Friday, June 15, 2012

ஸ்வதேச கீதங்கள் – இரண்டாம் பாகம்


1909ல் ஜன்மபூமி (ஸ்வதேச கீதங்கள் – இரண்டாம் பாகம்) வெளியிடப்பட்டது. அதிலுள்ள சமர்ப்பணமும் முகவுரையும் வருமாறு:

சமர்ப்பணம்

எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்.

சி. சுப்பிரமணிய பாரதி

முகவுரை

இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாங்கமன கோசரமாகிய செளந்தர்யத்தைப் பெற்றிருக்க்கும் சமயத்தில் ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும்ம் தன்னையறியாது குதூகலமடைகின்றது. சூரியன் உதித்த லிவுடனே சேதன பிரகிருதி மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதியும், புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இவற்றினை யொப்பவே, நாட்டில் ஒரு புதிய ஆதர்சம் – ஓர் கிளர்ச்சி – ஓர் மார்க்கம் – தோன்றுவதுமேயானால் மேன்மக்களின் நெஞ்சமனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரிய காந்த மலர்போல் அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய “தேசபக்தி” என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தை யெல்லாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறையுடை வனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதிய சுடரினிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சென்ற வருஷம் சில கவிதை மலர் புனைந்து மாதாவின் திருவடிக்கு புனைந்தேன்.
நான் எதிர்பார்த்திராத வண்ணமாக மெய்த் தொண்டர்கள் பலர் “இம்மலர்கள் மிக நல்லன” என்று பாராட்டில் மகிழ்ச்சியறிவித்தார்கள். மாதாவும் அதனை அங்கீகாரம் செய்து கொண்டாள். இதனால் துணிவு மிகுதியுறப் பெற்றேனாகி, மறுபடியும் தாயின் பதமலர்களுக்குச் சில புதிய மலர்கள் கொணர்ந்திருக்கிறேன். இவை மாதாவின் திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சி யளிக்குமென்றே நினைக்கின்றேன்.

“குழலினிது யாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொற் கேளா தவர்”
என்பது வேதமாதலின்.
இங்ஙனம்
சி. சுப்பிரமணிய பாரதி

No comments:

Post a Comment