Sunday, May 27, 2012

வந்தே மாதரம்

ராகம்-காம்போதி                                                                தாளம்-ஆதி

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
                  இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
                 முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
                 சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
                 வாயுற வாழ்த்தேனோ-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
                  என்று வணங்கேனோ? 

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
                  ஈந்ததும் இந்நாடே- எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
                 அறிந்ததும் இந்நாடே- அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
                 களித்ததும் இந்நாடே-தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
                 போந்ததும் இந்நாடே-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
                 என்று வணங்கேனோ? 

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
                 வளர்த்ததும் இந்நாடே-அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
                தழுவிய திந்நாடே-மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
                 சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
               ஆர்ந்ததும் இந்நாடே-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
                என்று வணங்கேனோ?

No comments:

Post a Comment