Wednesday, June 20, 2012

வெங்கடேசு ரெட்டப் பூபதி - ஓலைத்தூக்கு

ராஜமகா ராஜேந்திர ராஜகுல
        சேகரன் ஸ்ரீ ராஜராஜன்
    தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
        டேசுரெட்ட சிங்கன் காண்க
    வாசமிகு துழாய்த்தாரான் கண்ணனடி
        மறவாத மனத்தான், சக்தி
    தாசனெனப் புகழ்வளரும் சுப்ரமணிய
        பாரதிதான் சமைத்த தூக்கு.
   
    மன்னவனே! தமிழ்நாட்டில் தமிழறிந்த
        மன்னரில்லை யென்று மாந்தர்
    இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
        புனைந்தபொழுது இருந்த தன்றே!
    சொல்நலமும் பொருள்நலமும் சுவைகண்டு
        சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
    கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள் போல்
        தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றே!   


    புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
        தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும்
    கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
        வசைஎன்னால் கழிந்ததன்றே!
    "சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது
        சொற்புதிது, சோதி மிக்க
    நவகவிதை, எந்நாளும் அழியாத
        மகாகவிதை", என்று நன்கு  


    பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
        புலவோரும் பிறரு மாங்கே
    விராவுபுகழ் ஆங்கிலத்தீங் கவியரசர்
        தாமுமிக வியந்து கூறிப்
    பராவி யென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
        போற்றுகின்றார்; பாரோ ரேத்தும்
    தராதிபனே! இளசை வெங்க டேசுரெட்டா!
        நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன்.  


    வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
        கவிதையினை வேந்த னே!நின்               
    நயப்படு சந்நிதிதனிலே நான்பாட
        நீகேட்டு நன்கு போற்றி
    ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
        பொற்பைகள், ஜதிபல் லக்கு,
    வயப்பரிவா ரங்கள்முதல் பரிசளித்துப்
        பல்ஊழி வாழ்க நீயே! 

No comments:

Post a Comment