Monday, May 14, 2012

சிதம்பரம் பிள்ளை மறுமொழி

சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
      துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்;
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
      ஏற்குமோ? தெய்வம்-பார்க்குமோ?
   
வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
     வாழ்த்து வோம் முடி தாழ்த்துவோம்;
எந்தம் ஆருயி ரன்னையைப் போற்றுதல்
      ஈனமோ? அவ மானமோ?
   
பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
      போகவோ? நாங்கள் சாகவோ?
அழுது கொண்டிருப் போமோ? ஆண் பிள்ளைகள்
      அல்லமோ? உயிர்  வெல்லமோ?    
   
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
      நாய்களோ? பன்றிச் சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்க ளோ?இது
      நீதமோ? பிடி வாதமோ?    
   
பார தத்திடை அன்பு செலுத்துதல்
      பாபமோ? மனஸ் தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
      குற்றமோ? இதற் செற்றமோ?    
   
ஒற்றுமைவழி யொன்றை வழியென்பது
      ஓர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம்;
மற்றும் நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம்
      மலைவு றோம் சித்தம் கலைவுறோம்.    
   
சதையைத் துண்டுதுண் டாக்கினும் என்னெண்ணம்
      சாயுமோ? ஜீவன ஓயுமோ?
இதையத் துள்ளே இலங்கு மஹாபக்தி
      ஏகுமோ நெஞ்சம் வேகுமோ?

No comments:

Post a Comment