Thursday, December 22, 2011

சக்தி தர்மம்


ஆத்மா உணர்வு; சக்தி செய்கை.

உலகம் முழுவதும் செய்கைமயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இவ்வுலகத்தை ஆளுகின்றது. இதைப் பூர்வ சாஸ்திரங்கள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்லும். 

ஆறு மதங்கள்

ஆதிசங்கராசார்யார் பெளத்த மதத்தை எதிர்த்த போது, தமக்குச் சார்பாக வேதத்தை ஒப்புக்கொள்ளும் எல்லா வகுப்புகளையும் ஒன்றாக்கிக் கொண்டனர். அக்காலத்தில் பெளத்தம், ஜைனம் என்ற வேத விரோதமான மதங்களில் சேராமல் வேதத்தை ஆதாரமாகக் கொண்டோர் ஆறு மதங்களாகப் பிரிந்து நின்றனர். 

இந்த ஆறு மதங்களில் எதையும் கண்டனம் செய்யாமல், சங்கராசார்யார் இவ்வாறும் வெவ்வேறு வகையான வைதிகப் படிகளென்றும், வேதாந்தமே இவையனைத்திற்கும் மேலான ஞானமென்றும் சொன்னார். இதுபற்றியே அவருடைய கூட்டத்தார் அவருக்கு ‘ஷண்மத ஸ்தாபனாசார்யார்’ என்று பெயர் சொல்லுகிறார்கள். 

இந்த ஆறு மதங்களாவன:
  1. ஐந்திரம் – தேவர்களிலே இந்திரன் தலைவன் என்று சொல்லி, பரமாத்மாவை “இந்திரன்” என்ற பெயரால் வழிபடுவது.
  2. ஆக்னேயம் – அக்னியே முதற் கடவுள் என்பது.
  3. காணாபத்தியம் – பரமாத்மாவைக் கணபதி என்ற நாமத்தால் வழிபடுவது.
  4. சைவம் – சிவனே தேவர்களில் உயர்ந்தவன் என்பது.
  5. வைஷ்ணவம் – விஷ்ணுவே மேலான தெய்வம் என்பது.
  6. சாக்தம் – சக்தியே முதல் தெய்வமென்பது.
வேதம் உபநிஷத் இரண்டையும் இந்த ஆறு மதஸ்தரும் ஒருங்கே அங்கீகாரம் செய்தார்கள். ஆனால் புராணங்கள் வெவ்வேறாக வைத்துக்கொள்ளுதல் அவசியமாயிற்று. திருஷ்டாந்தமாக, வைஷ்ணவர் சிவபுராணங்களையும், சைவர் வைஷ்ணவ புராணங்களையும் உண்மையாக ஒப்புக்கொள்ளுவதில்லை. பொதுக் கதைகளை எல்லாப் புராணங்களிலும் சேர்த்துக்கொண்டார்கள்.
இதிகாசங்களையும் பொதுவாகக் கருதினர் எனினும் பழைய சாக்த தர்மத்தின் அழுத்தம் பொதுஜனங்களின் சித்தத்தை விட்டுப் பிரியவில்லை. மதுரை சுந்தரேசர், காஞ்சி ஏகாம்பரமூர்த்தி என்ற பெயர்களைக் காட்டிலும் மதுரை மீனாக்ஷி, கஞ்சிக் காமாக்ஷி என்ற பெயர்கள் அதிகப் பெருமை கொண்டு நிற்கின்றன. மாரி, காளி என்ற பெயர்களுடன் சக்தித் தெய்வத்தையே மஹாஜனம் மிகுதியாகக் கொண்டாடி வருகிறது.

நவசக்தி மார்க்கம்

சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூல தர்மங்களை ஜனங்கள் தெரிந்து கொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல் சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங் கொடுப்பதில்லை.

பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வ லோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால், சாக்த மதஸ்தர் நிர்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல் பெண்பாலாகக் கருதி “லோக மாதா” என்று போற்றினர். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் “என் தாய் காளி” என்றுதான் பெரும்பாலும் பேசுவது வழக்கம். ஜனங்கள் வணங்கும் “லோக மாதா” இன்ன பொருள் என்று நாம் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நவசக்தி என்பது புதிய தெய்வமன்று. அதனைப் பொருள் தெரிந்து போற்றும் முறையே நவசக்தி மார்க்கம். இந்தத் தர்மத்தின் பலன்களைத் தாயுமானவர் பின்வருமாறு சொல்லுகிறார்:

“பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள் மித்திரர்கள்
       பக்கமுண் டெக்காலமும்,
பவிசுண்டு, தவசுண்டு, திட்டாந்தமாக யம
       படர் எனும் திமிரம் அணுகாக்
கதியுண்டு, ஞானமாங் கதிருண்டு, சதுருண்டு,
       காயச் சித்திகளு முண்டு.”
-    மலைவளர்க் காதலி, முதற்பாட்டு.
இந்த மதம் ஸ்ந்நியாஸத்தை ஆதரிப்பதன்று; இஹலோகத்தின் இருந்து தேவ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கமுடையது. 

கருக்களுக்குள்ளே மேற்படி மத வேற்றுமைகள் தீவிரமாக இருந்திருக்கலாமாயினும், பொதுஜனங்கள் எல்லாத் தெய்வங்களையும் தம் தம் மனப்படி வைத்து வணங்கிவந்தனர். சங்கராசார்யார் கொள்கையை அனுசரிப்போர், ‘எல்லாத் தெய்வங்களையும் ஒன்று போலவே வணங்கலாம்’ என்று சொல்லியது பொதுஜனங்களின் வழக்கத்துக்கு நல்ல பலமாயிற்று. மேலும், ஞானிகளும் சித்தர்களும் இடைக்கிடையே தோன்றி, ‘ஒரே பரம்பொருளைத்தான் ஆறு மதங்களும் வெவ்வேறு பெயர் கூறிப் புகழ்கின்றன’ என்ற ஞாபகத்தை ஜனங்களுக்குள்ளே உறுதிப்படுத்திக்  கொண்டு வந்தார்கள். 

மேற் கூறப்பட்ட ஆறு மதங்களில், இப்போது வைஷ்ணவம், சைவம் என்ற இரண்டுமே ஓங்கி நிற்கின்றன. மற்ற நான்கும் ஒருவாறு க்ஷீணமடைந்து போனதாகக் கூறலாம். ‘ஒருவாறு’ என்றேன்; ஏனெனில் ஐந்திரம் ஒன்றைத் தவிர மற்றவை முழுதும் க்ஷீணமடையவில்லை. ஐந்திர மதமொன்றுதான் இருந்த சுவடே தெரியாதபடி மங்கிப் போய்விட்டது. நாடு முழுதிலும் கணபதி பூஜை உண்டு. ஆனால் கணபதியே முதற் கடவுளென்று பாராட்டும் காணாபத்ய மதம் பரவி நிற்கவில்லை. மஹாராஷ்டிரத்தில் இக்கொள்கையுடையோர் சிலர் இப்போதும் இருப்பதாகக் கேள்வி. நிச்சயமாகத் தெரியாது. அக்னி பூஜை பிராமணர்க்குள் இருக்கிறது. ஆனால் ஆக்னேய மதம் இல்லை.

சாக்தம்

இப்போதும் சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொது ஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கிவருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை. பூர்விக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்தது. ஹூணர்களை எல்லாம் துரத்தி, மஹா கீர்த்தியுடன் விளங்கி, தனது பெயரைத் தழுவி ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செய்த விக்ரமாதித்ய ராஜா மஹாகாளியை உபாஸனை செய்தவன். அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும் பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக காளிதாஸன் சக்தி ஆராதனத்தை மேற்கொண்டவன். சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்.

(தென்னாட்டிலே இப்போதும் சிலர் சக்தியுபாஸனை என்று தனிமையாகச் செய்துவருகிறார்கள். இவர்கள் புராதன க்ஷத்திரிய வழக்கத்திலிருந்த மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்யம் என்ற தப்பெண்ணத்தால் தாமும் வழக்கப்படுத்திக்கொண்டு, ஜாதியாரின் பழிப்புக்கும் அஞ்சி ரஹஸ்யமாகப் பூஜை செய்துவருகிறார்கள். எனவே, சில இடங்களில், “சாக்தன்” என்றால் “ரஹஸ்யமாகக் குடிப்பவன்” என்ற அர்த்தம் உண்டாய்விட்டது. காலத்தின் விந்தை!)

கணபதி

வேதத்தில் பிரம்மதேவனையே கணபதி என்று ரிஷிகள் வணங்கினர். அவரே ப்ரஹ்மணஸ்பதி; அவரே ப்ருஹஸ்பதி.

விநாயகர் பிரணவ மந்திரத்தின் வடிவம். யானை முகம் பிரணவ மந்திரத்தைக் காட்டுவது. அறிவின் குறி. ‘கணாநாம் த்வா கணபதிம் ஹவாமஹே’ என்று ஸாமான்ய வழக்கத்திலுள்ள வேத மந்திரத்திலே பிள்ளையாரைப் பிரம்மதேவனென்று காட்டியிருப்பது தெரிந்து கொள்ளுக.
‘ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பல விதமாகச் சொல்லினர்’ என்று வேதமே சொல்லுகிறது. கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பல மூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது. வேதகாலம் முதல் இன்றுவரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய பாபிலோனீய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்துபோயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழியமாட்டா. இவை எப்போதும் உள்ளன. 

படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்தொழிலையும் குறிப்பிட்டுப் புராணங்களில் மூன்று மூர்த்தியாகப் பரமாத்மாவைப் பேசுகிறார்கள். பிரம்மம் என்ற பெயரை விசேஷமாகப் பரமாத்மாவுக்கு வேதாந்த சாஸ்திரம் வழங்குகிறது. பிரம்மம் என்பது வேள்வியையும் மந்திரத்தையும் ஞானத்தையும் குறிப்பிட்டு வேத ரிஷிகளால் வழங்கப்பட்டது; மந்திரநாதனும், ஸரஸ்வதி நாயகனும், வேத மூர்த்தியுமாகிய பிரம்ம தேவனை வேதம் ‘ப்ரஹ்மணஸ்பதி’ என்று கூறும்; அதாவது, ப்ரஹ்மத்தின் பதி, அல்லது தலைவன் என்று அர்த்தம். மூன்று மூர்த்திகளில் ஒவ்வொன்றையும் உபாஸனையின் பொருட்டுப் பிரிவாகக் காட்டினாலும், அந்த அந்த மூர்த்தியையே ஸாக்ஷாத் பரமாத்மாவாகவும் தெரிந்துகொள்ள வேண்டும். நாராயணன் பரிபாலன மூர்த்தி, பரப்ரஹ்மம் அவரே. சிவன் ஸ்ம்ஹார மூர்த்தி, பர்ப்ரஹ்மம் அவரே. பிரம்மா சிருஷ்டி மூர்த்தி; அவரே ஸாக்ஷாத் பரப்ப்ரஹ்மம். அவருடைய பெயரைத்தான் ப்ரஹ்மத்திற்கு வைத்திருக்கிறது.

இந்திரன், அக்னி, வாயு, வருணன் என்ற நாமங்கள் வேதத்தில் பரமாத்மாவுக்கே வழங்குகின்றன. மேலே, ‘ஏகம் ஸத்’ என்ற ரிக்வேத மந்திரத்தின் பொருள் குறிப்பிட்டிருக்கிறோம். மூர்த்தியுபாஸனைக் கூட்டத்தாருக்கிடையே லெளகிக காரியங்களை அனுசரித்துப் பிற்காலத்தில் பல சண்டைகள் உண்டாயின. தக்ஷ யாகத்தின் வீரபத்திரன் வந்து, இந்திரன், அக்னி, சூர்யன், பகன், விஷ்ணு முதலிய தேவர்களைத் தண்டனை செய்ததாக ஒரு புராணம் சொல்லுகிறது. இப்படியே பல புராணங்கள் தாம் உபாஸனைக்குக் காட்டும் மூர்த்தி மற்ற மூர்த்திகளைப் பல விதங்களில் விரோதித்துத் தண்டனை செய்ததாகச் சொல்லுகின்றன. இப்படிப்பட்ட கதைகள் பழைய புராணங்களில் பிற்காலத்தாரால் நுழைக்கப்பட்ட பொய்க்கதைகளேயன்றி வேறில்லை. இந்தக் கதைகள் வேதக் கருத்துக்கு முற்றிலும் விரோதம். வேதத்தில் ஹிந்துக்களுடைய தேவர்கள் ஒருவரையொருவர் பழிப்பதும் அடிப்பதும் இல்லை.

No comments:

Post a Comment