில முயற்சிகள்

இக்காலத்திலே பலர் நமது பாஷைகளை ஒளிமிகச் செய்து பூமண்டலத்தார் வியக்கும்படி செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். பலர் நமது பூர்வ சாஸ்திரங்களின் உண்மையை உலக முழுவதும் கேட்டு உஜ்ஜீவிக்கும்படி செய்யவேண்டுமென்று பாடுபடுகிறார்கள். பலர் நமது நாட்டுச் செல்வத்தை வெளியேறவொட்டாமல் தடுக்க வழி தேடுகிறார்கள். பலர் ஹிந்து தேசத்துக்குத் தன்னாட்சி வேண்டுமென்று தொழில் செய்து வருகிறார்கள். பலர் ஆரிய வேதத்தைச் சரண் புகுந்து பூமண்டலம் வாழும்படி செய்ய  வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறார்கள். 
இவ்வனைவருக்கும் வெற்றி உண்டு; நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு.

ராமானுஜர் வெள்ளையுடை தரித்தது

சோழனுடைய பயத்தாலே ராமானுஜமுனி ஸ்ந்நியாஸி வேஷத்தை மாற்றி ஸ்ரீரங்கத்தை விட்டுப் புறப்பட்டு நீலகிரிச் சாரலில் வேடர்களுடைய உதவியினால் தேனும் தினைமாவும் தின்று பசி தீர்த்துக் கொண்டு படாத பாடெல்லாம்பட்டு மைசூர்ப் பக்கத்திலே போய் வாழ்ந்தார். “இனிமேல் ராமானுஜ கூட்டம் அதிகப்படாது; ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட்டோம்” என்று ராஜா நினைத்தான். அநுபவத்தில் பார்த்தீர்களா? அந்த ராஜா ராமானுஜருடைய நம்பிக்கையைக் கணக்கிலே சேர்க்கவில்லை. 

சிலுவை

யூதர்களை ரோம தேசத்தார் வென்று யூதநாட்டில் பிலாத்து ரோமன் ராஜாதிகாரியாய்விட்டான். இயேசுகிருஸ்து தெய்வத்தை நம்பி விடுதலையை முழக்கினார். யூத குருக்களே அவருக்கு விரோதமாய் அன்னியனான அதிகாரியிடம் கோள் மூட்டிவிட்டார்கள். உள்ளூர் யோக்கியர்கள், வெளிநாட்டு யோக்கியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கிருஸ்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றார்கள். ‘கிருஸ்து மதத்தையே கொன்றுவிட்டோம்’ என்று அந்த மூடர்கள் நிச்சயித்தார்கள். இன்று கிருஸ்து மதம் உலக முழுவதையும் சூழ்ந்து நிற்கிறது. வருந்தினால் வாராதது ஒன்றுமில்லை.

நம்பிக்கையின் முக்கிய லக்ஷணம்

நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லக்ஷணம் என்னவென்றால் விடாமுயற்சி. மனத்திற்குள் நிலைத்த நம்பிக்கை இருந்தால் செய்கை தடைப்படுமா? முயற்சி தூங்குமா? இடுக்கண் பயமுறுத்துமா? உள்ளம் சோருமா? ராமானுஜர் சோழநாட்டிலிருந்து போகும் காலத்தில் தம்பின்னே தம்மைப் பிடித்துச் செல்லும்பொருட்டு, குதிரைப்படை வருகிறது என்று கேள்விப்பட்ட பொழுது, தம்முடன் வந்த சிஷ்யர்களிடம் சொல்லிய மந்திரம் நல்ல மந்திரம்:

“கொடுமை செய்யும் கூற்றமும்
என் கோலாடிகுறுகப் பெறா.”

‘எனது கோல் ஆடும்பொழுது எமனும் கிட்டவரமாட்டான்’ என்று சொன்னார். அதற்குப் பெயர் தான் நம்பிக்கை.

முஹம்மது நபி

‘பழைய பொய்ச்சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழவேண்டும்’ என்று முஹம்மது நபி அலகிவஸல்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும் கொலைசெய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்று சதி செய்து கொண்டிருக்கையிலே, அந்த மஹான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும்போது பின்னே அவரைப் பிடிக்கும்பொருட்டாகக் குராயிஷ் குதிரைப் படை துரத்திக்கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன் அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்திவரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்துபோய், ‘இனி என்ன செய்வது?’ என்று தயங்கினான். அப்போது நபி, “அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை உலகத்தில் நிலைநிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும்வரை எனக்கு மரணம் இல்லை. என்னுடன் இருப்போர் பயப்படாமல் இருந்தால் அவர்களுக்கும் இல்லை” என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப் படையோர் இடந் தெரியாமல் ஏமாறித் திரும்பினார்கள். முஹம்மது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தாமே ராஜேசுவரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலைநிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு; அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்.

No comments:

Post a Comment