Thursday, December 15, 2011

லோக குரு 2

சங்கங்களே தேசத்துக்குப் பொது’ என்பதை ஒரே வார்த்தையாக எங்கும் நிலை நிறுத்த பாரத பூமி உலகத்தாருக்கு எவ்விதமான ஞானத்தைக் கொடுத்துப் புகழைக் கொள்ளுமென்பதை விளக்குவதற்கு முன்பாக, சாஸ்திர(ஸயின்ஸ்) வார்த்தை ஓரிரண்டு சொல்லி முடித்துவிடுகிறேன். ‘செடியின் நாடி மண்டலம் மனிதனுடைய நாடி மண்டலத்தைப் போலவே உணர்ச்சித் தொழில் செய்கிறது’ என்பதை உலகத்தில் சாஸ்திர நிரூபணத்தால் ஸ்தாபனம் செய்தவர் நம் ஜகதீச சந்திர வஸு. உலோகங்களிலும் இவர் பல  புதிய சோதனைகள் செய்திருக்கிறார். ஒளி நூலில் மஹா வித்வான். தந்தியில்லாத தூரபாஷைக் கருவியை ‘மார்க்கோனி’ பண்டிதர் உலகத்துக்கு வழக்க்ப்படுத்து முன்பே, ஜகதீச சந்திரர் அந்த விஷயத்தைப் பற்றித் துல்யமான ஆராய்ச்சிகள் செய்து முடித்திருக்கிறார். செடிகளுடைய ப்ராணனில் நாடியுணர்ச்சி எங்ஙனமெல்லாம் தொழில் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்ததே, இவர் மனித சாஸ்திரத்துக்கு இதுவரை செய்திருக்கும் உபகாரங்களில் பெரிது. இப்போது சில வருஷங்களாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பண்டிதக் கூட்டத்தார் ஜகதீச வஸுவினிடம் மிகுந்த மதிப்புப் பாராட்டி வருகின்றனர்; நல்ல புகழ்ச்சி கூறுகின்றனர். நவீன சாஸ்திர ஆராய்ச்சிக்கு மிகவும் நுட்பமான கருவிகள் வேண்டும். ஜகதீச வஸுவின் ஆராய்ச்சிக் கருவிகள் கல்கத்தாவில் நமது தேசத் தொழிலாளிகளாலே செய்யப்படுவன. ஐரோப்பிய ராஜதானிகளிலே இத்தனை நேர்த்தியாக அந்தக் கருவிகளைச் செய்யத்தக்க தொழிலாளிகள் இல்லை. ஆகையால், அங்குள்ள பண்டிதர்கள் புதிய வழியில் செடியாராய்ச்சிக்கு வேண்டிய கருவிகளையெல்லாம் கல்கத்தாவிலிருந்து வரவழைத்துக்கொள்ளுகிறார்கள். 

சாஸ்திரம் பெரிது. சாஸ்திரம் வலியது. அஷ்ட மஹா சித்திகளும் சாஸ்திரத்தினால் ஒருவேளை மனிதனுக்கு வசப்படலாம். பூர்வ காலத்தில் பலவகைக் கணித சாஸ்திரங்களும் இயற்கை நூல்களும் பாரத நாட்டிலேதான் பிறந்து பின்பு உலகத்தில் பரவியிருப்பதாகச் சரித்திர ஆராய்ச்சியிலே தெரிகிறது. இப்போது “ஸ்யின்ஸ்” பயிற்சியில் இவ்வளவு தீவிரமாக மேன்மை பெற்றுவருகிறோம்; காலக் கிரமத்தில் தலைமை பெறுவோம். 

இனிமேல், கதையைச் சுருக்கி விடவேண்டும்; வருங்காலத்தில் உலகத்துக்குப் பாரத தேசம் என்ன பாடம் கற்பிக்கும்? எதனால் இந்நாடு ‘லோககுரு’ ஆகும்? உலகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கப்போவது கர்மயோகம். கடமையைச் செய்து, தவறாதபடி செய்து, இன்பத்தோடு இருக்க வழி எப்படி? யோகமே வழி. “யோகமாவது செய்கைத் திறமை” என்று பகவான் கீதையில் சொல்லுகிறார். பூமண்டலத்துக்கு யோகம் நாட்டுவோம். 

சென்னைக் கிருஸ்துவ கலாசாலையில் டாக்டர் மில்லர் என்று ஒரு பாதிரி இருந்தார். அவர் நல்ல புத்திசாலி என்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்துமதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்ற எல்லா மதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்து கொண்டார். கடவுள் சர்வாந்தர்யாமி என்பது எல்லா மதத்திலும் உண்டு. ஆனால் இங்கே தான் அதைத் தெளிவாகச் சொல்லுகிறோம். பிற மதங்களில் தெளிவில்லை. 

‘அந்தர்யாமி’ – ‘உள்ளே செல்வோன்’ ‘உள்ளே நிற்போன்.’ ‘உள்ளே செல்வோன்’ என்பது தாதுப் பொருள், ‘உள்ளே நிற்போன்’ என்பது வழக்கப் பொருள். 

“தெய்வம் எதற்குள்ளேயும் நிற்கிறது” என்று சாதாரணமாக எல்லோரும் சொல்லுகிறார்கள். இதன் அர்த்தத்தை அவர்கள் நன்றாக மதியினாலே பற்றிக் கொள்ளவில்லை. “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்.”

ஆம், அதன் பொருள் முழுதையும் கண்டாயா? சாத்தன் எழுதுகிறான், கொற்றன் எழுதச் சொல்லுகிறான். எழுதுவோன், எழுதுவிப்போன் – இரண்டும் தெய்வம். பன்றி சாகிறது; பன்றியாக இருந்து சாவது தெய்வம். ‘எதனிலும் உள்ளே நிரம்பிக்கிடக்கிறது’ என்றால், செய்கையெல்லாம் அதனுடையது என்று அர்த்தம். 

“இயற்கையின் குணங்களால் செய்கையெல்லாம் நடப்பன. அகங்காரம் கொண்ட மூடன் ‘நான் செய்கிறேன்’ என்று நினைத்துக்கொள்ளுகிறான்” என்று பகவத் கீதையிலே பகவான் சொல்லுகிறார். செய்கைகள் எல்லாம் பரமாத்மாவின் செய்கைகள். ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது.’ ‘என் செயலாலாவது யாதொன்றும் இல்லை.’

நமக்குப் பொறுப்பு இல்லை, தொல்லை இல்லை, செய்கை இல்லை; கடமை மாத்திரம் உண்டு. 

‘கடமையில் உனக்கு அதிகாரம், பயனிலே இல்லை’ என்பது கீதை. ‘செய்கையில்லாது நீங்கிவிடுவது’ என்றால், சோம்பேறியாய்விடுதல் என்று அர்த்தமில்லை. பகவத் கீதை மூன்றாம்  அத்தியாயத்தை ஒவ்வோர் ஆர்யனும் தினம் மூன்று வேளை வாசிக்க வேண்டும். 

முதலாவது விஷயம்: ‘ஒருவிதமான செய்கையும் இல்லாமல் சும்மா இருப்பது இவ்வுலகத்தில் எப்பொழுதும் சாத்தியப்படாது. நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உன்னை எப்போதும் பிரகிருதி செய்கையிலே புகுத்தி ஆட்டிக் கொண்டிருக்கிறாள். உன் இஷ்டப்படியெல்லாம் நடக்கவில்லை. நீ இஷ்டப்படுவதே மழை பெய்வதைப்போல் இயற்கையிலேயே விளையும் செய்கை. சித்தமே ஜடம்.’

இரண்டாவது விஷயம்: ‘நான் பிரிவில்லை என்று கண்டு, தெய்வமே உள்ளதாகையால் அதற்குச் சேவகமாக உலகத் தொழில்களைப் பிழையில்லாமல் செய்துகொண்டு வர வேண்டும். கடமையைத் தவிருவோன் விடுதலை பெற்றவன் அன்று. விடுதலையின் தலைமேலே ஒரு கடமை நிற்கிறது. தெய்வத்துக்கே கடமை உண்டு. பகவான் கர்மயோகி. ஸ்ந்நியாஸம் அவசியமில்லை. பெண்டு பிள்ளைகள் பொய் இல்லை. மற்ற மனிதர்கள் மண்கட்டிகள் அல்லர். அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடமைகள் உண்டு.’

‘கடமை செய்யாதவன் வயிறு பிழைப்பதே நடக்காது’ என்று கிருஷ்ணன் அழுத்திச் சொல்லுகிறார்.
‘இவ்வுலகத்துச் செய்கைகளுக்கு நாம் பொறுப்பில்லை’ என்று எல்லாச் செயல்களையும் ஈசனுக்கு அர்பணம் செய்துவிட்டோர் சோம்பேறிகளாய், பிறருக்கு எவ்விதப் பயனும் இல்லாமல் வெறுமே பிறர் போடும் தண்டச்சோறு தின்றுகொண்டிருக்கும் துறவு நிலையிலே போய்ச் சேரும்படி நேரிடும்’ என்று சில புத்திமான்கள் பயப்படுகிறார்கள். ‘அப்படிப் பயப்பட இடம் இல்லை’ என்பதை வற்புறுத்திக் காட்டும் பொருட்டாகவே, நான் இந்த வார்த்தையை இத்தனை விஸ்தாரப்படுத்துகிறேன். 

‘தெய்வமே துணை’ என்று இருப்போர் ஓயாமல் தொழில் செய்துகொண்டிருப்பார்கள். தெய்வ பக்தி உண்மையானால், பரோபகாரம் அங்கே இருக்கும். பரோபகாரம் இல்லாத இடத்தில், தெய்வ பக்தி வேஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை. 

ஆங்கிலேயர், பிராஞ்சியர், ருஷியர், பெல்ஜியர், செர்வியர், யுனைடெட் ஸ்டேட்ஸ்காரர், இத்தாலியர், ஜப்பானியர், மாண்டிநீக்ரோவர், அல்பானியர், போர்ச்சுகேசியர், ருமானியர், க்யூபா நாட்டார், பனாமர், கிரேக்கர், சீய நாட்டார் ஆகிய பதினாறு தேசத்தாரும் ஜர்மனிக்கும் அதனுடன் சேர்ந்த ஆஸ்திரியா, துருக்கி, பல்கேரியா தேசத்தாருக்கும் விரோதமாகப் போர் புரிந்துவருகிறார்கள். மேன்மேலும் நம்முடைய நேசக் கட்சியாருக்குத்தான் துணை சேருகிறதே ஒழிய, ஜெர்மனிக்குப் புதிய துணை கிடையாது. மேற்கூறிய பதினாறு தேசங்களைத் தவிர, சீனா, ப்ரஜீல், பொலீவியா, க்வாடிமாலா, ஹொண்டூராஸ், நிகராகுவா, லிப்ரியா, ஹெய்தி, ஸாண்டோமிங்கோ முதலிய நாட்டார் மேற்படி ஜர்மனியருடன் தூது சம்பந்தங்களை நீக்கித் தமது விரோதத்தை உணர்த்தியிருக்கிறார்கள். 

இத்தனைக்கும் பயப்படாமல் அந்த மானங்கெட்ட ஜர்மனிக்காரப் பயல்கள் நேசக்கட்சியாருடைய நியாயங்களைக் காட்டிலும் தங்களுடைய இரும்பு வலிமையே பெரிய வலிமை என்று எண்ணி வீண் இறுமாப்புக் கொண்டு சண்டை நடத்திக் கொண்டு வருகிறார்கள். 

‘இன்றைகானாலும், நாளைக்கானாலும், நாளைன்றைக்கானாலும், ஒரு மாசம் சென்றாலும், ஒரு வருஷம் சென்றாலும், என்றைக்கானாலும், ஜர்மானியை நம்மால் தோற்கடிக்க முடியுமாதலால், ருஷ்யாவில் கோன்ஸ்கியை நீக்கி அதிகாரம் பெற்றிருக்கும் மாக்ஸி மிஸ்த் கட்சியார் ஜர்மனியுடன் தனிச் சமாதானமும் பேசத் தொடங்கியிருப்பது பெரிய காரியமில்லை. நாம் கடைசி ஆள், கடைசி ரூபாய் மிஞ்சும்வரை போரை நிறுத்தமாட்டோம்’ என்ற ஒரே உறுதியுடன் மிஸ்டர் லாயிட் ஜார்ஜ் முதலிய நேசக் கட்சி மந்திரிகள் பேசுகிறார்கள்.

இதனிடையே, ‘நேசக்கட்சியார் இந்தப் போரை நடத்திவரும் நோக்கந்தான் யாதோ?’ என்று கேட்டால், ‘ஒரு ஜாதியாரை மற்றொரு ஜாதியார் தம் இஷ்டப்படி அந்த அந்தத் தேசத்தாரால் ஆளப்பட வேண்டுமென்ற கொள்கையை நிலை நிறுத்தும் பொருட்டாகவும் சண்டை போடுகிறோம்’ என்று நேசக்கட்சி மந்திரிகளும் ப்ரசிடெண்ட்மார்களும், பத்திராதிபர்களும், சென்ற மூன்று வருஷங்களாகத் தினம் மூன்று முறை ஓதிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பாரத புத்திரராகிய ஹிந்து முஹமதியர்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, “சபாஷ்! நேசக் கட்சியாருக்கும் நமக்கு ஒரே நோக்கம். நம்முடைய தேசத்தில் ஆங்கிலேயர் தம் இஷ்டப்படி அரசு செலுத்தும் முறைமையை மாற்ற வேண்டும் என்றே நாமும் முயற்சி செய்து வருகிறோம். ஏற்கனவே, இங்கிலாந்தும் நம்முடைய கொள்கையைத் தழுவிட்டதாகச் சொல்லுகிறபடியால், இங்கிலாந்து கஷ்ட தசையில் இருக்கும் இத்தருணத்தில் நாம் இங்கிலாந்துக்கு இடையூறு செய்யாமல் இங்கிலாந்துக்கு நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும்” என்று தீர்மானம் செய்துகொண்டார்கள். 

பாரத தேசத்தாரில் லட்ச லட்சமான ஜனங்கள் இந்தப் போரில் மடிந்து ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தோம். கோடானுகோடி திரவியத்தைக் கொடுத்து வருகிறோம். இன்னும் சேனையில் ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் வாய் திறந்து கேட்டால், இங்கிலாந்து நமக்கு இப்போது சுயராஜம் கொடுக்கும். நம்மை ஏமாற்றாது. இந்தச் சமயத்தில், நாம் இத்தனை உதவு செய்யும்போது, காங்கிரஸ் முஸ்லீம் சபையார் சொல்வதை நாம் சரி என்று நினைக்கவில்லை. சண்டை முடியுமுன்பாக இப்பொழுதே கைமேல் சுயராஜ்யம் வேண்டும் என்று நம்மவர் கேட்க வேண்டும் என்று நான் சொல்லுகிறேன். சண்டை முடிந்த பிறகு சுயராஜ்யம் போதுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அது கிடைப்பது அரிதாகும், இப்பொழுதே ஏன் கொடுக்கும்படி கேட்கக் கூடாது? அயர்லாந்து தேசத்தில் சண்டை முடியுமுன்பாகவே ஸ்வராஜ்யம் கொடுப்பதற்குரிய முறைமைகளைப்பற்றி ஆலோசனை செய்வதற்காக ஒரு சபை நடந்துவருகிறது. அதில் ஸகல கட்சியாரும் சேர்ந்திருக்கிறார்கள். அதுபோலவே, இந்தத் தேசத்திற்கும் ஒரு சபை ஏற்படுத்த வேண்டும்; அதில் இங்கிலீஷ்ப் பிரதிநிதிகள் பாதித்தொகை, பாரதப் பிரதிநிதிகள் பாதித்தொகையாக இருந்து நடத்த வேண்டும். அவ்விதமான சபையை மந்திரி மாண்டேகு இந்தத் தேசத்தில் இருக்கும்போதே நியமிக்க வேண்டுமென்று நம்மவர் கிராமந்தோறும் சபைகள் கூடி, ‘கூ! கூ!’ என்று பெரிய சப்தம் போடவேண்டும். திராவிடக் கட்சியார் என்றும், இஸ்லாமியக் கட்சியார் என்றும் யாரோ சிலர் செய்யும் பொய் மேளக் கச்சேரியை நாம் இகழ்ந்து நகைத்து, ‘காங்கிரஸ் முஸ்லிம் வேண்டும். காங்கிரஸ் முஸ்லிம் சபைகளை எதிர்த்து, நமக்குச் சுயராஜ்யம் வேண்டாம் என்று சொல்லும் ஸ்வதேச விரோதிகளை அடக்கிவிட்டு, நாம் இப்போதே ஸ்வராஜ்யம் கேட்கும்படி நம் பிரதிநிதிகளாகிய காங்கிரஸ் முஸ்லிம் சபையாரைத் தூண்ட வேண்டும். 

மந்திரி மாண்டேகு சென்னைக்கு வந்திருப்பதால் இந்தச் சத்தம் கிராமங்களில் இடிமுழக்கம் போலே நடைபெற்று வர வேண்டும். 

ஜனங்களே! உடனே சுயராஜ்ய ஸ்தாபன சபை கூட்டும்படி இரைச்சல் போடுங்கள். அழுத பிள்ளை பால் குடிக்கும்.

No comments:

Post a Comment