Tuesday, December 6, 2011

இனி

நடந்தது எல்லாம் போக; இனிமேல் நடக்க வேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்ய வேண்டும். 

கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் சொல்லவேண்டும். 

‘கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள் தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கே தான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?’ என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.
கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?

கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது. 

இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து,  ‘தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்’ என்பது முன்னோர் கொள்கை.
உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம். 

ஒன்று கூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்துகொள்ள இடம் உண்டாகுமென்று கருது முன்னோர் கோவில் வகுத்தார்கள். 

ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக. 

கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்: ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோ ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு. 

ஆண்  தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண் மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன. 

       சிவன் நீ; சக்தி உன் மனைவி.
       விஷ்ணு நீ; லக்ஷ்மி உன் மனைவி.
       பிரம்மா நீ; ஸரஸ்வதி உன் மனைவி. 

இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவநிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம். இதை பூசாரிகள் மறைக்கிறார்கள்.
கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறார். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது. 

அப்படி இருக்கப் பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பதுபோலே நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம் பிடுங்குகிறார்கள். 

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள். எத்தனை காலம் ஒரு மோசக்கார மனிதனை மூடிவைத்து அவனிடம் தெய்வங்காட்ட முடியும்? ஆகையால் இந்தப் பூசாரிகளுடைய சாயம் சீக்கிரம் வெளுத்துப் போகிறது. ஜனங்கள் பூசாரிகளை அவமதிப்பாக நடத்தி, பழைய மாமூலை உத்தேசித்துக் கல்லை மாத்திரம் கும்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட கல் வரம் கொடுக்கவே கொடுக்காது. எப்படிச் சாதாரணமாக ஒரு கல்லில் நல்ல சாதுக்கள் பக்தியுடன் மந்திரம் ஜபித்துக் கும்பிட்ட மாத்திரத்தில் பகவான் நேரே வந்து நர்த்தனம் பண்ணுவாரோ, அதுபோல் யோக்யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் அந்தக் கல்லைவிட்டுப் போய்விடுவார். அது மறுபடி சாதாரண ரஸ்தா உருளை ஸ்தானத்திற்கு வந்து சேர்ந்துவிடும். 

கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி; தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள் புரியும். துளிகூட, ஒர் அணுக் கூட, மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில் அவனே ஈசுவரன். குருவி, காக்கை, புழு, எறும்பு – ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், “ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி” என்று ஆற்றின்மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்லவேண்டும். அங்ஙனம் முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன் மீது ஸகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறானோ, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் ஸ்ந்தேஹமே கிடையாது.
பலஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயம் நீங்கினாற் கலி இல்லை; உலகம் முழுதும் கலி இல்லை. ‘உலகம் முழுதும் அநியாயத்தை விட்டுச் சமீப காலத்தில் நீங்குமென்று நினைக்க ஏது இல்லை; ஆதலால் கிருதயுகம் வரப்போவதில்லை. நாம் மாத்திரம் ஏன் நியாயம் செய்ய வேண்டும்?’ என்று விபரீதமாக யோசித்து எவனும் தான் நடக்கும் அநியாய வழியிலே தொடர்ந்து செல்லக்கூடாது. எவன் அநியாயத்தை விடுகிறானோ, அவனுக்குக் கிருதயுகம் அந்த க்ஷணமே கைமேல் கிடைக்கும். இந்து ஸந்தேஹம் இல்லை. 

ஒருவன் கலியை உடைத்து நொறுக்கினால், அவனைப் பார்த்துப் பத்துப்பேர் உடனே நொறுக்கிவிடுவார்கள். இங்ஙனம், ஒன்று, பத்து,  நூறு, ஆயிரம், லக்ஷம், கோடியாக; மனித ஜாதியில் ஸ்த்யயுகம் பரவுதலடையும் காலம் ஏற்கனவே ஆரம்பமாய்விட்டது. இதில் ஸ்ந்தேஹம் இல்லை.

No comments:

Post a Comment