Thursday, March 8, 2012

பெண் விடுதலை 2


அடிமைகள் யாராயினும், அவர்களுக்கு விடுதலை கொடுத்தால், அதினின்றும் யுகப்பிரளயம் நிச்சயமாக நேரிட்டு, அண்டச் சுவர்கள் இடிந்துபோய், ஜகத்தே அழிந்துவிடும் என்று சொல்லுதல் அவர்களை அடிமைப்படுத்தி ஆள்வோருடைய ஸம்பிரதாயம்.

இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண் கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்திலே தவறி விடுவார்களென்று தமிழ் நாட்டில் பலர் கூறினர். இப்போதோ,, பெண் கல்வி தமிழ் நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது. அண்டச் சுவர்கள் இன்னும் இடிந்து போகவி்ல்லை. இதுவரை கூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால், இப்பொழுது  பெண்களுக்கு விடுதலை கொடுத்தால், ஏழு லோகமும் கட்டாயம் இடிந்து பூமியின்மேல் வி்ழும் என்றும், வால் நக்ஷத்திரம் வகையராக்களெல்லாம் நடுவிலே அகப்பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர் நடுங்குகிறார்கள். ‘மதறாஸ் மெயில்’ போன்ற ஆங்கிலேயப் பத்தி்ராதிபதியிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தாlல் என்ன நடக்கும் என்று கேளுங்கள். “ஓஹோ! ஹோ! ஹோ! இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் பஞ்சாபிகள் ராஜபுத்திரரைக் கொல்வார்கள். பிறகு, ராஜபுத்திரர் மஹாரஷ்டிரரின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள். அப்பால்,  மஹாராஷ்டிரர் தெலுங்கரையும் கன்னடரையும் மலையாளிகளையும் தி்ன்றுவிடுவார்கள். பிறகு மலையாளிகள் தமிழ்ப் பார்ப்பாரையும், தமிழ்ப் பார்ப்பார்  திராவிடரையும் சூர்ணமாக்கி விடுவார்கள். சூர்ணித்த திராவிடர் வங்காளி எலும்புகளை மாலையாகப் புனைவர்” என்று சொல்லிப் பெருமூச்சு வி்டுவார். அதே கேள்வியை நீதிபதி மணி அய்யர், கேசவப் பிள்ளை, சிதம்பரம்பிள்ளை முதலியவர்களைப் போய்க் கேளுங்கள். “அப்படி பெரிய அபாயம் ஒன்றும் உண்டாகாது. ஸ்வராஜ்யம் கிடைத்தால்  கஷ்டம் குறையும். பஞ்சம் வந்தால் அதைப் பொறுக்கத் திறன் உண்டாகும். அகால மரணம் நீங்கும் அவ்வளவுதான்” என்று சொல்லுவார்கள்.

அதுபோலே, பெண்களுக்கு விடுதலை கொடுத்ததனால் ஜன சமூகம் குழம்பிப் போய்விடும் என்று சொல்லுவோர் பிறர் தமது கண்முன் ஸ்வேச்சையுடன் வாழ்வதை தாம் பார்க்கக் கூடாதென்ற அசூயையால் சொல்லுகிறார்களே யொழிய வேறொன்றுமில்லை. விடுதலை என்றால் என்ன அர்த்தம்? விடுதலை கொடுத்தால் பிற ஸ்திரீகள் என்ன நினையில் இருப்பார்கள்? பெண்களுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? வீடுகளை விட்டு வெளியே துரத்திவிடலாமா? செய்யவேண்டிய விஷயமென்ன என்று பலர் சங்கிக்கலாம்.  இங்ஙனம் சங்கையுண்டாகும்போது விடுதலையாவது யாது? என்ற மூலத்தை விசாரிக்கும்படி நேரிடுகிறது. இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகு சுலபம். பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும், வையாமலும், கொல்லாமலும், அவர்களுடைய உழைப்பின் பயனைத் திருடாமலும், மற்றபடி ஏறக்குறைய ‘நான் ஏது பிரியமானாலும் செய்யலாம்’ என்ற நிலையி்ல் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள  மனிதனாகக் கணக்கிடத்தகும். ‘பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம் செய்யலாம்  என்பதே விடுதலை’ என்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் சொல்லுகிறார்.

இந்த விதிப்படி உலகத்தில் பெரும்பான்மையான ஆண் மக்களுக்கே விடுதலை உண்டாகவில்லை. ஆனால் இவ்விடுதலை பெறும்பொருட்டாக நாடுதோறும் ஆண் மக்கள் பாடுபட்டு வருகிறார்கள். ஆண் மக்கள் ஒருவருக்கொருவர் அடிமைப்பட்டிருக்கும் கொடுமை சகிக்க முடியாது. ஆனால், இதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைக் காட்டிலும் பல்லாயிர மடங்கு அதிகக் கஷ்ட நஷ்டங்கள் பெண்கூட்டத்தை ஆண் கூட்டம் அடிமைப்படுத்தி வைத்திருப்பதால் விளைகின்றன.

அடிமைத் தேசங்களிலேகூட ஆண்மக்களிற் பெரும்பாலோர் – அதாவது ரஹஸ்யப் போலீஸ் உபத்திரவத்திற்கு இடம் வைத்துக் கொண்டவர் தவிர மற்றவர்கள் – தம் இஷ்டப்படி எந்த ஊருக்குப் போகவேண்டுமானாலும், போகலாம், எங்கும் சஞ்சரிக்கலாம். தனி்யாக சஞ்சாரம் பண்ணக் கூடாதென்று நியதி கிடையாது. ஆனால் பெண் தன்னிஷ்டப்படி தனியே சஞ்சரிக்க வழியில்லாத தேசங்களும் உள. அவற்றில் நமது தேசத்தில் பெரும் பகுதி உட்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் விசனப்படுகிறேன்:

“ஓஹோ பெண்கள் தனியாக சஞ்சாரம் செய்ய இடங்கொடுத்தால் அண்டங்கள் கட்டாயம் இடிந்து போகும். ஒரு விதமான நியதியும் இருக்காது. மனுஷ்யர் மிருகப்பிராயமாய் விடுவார்கள்” என்று சில தமிழ்நாட்டு வைதிகர் நினைக்கலாம். அப்படி நினைப்பது சரியில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பெண்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாமென்று வைத்திருக்கிறார்கள். அதனால் பூகம்பமொன்றும் நேர்ந்துவிடவில்லை. ஸ்ரீமதி அனிபெஸண்டை நம்மவர்களிலே பலர் மிகவும் மரியாதையுடன் புகழ்ந்து பேசுகிறார்கள்.  ‘அவரைப் போலே நமது ஸ்திரீகள் இருக்கலாமே’ என்றால், நம்மவர் அடாதென்றுதான் சொல்லுவார்கள். காரணமென்ன? ஐரோப்பிய ஸ்திரீகளைக் காட்டிலும் நமது ஸ்திரீகள் இயற்கையிலேயே நம்பத்தகாதவர்கள் என்று தாத்பர்யமா?

‘மேலும் ஐரோப்பியரை திருஷ்டாந்தம் காட்டினால் நமக்கு ஸரிப்படாது. நாம் ஆரியர்கள், திராவிடர்கLள். அவர்களோ, கேவலம் ஐரோப்பியர்’ என்று சொல்லிச் சிலர் தலையசைக்கலாம்.
சரி, இந்தியாவிலே மஹாராஷ்டிரத்தில் ஸ்திரீகள் யதேச்சையாகச் சஞ்சாரம் பண்ணலாம். தமிழ்நாட்டில் கூடாது. ஏன்?

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதி்ல் இன்னும் முக்கியமான – ஆரம்பப் படிகள் எவையென்றால்
  1. 1 பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
    2.   அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
    3.   விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
    4.   பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் கொடுக்க வேண்டும்.
    5.   புருஷன் இறந்தபின்பு ஸ்த்ரீ மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.
    6.   விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கெளரவமாக  ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை, யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.
    7.   பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விடவேண்டும்.
    8.   பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
    9.   தகுதியுடன் அவர்கள் அரசாட்சியின் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.
    10.  தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரிக சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் மி்ஸஸ் ஆனி பெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதை மறந்து போகக்கூடாது.
     

இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால்,  பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்விக ரிஷிபத்தினிகள் இருந்த ஸ்தி்திக்கு நமது ஸ்திரீகள்  வர இடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது.

No comments:

Post a Comment