Sunday, December 18, 2011

ஓம் சக்தி!


ஜனவகுப்பு

இனிமேல் யாரேனும் ஒரு மஹான் வந்து மனுஷ்யனைச் சாகாமல் நூறாண்டெனும் பயமில்லாது வாழக் கூடிய மருந்தும் உபாயமும் உலகத்துக்கு காண்பிக்கலாம். மனுஷ்யன் பாபத்தை விட்டால் அமரத் தன்மையை அடையலாம். ‘பாபத்திற்கு மரணம் சம்பளம்’ என்று கிருஸ்துவ வேதம் சொல்லுகிறது. பாபத்தை நீக்கி மனிதர் மரணத்தை வெல்லக்கூடிய காலம் வரலாம்.

ஆனால், இப்போதுள்ள நிலைமையில் மனிதன் இந்த உலகத்தில் வாழ்வது சதமில்லை. ‘இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பார் என்று எண்ணவோ திடமில்லையே’ என்று தாயுமானவர் சொன்னார்.

எங்கிருந்தோ வந்து இவ்வுலகத்தில் சில நாள் வாழ்கிறோம். செத்த பிறகு நம்முடைய கதி என்ன ஆகுமோ? கடவுளுக்குத்தான் தெரியும். மூன்றே முக்கால் நாழிகை உயிர் வாழ்வது சந்தோஷத்துடன் இருந்துவிட்டுப் போகக் கூடாதா? அடடா! இந்த பூமியில் மனித உயிருக்கும் எத்தனை கஷ்டம், எத்தனை பயம், எத்தனை இடையூறு, எத்தனை கொலை, எத்தனை துரோகம், எத்தனை பொய், எத்தனை கொடுமை, எத்தனை அநியாயம். ஐயோ பாவம்!

அடா, மனிதர்களே. எத்தனை சாஸ்திரங்களுக்கும், ஆக்கினைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நம் மனிதர் உட்பட்டிருக்கவில்லையா? ஒரு புதுக் கட்டுப்பாடு செய்து கொள்வோமே. அந்தக் கட்டுப்பாடு யாதெனில்: “ஒருவர்க்கொருவன் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவர்க்கொருவர் பயப்படல் இல்லை. மானிடரே, இந்த விரதம் எடுத்துக்கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி. தெருவில் நடக்கும்போதே முன்பின் தெரியாத மனிதர்கூட ஒருவர்கொருவர் கோபம் அல்லது அவமதிப்பு அல்லது பயத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனுஷ்ய நாகரிகம் வந்து சேர்ந்து இருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும். 

முதலாவது, சிலருக்குச் சோறு மிதமிஞ்சி இருக்க, பலர் தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்த்துவிட வேண்டும். இது இலக்கம் ஒன்று. பூமியின் மீதுள்ள நன்செய், புன்செய், தோப்பு, துரவு, சுரங்கம், நதி, அருவி, குப்பை, செத்தை, தரை – கடவுளுடைய சொத்தில் நாம் வேலி கட்டக்கூடிய பாகத்தையெல்லாம் – சிலர் தங்களுக்குச் சொந்தமென்று வேலி கட்டிக் கொண்டனர். பலருக்கு ஆகாசமே உடைமை. வாயு ஆகாரம். இதற்கு மருந்து என்னவென்றால் ‘எல்லோரும் சமானம், அண்ணன் தம்பிபோல’ என்ற புத்தி உண்டாய் ஏழைகள் வயிறு பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும். 

அது முடியாவிட்டால், ஐரோப்பாவில் ‘சோஷலிஸ்ட்’ கட்சியார் சொல்வது போல நிலத்தை ஸகலருக்கும் பொதுவென்று ராஜ்யவிதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். 

மனிதர் அத்தனை பேருக்கும் போதுமான ஆகாரம் பூமிதேவி கொடுக்கும். பூமிதேவியின் பயனை நேரே கையாளத் தெரியாமல் பொறாமையாலும், அறியாமையாலும் தாறுமாறாக விழல்படுத்தி, சோறு தேடும் இடத்தில் சோறு தேடாமல், ஒருவர்க்கொருவர் கொல்ல வழி தேடி, பலர் வயிறு வாடச் சிலர் வயிறு ஜீர்ண சக்தியில்லாமல் போக, மனிதர் பரிதாபகரமாகக் காக்கையிலும் கடைப்பட்ட வாழ்வு வாழ்ந்து வீணே நசித்துப் போகிறோம். ‘ஏழைகள் வருந்தினால் நமக்கென்ன?’ என்று நினைப்பவர் பரம மூடர். பலர் செளகரியப் படும்வரை சிலர் செளகரியம் அடைதல் இந்த உலகத்தில் சாத்தியமில்லை. பொருளாளி நல்ல உடுப்புக்கள் அணிந்துகொண்டு தெருவில் உலாவப் போவதையும், அவனுடைய கன்னத்தில் சதை உப்பியிருப்பதையும், அவனுடைய ஏவலாட்களின் தொகையும் சிறுமையும், மேற்படி பொருளாளி பிறரை அவமரியாதை செய்வதையும் கண்டு மயங்கிப் போய் அவன் பரமானந்த நிலையிலிருப்பதாக ஏழை நினைக்கிறான். அது தவறு. அவன் மனத்தில் ஒளிந்து கிடந்து அவன் உயிருக்கு நரகவேதனை செய்யும் துயரங்களை ஏழை அறியமாட்டான். ஒரு வகுப்பின் மனம் மற்றொரு வகுப்புக்குத் தெரியாமலும் ஒருவனுடைய உள்ளம் மற்றொருவனுக்குத் தெரிய இடமில்லாமலும், மனுஷ்ய நாகரிகம் அவ்வளவு மூடத்தனமான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. 

வறுமையின் பயன்

ஏழையின் அழுக்குத் துணியையும், அழுக்குடம்பையும், சிரைக்காத முகத்தையும் பார்த்து, பொருளாளியின் குழந்தைகள் மேற்படி ஏழை தமது மனுஷ்ய பதவிக்குத் தாழ்ந்த பன்றி, நாய், மாடு வகுப்பைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறார்கள். ஐரோப்பாவில் ஏழைக்கும் பொருளாளிக்கும் விரோதம் முற்றிப் போய், உள்நாட்டுச் சண்டைகள் நேரிட்டும், அப்படி நேரிடாதபடி தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஜனங்களை ஒன்று சேர்க்கும்பொருட்டாக வெளிநாடுகளின் மீது சில ராஜாக்கள் போர் தொடங்க, கண்டங்களில் போர் பரவியும், பூமண்டலம் தூள் தூளாகிறது. கிழக்குத் தேசங்களிலும், யுத்தமில்லாமல் சமாதானத்துடன் இருக்கும் இடங்களிலும் – திருஷ்டாந்தமாக நமது தமிழ் நாட்டுப் பறையர்கூட – கண்விழித்துத் தாங்கள் மனிதர் என்பதைத் தெரிந்து கொண்டு மற்ற ஜாதியாருக்குத் தாங்கள் சமானமென்று சபை கூட்டித் தீர்மானம் செய்கிறார்கள். மந்திரி மாண்டேகுவிடம் முறையிட்டார்கள். கிழக்குத் தேசங்களில் சமாதான எல்லைகளிலே கூட ஏழைகள் கண் திறந்து பொருளாளிகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

சுருங்கக் கூறுமிடத்து, சோற்றுக்காக மனிதர் ஒருவர்க்கொருவர் செய்துகொள்ளும் அநியாயம் நாய்களும் பன்றிகளும் தமது ஜாதிக்குள்ளே செய்யும் வழக்கமில்லை என்பது உலகப் பிரசித்தமான விஷயம். ஆங்கில பாஷையில் Lord Byron என்ற மகாகவி ஒரு சமயத்தில் மனிதரை ‘நாய்களே’ என்று கூறினார். பிறகு, உண்மையில் மனிதரைக்காட்டிலும் நாய் ஜாதி மேம்பட்டதாகையால், மனிதரை நாய்களே என்று சொல்லியதிலிருந்து நாய் ஜாதிக்கு அவமரியாதை செய்வதாக ஏற்படுமாகையால், அதை மாற்றி ‘ஏ மனிதரே’ என்று கூப்பிட்டார். 

தீர்ப்பு

அன்புதான் இதற்கெல்லாம் தீர்ப்பு. எல்லா மனிதருக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும், வெள்ளைக்கும், மஞ்சளுக்கும், செம்புக்கும், கருநிறத்து நீக்ரோவருக்கும் – சகலருக்கும் உள்ளே பரமாத்மா பரம புருஷனாகிய நாராயணனே அந்தர்யாமியாக நின்று வெளித்தொழில்களை நிகழ்த்துகிறார். ஆதலால் மானிடரே, சகோதர உணர்ச்சியே தீர்ப்பு. சகோதர உணர்ச்சியைப் பற்றிக் கவிதைகள் பாடுவதும் நீதி நூல்கள் புகழ்வதும் வர்த்தமான பத்திரிகைகள் கர்ஜனை செய்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. நடையில், எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அது நடைக்கு வர வேண்டும். 
கண்ணில்லாதவன் வான சாஸ்திரம் படிக்க முடியாது. இன்பமோ அன்புலகத்தைச் சேர்ந்த பதார்த்தம். ஆதலால் அன்பில்லாவிடின் இன்பமில்லை. இன்பத்தைத் தேடித் தேடி, எங்கும் எப்பொழுதும் எதனிலும் காணாமல் வருந்துகிற மானிடரே, கேளுங்கள். 

அன்புண்டானால் இன்பமுண்டு என்பதைப் புத்த பகவான் கண்டுபிடித்துச் சொன்னார். அந்த யுக்தியின் மகிமையை நேரே மனிதர் தெரிந்துகொள்ளாமல், அவர் காட்டிய பயனை அடையாமலே இருந்து வருகிறார்கள். அன்பு கொள்கையில் இருந்தால் போதாது; செய்கையில்  இருக்க வேண்டும். உன்னிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால் தேச நன்மைக்காகக் கொடுத்துவிட்டு நீ ஏழையாகிவிடத் துணிவாயானால், நீ உன் தேசத்தின் மீது அன்புடையவனாகக் கருதப்படுவாய். உன்னுடைய குழந்தையின் உயிரைக்காக்கும் பொருட்டாகப் புலியின் வாயில் நீ போய் முதலாவது கையிடத் துணிவாயானால், நீ குழந்தையிடம் அன்புடையவனாகக் கருதப்படுவாய். பறையனுக்கும் போஜனம் செய்வித்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சாப்பிட்டால், நீ மனுஷ்யனிடம் அன்புடையவனாக விளங்குவாய்.

No comments:

Post a Comment