Sunday, September 2, 2012

வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று

ராகம்-தண்டகம்                                                தாளம்-ஆதி

நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய்; கனல் மூட்டினாய்;
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்; வலி காட்டுவேன்.

 கூட்டங் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய்; எமைத் தூஷித்தாய்;
ஓட்டம்நாங்களெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய்; பொருள் ஈட்டினாய். 

 கோழைப் பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய்;-சட்டம்-மீறினாய்;
ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய்; வீரம் பேசினாய் 

அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய்; புன்மை போக்கினாய்;
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய்; ஆசை ஊட்டினாய் 

தொண்டொன் றேதொழி லாக்கொண் டிருந்தோரைத்
தூண்டினாய்; புகழ் வேண்டினாய்
கண்ட கண்டதொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய்; சோர்வை ஓட்டினாய் 

 எங்கும் இந்தசுய ராஜ்ய விருப்பத்தை
ஏவினாய்; விதை தூவினாய்;
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ? நீங்கள் உய்யவோ?

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன்: குத்திக் கொல்லுவேன்;
தட்டிப் பேசுவோ ருண்டோ? சிறைக்குள்ளே
தள்ளுவேன்; பழி கொள்ளுவேன்.

No comments:

Post a Comment