Wednesday, December 28, 2011

புனர் ஜன்மம் 1


புனர் ஜன்மம் உண்டு.

மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்துபோனதாக வைத்துக் கொள்ளுவோம். அவர் திரும்பவும் பிறப்பாரா? தெரு வழியாக ஒருவன் நடந்து போகும்போது காலிலே ஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக் கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா? 

இதையெல்லாம் பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன. அவற்றிலே படித்துக் கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்ல வந்த கதை இதுவன்று. நான் சொல்ல வந்த விஷயம் ஹிந்து ஸ்தானத்தின் புனர் ஜன்மம்.

‘ஹிந்து ஸ்தானம்’ என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இது நமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக் கூட்டத்திற்கும் பெயர். இந்த ஜனக் கூட்டத்திற்கு ‘பாரத ஜாதி’ என்றும் பெயர் சொல்வதுண்டு.

பாரத ஜாதி

பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்யாகுமரி முனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்று சேர்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்யம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு ‘பாரத தேசம்’ என்று பெயர் உண்டாயிற்று. கங்கையிலே வந்து சேரும் வாய்க்கால்களெல்லாம் கங்கையாகவே மாறிவிடும். பாரத தேசத்தில் வந்து குடியேறித் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்பவர்களெல்லாம் நமது ஜனக் கூட்டத்தைச் சேர்ந்தவராகின்றனர்.

கிருஸ்துவர்களாயினும், பார்ஸிகளாயினும், மகம் மதியராயினும், எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடிய போதிலும், பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களை யெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும். இது ஒரே ஜாதி; பிரிக்க முடியாதது; அழிவில்லாதது. இதற்கு ஆதாரமும் மூலபலமுமாவது யாதெனில், ஆர்ய ஸம்பத்து. அதாவது ஆரியரின் அறிவும், அந்த அறிவின் பலன்களும்.

ஆர்ய ஸம்பத்து

ஸம்பத்து என்பது ஸம்ஸ்கிருதச் சொல். இதன் பொருள் செல்வம். ஆனால் இங்கே செல்வம் என்பது திரவியத்தையும், பூஸ்திதியையும், ஆடு மாடுகளையும் மாத்திரமே குறிப்பிடுவதன்று. (1) அறிவுச் செல்வம், (2) ஒழுக்கச் செல்வம், (3) பொருட் செல்வம் ஆகிய மூன்றையும் குறிப்பிடும். ‘ஆர்ய ஸம்பத்து’ என்பது ஹிந்துக்களுடைய அறிவு வளர்ச்சி.

நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் – இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ‘ஆர்ய ஸம்பத்து’. காளிதாஸன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளஸீதாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் திருக்குறள், ஆண்டாள் திருமொழி – இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக் கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் – இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆர்யஸம்பத்து. எனவே ஆர்ய ஸம்பத்தாவது ஹிந்துஸ்தானத்தின் நாகரிகம். இந்த ஸம்பத்தைப் பாதுகாக்கும் வரையில் இந்த ஜாதிக்கு உயிருண்டு. இந்த ஸம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்தால், இந்த ஜாதியைச் செல் அரித்துவிடும்.

இந்த ஆர்யஸம்பத்தை உலகம் உள்ளரவரை ஸம்ரக்ஷணம் செய்து, மேன்மேலும் ஒளியும் சிறப்பும் உண்டாகும்படி செய்யும் கடமை தேவர்களால் பாரத ஜாதிக்கு ஏற்படுத்தப்பட்ட கடமையாகும்.

இடையில் நமக்கு நேர்ந்த கேடு

இந்த ஆர்ய ஸம்பத்தை நாம் பல பல நூற்றாண்டுகளாக ஆதரித்துக் கொண்டு வந்தோம். சென்ற சில நூற்றாண்டுகளாக இதில் துருப் பிடிக்க இடங்கொடுத்துவிட்டோம். தேவர்கள் நமக்குக் கொடுத்த கடமையைக் கர்வத்தாலும், சோம்பலாலும், சிறுமையாலும் உல்லங்கனம் செய்யத் தொடங்கினோம். தேவர்கள் ‘இந்த பாரத ஜாதியைக் கொஞ்சம் செல் அரிக்கக் கடவது’ என்று ஆசீர்வாதம் பண்ணினார்கள்.

மலைப் பாம்புக் கதை கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? அதன் வாலிலே தீப்பற்றி எரியுமாம். மலைப்பாம்பு சுகமாகக் குறட்டுவிட்டுத் தூங்குமாம். செல்லரித்துக்கொண்டு போனது நமது ஸ்மரணையிலே தட்டவில்லை. அத்தனை கர்வம், அத்தனை கொழுப்பு, அத்தனை சோம்பர்.
நமது கவிதையிலே ஆனந்தம் குறையத் தொடங்கிற்று, ருசி குறைந்தது. கரடுமுரடான கல்லும் கள்ளிமுள்ளும் போன்ற பாதை நம் கவிகளுக்கு நல்ல பாதையாகத் தோன்றலாயிற்று. கவிராயர் ‘கண்’ என்பதைச் ‘சக்கு’ என்று சொல்லத்  தொடங்கினார். ரஸம் குறைந்தது; சக்கை அதிகப்பட்டது. உண்மை குறைந்தது; பின்னல் திறமைகள் அதிகப்பட்டன.

சவியுறத்தெளிந்து தண்ணென் றொழுக்கமும்தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்தகோதா வரியினை வீரர் கண்டார்

என்று கம்பன் பாடியிருக்கின்றான்.

‘சவி’ என்பது ஒளி; இது வடசொல்; கம்பன் காலத்தில் அதிக வழக்கத்திலிருந்தது போலும். “ஒளி பொருந்தும்படி தெளிவுகொண்டதாகி, தண்ணென்ற (குளிர்ந்த) நடையுடையதாகி, மேலோர் கவிதையைப் போலக் கிடந்தது கோதாவரி நதி” என்று கம்பன் வர்ணனை செய்கிறான். எனவே, கவிதைகளில் ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்கவேண்டுமென்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை.

மேலும், நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட நூல்கள் அக்காலத்துப் பாஷையைத் தழுவினவை. காலம் மாற மாற, பாஷை மாறிக்கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்கவேண்டும். அருமையான உள்ளக்காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனால் சென்ற சில நூற்றாண்டுகளாக, புலவர்களும் சாமியார்களும் சேர்ந்து வெகு ஸாதாரண விஷயங்களை அஸாதாரண அலெளகிக அந்தகார நடையில் எழுதுவதுதான் உயர்ந்த கல்வித் திறமை என்று தீர்மானஞ் செய்துகொண்டார்கள்.

இடைக்காலத்து ஸங்கீதம்

பாரத தேசத்து ஸங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து ஸங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்போலவே ஸங்கீதத்திலும் நவரஸங்களின் தொழில் இருக்க வேண்டும். நவரஸங்களைப் பற்றி இந்தப் பத்திரிகையிலே தனியாக ஒரு வியாஸம் பின் எழுதப்படும். இன்ன இன்ன ராகங்களிலே இன்ன இன்ன சமயங்களில் இன்ன இன்ன ரஸங்கள் தோன்றப் பாடவேண்டுமென்ற விதிகள் எல்லாம் பூர்வ காலத்து நூல்களிலே காணப்படுகின்றன. கீர்த்தனத்திலுள்ள சொற்களின் அர்த்தமும் ராகத்தின் ஒளியும் ரஸத்திலே ஒன்றுபட்டிருக்க வேண்டும். தியாகையர் காலம்வரை நமது தேசத்து ஸங்கீதம் ஒலியுடன் இருந்தது. பிறகு இதிலும் இருள் சேரத் தொடங்கிவிட்டது. பாட்டிலே ரஸச் சேர்க்கை கிடையாது. அப்படியே சேர்த்தாலும் சோக ரஸம் (கருண ரஸம்) தான் சேர்ப்பார்கள். மற்றவை மடிந்து போயின. பாட்டுக்கு இசைந்தபடி தாளம் என்பது மாறிப் போய், தாளத்துக்கு இசைந்தபடி பாட்டாகிவிட்டது. ‘இன்பத்தைக் காட்டிலும் கணக்கே பிரதானம்’ என்று முடிவு செய்து கொண்டார்கள். இன்பமும் கணக்கும் சேர்ந்திருக்க வேண்டும். இன்பமில்லாமல் கணக்கு மாத்திரம் இருந்தால், அது பாட்டாகாது.

மறுபிறப்பு

இடைக்காலத்தே நமக்குச் சேர்ந்த கேட்டிற்கு ஸங்கீதத்தையும் கவிதையையும் திருஷ்டாந்தங் காட்டினோம். ஆனால், இந்தக் கேடு அவை இரண்டையும் மாத்திரமே தொட்டு நிற்கவில்லை. நமது சித்திரத் தொழில், நமது சிற்பம், நமது ஜனக்கட்சி, ஜன நீதி, நமது சாஸ்திரம், தலை, கால் – எல்லாவற்றிலும் இந்தக் கேடு பாய்ந்துவிட்டது. நோய் முற்றிப்போயிருந்தது. பராசக்தி நல்ல வேளையில் நமக்குள் உயர்ந்த வைத்தியர் பலரை அனுப்பினாள். அவளுக்கு நம்மீது கிருபை வந்துவிட்டது. எனவே, பிழைத்தோம். ஆனாலும், இம்முறை பிழைத்தது புனர்ஜன்மம். இந்தப் புனர்ஜன்மத்தின் குறிகளை எல்லாவற்றிலும் காண்கிறோம். பாரதஜாதி புதிதாய்விட்டது. தற்காலத்திலே பூமண்டலத்து மஹா கவிகளில் நம் ரவீந்த்ரநாதர் ஒருவர் என்று உலகம் ஒப்புக்கொள்ளுகிறது. இதுவரை ஐரோப்பிய பண்டிதர்கள் இயற்கை நூல் (ப்ரகிருதி சாஸ்திரம்) தமது விசேஷ உடைமை என்று கருதி வந்தார்கள். இப்போது நம் ஜகதீச சந்திர வஸு அந்த வழியில் நிகரற்ற திறமை பெற்றவர் என்பதை மேல் நாட்டு வித்துவான்களில் ஒப்புக்கொள்ளாதார் யாருமில்லை. தமிழ் நாட்டிலே புதிய கவிதையும் சாஸ்திர ஒளியும் விரைவிலே தோன்றும். உலகம் பார்த்து வியப்படையும்.

செத்துப் பிழைத்தோம். ஆனால் உறுதியாக நல்ல வயிரம் போலே பிழைத்துவிட்டோம். புதிய ஜன்மம் நமக்கு மிகவும் அழகான ஜன்மமாகும்படி தேவர்கள் அருள் புரிந்திருக்கிறார்கள். அதன் பொருட்டு அவர்களை இடைவிடாமல் வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment