Monday, June 25, 2012

தியானங்களும் மந்திரங்களும்


விடுதலைக்கு வழி

என் அறிவில் தெய்வத் தன்மை காணப்படுகிறது. நான் ஒரு தேவனைப்போலே சிந்தனை செய்யவல்லேன். இனி என் செய்கைகளிலும் தெய்வத்தன்மை விளங்குதற்குரிய வழி செய்ய வேண்டும்.

நான் இவ்வுலகத்துப் பொருள்களின்மீது பேரவாக் கொள்வதில்லை. நான் இவ்வுலகத்தின் நாதன். இதற்கு நான் அடிமையில்லை. என் கையில் இயற்கை கொணர்ந்து தரும் பொருள்களைக் கொண்டு நான் திருப்தி எய்தக் கடவேன்.

நான் வேண்டிக் கரையத்தக்கது யாது? அதிகாரத்தை வேண்டி வருந்துவேனா? ருஷிய ஜார் சக்கரவர்த்தி வரம்பற்ற அதிகாரம் படைத்திருந்தான். அதினின்றும் என்ன பயனைக் கண்டான்? அன்றி, நான் செல்வத்தை வேண்டு அழுங்குவேனா? செல்வம் என்ன பயன் தரும்? நோவின்றிக் காக்குமோ? அன்று; நோவுகளை விளைக்கும்; பகையின்றிக் காக்குமோ? அன்று; பகையைப் பெருக்கும்; கவலைகளும் அச்சங்களும் இன்றிக் காக்குமா? அன்று; அவற்றை மிகுதிப்படுத்ஹ்டும் மரணமின்றிக் காக்குமா? காக்காது. எனில், அதனை வேண்டி அழுங்குதல் பெரும் பேதமையன்றோ?
இரப்போன் தன்னைத்தான் விலைபடுத்திக் கொள்கிறான். பசுவுக்குத் தண்ணீர் வேண்டும் என்றுகூடப் பிறரிடம் யாசித்தல் பெரிய அவமானம் என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். நான் எவரிடத்தும் ஒரு பொருள் வேண்டுமென்று கேட்கமாட்டேன். கடவுள் தன் அருளால் கொடுப்பவற்றை ஏற்று மகிழ்வேன்.

ஆரோக்கிய ஸம்பந்தமான மந்திரங்கள்

நான் நோயற்றேன். நான் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புகள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக்கொண்டு விட்டன. அவை திறனுடையன; இலாகவமுடையன; இன்பந் தரித்தன; மிக எளிதில் இயங்குவன; மஹாசக்தியின் வீடுகளாயின். என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களையெல்லாம் புறத்தே வீசியெறிந்துவிட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான் சக்தி. பொய் பலஹீன முடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்; நான் ஆற்றல்; நான் வலிமையின்றி நோயுறல் யாங்ஙன மியலும்?

ஆஹா! வலிமையும், நோயின்மையும், ஆற்றலுமிருப்பதால் எனக்கு விளையுமின்பத்தை என்னென்றுரைப்பேன்? தேவத்தன்மையால் நான் எய்தும் ஆனந்தத்தை ஏதென்று சொல்வேன்? நான் தேவன்; நான் தேவன்; நான் தேவன்.

என் தலை, என் விழிகள், எனது நாசி, என் வாய், என் செவிகள், என் கழுத்து, மார்பு, வயிறு, கைகள், இடை, கால்கள் – இவையெல்லாம் முற்றிலும் ஆரோக்கியமுடையன; நோயற்றன; நோயுறத்தகாதன; எக்காலும் நோயுற மாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவுகொண்டது. என் மனமும், ஹ்ருதயமும் எவ்வித நோய்ப் பூச்சிகளாலும் காக்கப்படாதன. 

நோய்களையும் அசுத்தங்களையும் நான் அறவே எறிந்துவிட்டேன். அவை மீண்டு வராதபடி அவற்றைச் சூன்யத்திற்குள்ளே வீழ்த்து விட்டேன். 

நானே ஆரோக்கியம். நான் தேவன்.

அமரத் தன்மையைக் குறித்த மந்திரங்கள்

நான் அமரன். எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக. நாட்கள் ஒழிக. பருவங்கள் மாறுக. ஆண்டுகள் செல்க. நான் மாறுபட மாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிர்வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதை யெல்லாம் நான் தேர்ந்து கொண்டேன். இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன்.
நான் கடவுள், ஆதலால் சாகமாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment