Sunday, June 24, 2012

சுதந்திரப் பெருமை

(“தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர் திரும்பியும்
வருவாரோ?” என்னும் வர்ண மெட்டு)

வீர சுதந்திரம் வேண்டிநின் றார்பின்னர்
    வேறொன்று கொள்வாரோ? - என்றும்
ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
    அறிவைச் செலுத்துவா ரோ?         

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
    பொய்யென்று கண்டாரேல் - அவர்
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
    இச்சையுற் றிருப்பா ரோ?          (வீர)     2

பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
    பெற்றியை அறிந்தாரேல் - மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
    சுகமென்று மதிப்பா ரோ?      

மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
    வாய்மையை உணர்ந்தாரேல் - அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
    உடன்படு மாறுளதோ?         

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
    மின்மினி கொள்வா ரோ? - தம்
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
    கைகட்டிப் பிழைப்பாரோ?         

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
    மாண்பினை யிழப்பா ரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
    கைகொட்டிச் சிரியா ரோ?         

வந்தே மாதரம் என்று வணங்கியபின்
    மாயத்தை வணங்குவரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
    என்பதை மறப்பா ரோ?         

No comments:

Post a Comment