Friday, September 28, 2012

வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து (சந்திரிகையின் கதை)

மோட்டார் வண்டியிலிருந்து டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரைத் தக்க உபசார வார்த்தைகளுடன் கைகொடுத்தழைத்து வந்து வீரேசலிங்கம் பந்துலு வீட்டுக்குள் தமது படிப்பறையில் நாற்காலியில் உட்கார்த்தி காபி கொணர்ந்து கொடுத்தார். நெய்த் தேங்குழல் நான்கைத்தின்று, ஒரு பெரிய வெள்ளி ஸ்தாலி நிறையக் காபியும் குடித்துவிட்டு, கோபாலய்யங்கார் 'ஹோ' என்று ஏப்பமிட்டுச் சாய்வு நாற்காலியின்மீது சாய்ந்து கொண்டார். அவரிடம் வீரேசலிங்கம் பந்துலு ஒரு வெற்றிலைத் தட்டு நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாசனைத் திரவியங்களுடன் கொண்டு வைத்தார். அது முழுதையும் அய்யங்கார் மென்று மென்று முக்கால் மணி நேரத்தில் ஹதம் பண்ணி விட்டார்.

அப்பால் பந்துலு அவரிடம் ஒரு தெலுங்கு பத்திரிகையை நீட்டினார். அவர் அதை ஆதிமுதல் அந்தம் வரை, விளம்பரங்களுட்பட, ஒரு வரிகூட மிச்சமில்லாமல் வாசித்து முடித்தார்.

கோபாலய்யங்கார் இங்கிலீஷ், ஸம்ஸ்கிருதம். தமிழ், தெலுங்கு நான்கு பாஷைகளிலும் உயர்ந்த பயிற்சியுடையவர். இவர் தெலுங்கு ஜில்லாக்களில் சில வருஷங்களில் வேலை பார்த்த சமயத்தில் தெலுங்கு பாஷையைத் தன் தாய்மொழிக்கு நிகராகப் பயின்று கொண்டார்.

இவர் பத்திரிகை வாசித்து முடித்தபின், இருவரும் வீட்டுக் கொல்லையிலே போய்ச் சிறிது நேரம் உலாவிக் கொண்டிருந்தனர்; பிறகு ஸ்நானம் பண்ணினார்கள்; போஜனம் பண்ண உட்கார்ந்தார்கள்.

தேவலோகத்து விருந்து போன்ற சமையல் பக்குவம். வீரேசலிங்கம் பந்துலுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. இத்தனை ருசியான உணவை அவர் தம்முடைய ஜன்மத்தில் உண்டதில்லை. கனவில் கண்டதில்லை. கற்பனையில் எட்டினதில்லை. தின்னத் தின்னத் தின்ன ருசி தெவிட்டவே யில்லை. கோபாலய்யங்காருடைய முகத்தைப் பந்துலு ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பந்துலுவின் முகத்தை அய்யங்கார் ஒரு முறை திரும்பிப் பார்த்தார்.

பந்துலுவின் மனைவி பரிமாறிக் கொண்டிருந்தாள்.

"யாருடைய சமையல் தெரியுமா?" என்று பந்துலுவின் மனைவி கேட்டாள். "காலையில் வந்தாளே, அந்தப்பெண்ணுடைய சமையலா?" என்றார் பந்துலு.

"ஆம்" என்றாள் பந்துலுவின் மனைவி.

"அந்தப் பெண்ணை இங்குச் சற்றே வரச்சொல். நம்முடைய கோபாலய்யங்கார் அவளுடைய முகத்தின் அழகையும் அவள் சொல்லின் அழகையும் அவளறிவின் அழகையும் பார்க்க வேண்டும். சமையலழகை மாத்திரம் பார்த்தால் போதுமா? அந்த மகா சுந்தரியின் சகல சௌந்தர்யங்களையும் பார்க்க வேண்டாமா?" என்றார் வீரேசலிங்கம் பந்துலு.

"அவளுக்குப் பலமான தலை நோவு. சமையல் சிரமம், யாத்திரை சிரமம் எல்லாம் சேர்ந்து அவளுக்குத் தலைநோவு உண்டாக்கிவிட்டன. இராத்திரி அவளுக்கு உடம்பு நேராய்விடும். அப்போது அய்யங்கார் அவளைப் பார்க்கலாம்" என்று பந்துலுவின் மனைவி சொன்னாள். அப்பால் நெடுநேரம் இருவரும் ஆகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். போஜனம் முடிந்து கை கழுவி விட்டுப் பந்துலுவும் அய்யங்காரும் மறுபடி பந்துலுவின் படிப்பறையில் வந்து நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். மேஜை மேல் பந்துலுவின் மனைவி கொண்டுவந்து வைத்த தாம்பூலத்தை எடுத்துப் போடத் தொடங்குகையில் "இதுவே சுவர்க்கம்" என்று பந்துலு சொன்னார்.

"எது?" என்று பந்துலுவின் மனைவின் கேட்டாள்.

"இப்போது செய்த போஜனம்" என்று பந்துலு சொன்னார்.

"சமையல் ருசியாக இருந்ததா?" என்று பந்துலுவின் மனைவி கோபாலய்யங்காரை நோக்கி வினவினாள்.

"மிகவும் ருசியாக இருந்தது" என்று கோபாலய்யங்கார் சொன்னார். அந்த சமயத்தில் கோபாலய்யங்காருடைய மனம் அங்ஙனம் ருசியாகச் சமையல் செய்த பெண்ணின் அழகையும், புத்தி நுட்பத்தையும், சொல்லினிமையையுங் குறித்து வீரேசலிங்கம் பந்துலு செய்த வர்ணனைகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று. அவள் உண்மையாகவே அத்தனை அற்புதமான பெண்தானா? அல்லது பந்துலு நூலாசிரியராகையால் வெறுமே கற்பனைதான் சொன்னாரா?" என்று அவருக்கு ஓர் ஐயமுண்டாயிற்று.

அப்போது பந்துலு தன் மனைவியை நோக்கி, 'அந்தப் பெண் தன்னுடன் கொண்டு வந்திருக்கும் குழந்தையை இங்கே கூட்டி வா" என்றார். "சரி" என்று சொல்லிப் பந்துலுவின் மனைவி சமையலறைக்குள்ளே போனாள்.

அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி:- "அந்தப் பெண் அக்குழந்தைக்கு உறவெப்படி?" என்று கேட்டார்.

"அந்தப் பெண்ணுடைய தமையனார் மகள் அக் குழந்தை. அவர்களுடைய கதை மிகவும் ரஸமானது. நான் அதை உங்களுக்குப் பின்பு சொல்லுகிறேன். முதலாவது, அக் குழந்தையைப் பார்த்து அதனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்யுங்கள். அத்தையின் புத்திக்கூர்மை அதற்கும் இருக்கிறது. அவளுடைய வயதாகும்போது அக்குழந்தையும் அவளைப் போலவே ஸரஸ்வதி ரூபமாக விளங்கும்" என்று பந்துலு சொன்னார்.

பந்துலுவின் மனைவி குழந்தை சந்திரிகையை அழைத்துக் கொண்டு வந்தாள். செம்பட்டுப் பாவாடை; செம்பட்டுச் சட்டை; செம்பட்டு நாடாவிலே பின்னல்; செய்ய குங்குமப்பொட்டு; அந்தக் குழந்தை விசாலாக்ஷியைப் போல் இருபத்தைந்து வயதாகும்போது ஸரஸ்வதி ஸ்வரூபமாக விளங்குமென்று பந்துலு சொன்னார். ஆனால் அதை இப்போது பார்க்கையில் அது சிறிய லக்ஷ்மீதேவி விக்ரமாக விளங்கிற்று.

அது சிரித்தால் ரோஜாப்பூ நகைப்பது போலிருக்கும். அதன் கைகளும் கால்களும் தங்கத்தால் செய்யப்பட்டன போன்றிருந்தன. அதன் முகம் நிலவைக் கொண்டு சமைக்கப்பட்டது போன்றிருந்தது. அதன் மொழிகள் பொன் வீணையில் கந்தர்வர் வாசிக்கும் நாதம்போல் ஒலித்தன. அதன் கைகால் இயக்கங்கள் தேவ ஸ்திரீகளின் நாட்டியச் செயல்களை யொத்திருந்தன.

இந்தக் குழந்தையைப் பார்த்தவுடனே காலையில் இதன் முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டு நகைத்துக் கொண்டிருந்த பணிப் பெண்ணுடைய அழகிய தோற்றம் கோபாலய்யங்காரின் மனக் கண்ணுக்கு முன்னே எழுந்தது.

"குழந்தாய், உனக்குப் பாட்டுப் பாடத் தெரியுமா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார். "தெரியும்" என்றாள் சந்திரிகை. "எங்கே, ஒன்று பாடு. கேட்போம்" என்றார் கோபாலய்யங்கார்.

"அத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த நந்தலால் பாட்டுப் பாடலாமா?" என்று சந்திரிகை கேட்டாள்.

"பாடு" என்றார் கோபாலய்யங்கார்.

சந்திர்கை பாடத் தொடங்கினாள்.

No comments:

Post a Comment