Sunday, September 23, 2012

மண்ணுலகம் (ஞானரதம்)

எனக்குத் தலைநோவு பலமாயிருந்தது. படுக்கையை விட்டிறங்கிக் கிழக்கே இரண்டு மூன்று சந்துக்களுக்கப்பால், ஏதோ பெயர் மறந்துபோன தெருவில், நான் கூலி கொடுத்து வாசம் செய்துகொண்டிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தேன் அந்த வீட்டைக் கொஞ்சம் வர்ணிக்

கலாமா? கந்தர்வ நாட்டைப் பற்றிக் கேட்டீர்களே! இந்த மண்ணுலகத்தில் நமக்குள்ள சௌகரியங்களைப் பற்றிச் சிறிது கேளுங்கள்.

நானிருந்த வீட்டிற்கு முன்பக்கத்திலே ஓர் கூடமும் அதைச் சுற்றி இரண்டு மூன்று அறைகளும் உண்டு. மேற்கே பார்த்த வீடு. அந்தக் கூடத்திற்குத் தென்புறத்திலே ஒரு முற்றம். இது முன் பகுதி; பின் பகுதியிலே சில அறைகள். ஒரு முற்றம். மேல் மெத்தை. அதில் இரண்டறைகள். இவ்விரண்டு பகுதிகளுக்குப் பொதுவாகத் தென்பாரிசத்திலே கொல்லைப் புறத்தில் ஓர் கிணறும் தண்ணீர்க் குழாயும் உண்டு. பின் பகுதியில் நான், என் சிறிய தாயார், மனைவி, மைத்துனிப் பெண், தம்பி, எனது குழந்தை ஆகிய அறுவரும் வசிப்பது. முன் பகுதியில் ஒரு ராயர் பெரிய குடும்பத்தோடிருந்தார். அவருக்குப் பகல் முழுதும் உழைத்துக் கொண்டிருக்கும்படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ, ஓர் உத்தியோகம். உடம்பிலே கோபிமண் முத்திரைகள் எத்தனையோ அத்தனை குழந்தைகள். அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம். அந்த முற்றத்திலேயே ஒரு பசுமாடு. இத்துடன் ஒட்டுக்குடியாக அவருடைய பந்துக்கள் சிலர் வசித்தார்கள்.

நான் இருந்த பகுதியிலேனும் மேன்மாடமென்று ஒன்றிருந்தபடியால், கொஞ்சம் காற்று வரும். ராயர் கூட்டத்தாருக்கு அதுகூடக் கிடையாது. இரவிலே கொசுக்களின் தொல்லை பொறுக்க முடியாது. எனக்குத் தூக்கமே வராது. ராயருக்குக் காச நோயாதலால் அவர் இருமிக் கொண்டேயிருக்கிற சப்தம் ஓயாமல் கேட்கும். அவருடைய குழந்தைகள் ஒன்று மாற்றி மற்றொன்று அழுது கொண்டே யிருக்கும். கர்ப்பிணியாகிய அவர் மனைவி இடையிடையே விழித்துக் குழந்தைகளையோ, அல்லது கடவுளையோ அல்லது ராயரைத்தானோ, யாரையோ கன்னட பாஷையிலே திட்டிவிட்டு மறுபடியும் உறங்கி விடுவாள்.

ராயர் வீட்டு விஷயங்கள் இவ்வாறிருக்க, நமது வீட்டுச் சம்பிரமங்கள் இதைக் காட்டிலும் விசேஷம்.

கதையை இடையிலே விட்டு விட்டேனே. வீரராகவ முதலித் தெருவிலிருந்து வீட்டிற்கு வந்தேனா? வரும் வழியிலே "ஜட்கா" வண்டிகள், "துரை"கள் போகும் "கோச்சு"கள், புழுதி, இரைச்சல், துர்நாற்றம், இவற்றை யெல்லாம்கடந்து, முன் பகுதியிலே பசுமாடு, ராயர் வீட்டம்மாள், குழந்தைக் கூட்டங்கள் முதலிய விபத்துகளுக்கெல்லாம் தப்பிப் பின் புறத்திலே "மெத்தை"க்கு வந்து சேர்ந்தேன். அங்கே எனது படுக்கை, படிப்பு, எழுத்து, பகலில் ஸ்நேகிதர்கள் வந்தால் அவர்களுடன் சல்லாபம் முதலிய நாலாயிர விஷயங்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்ட அறையின் வெளிப்புறத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வந்து ஏனென்றாள். "தலை நோவு பொறுக்க முடியவில்லை. கொஞ்சம் மிளகு அரைத்துக் கொண்டு வா" என்றேன். "ஆமாம்; இரண்டு நாளைக்கொரு முறை இதொரு பொய்த் தலைவலி வந்துவிடும், என்னை வேலை யேவுகிறதற்காக. அதெல்லாம் சரிதான், பால்காரி வந்து மத்தியானம் பணம் கேட்டுவிட்டுப் போனாள். ராயர் வீட்டு அம்மாள் குடக்கூலிக்கு ஞாபகப்படுத்தச் சொன்னாள். ராயர் நேற்றே சொன்னாராம். இந்த மாதம் குழந்தைக்குக் காப்பு வாங்க ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தீர்கள். என்னைத் தான் ஏமாற்றுகிறது வழக்கமாகவே போய்விட்டது," இன்னும், அது இது என்று ஆயிரங் கணக்கு சொன்னாள். அன்று மாலை அவள் சொல்லிய கணக்குகளை எல்லாம் தீர்க்கவேண்டுமானால் குறைந்தபக்ஷம் மூன்று லக்ஷம் ரூபாய் வேண்டும் என்று என் புத்திக்குப் புலப்பட்டது. கடைசியாக "தெருவிலே போகிற நாய்களுக்கெல்லாம் பணத்தை வாரி யிறைக்கிறது; வீட்டுச் செலவைப் பற்றிக் கேட்டால் முகத்தைச் சுளிக்கிறது; இப்படிச் செய்து கொண்டே வந்தால், அப்புறம் என்ன கிடைக்கும்? மண் தான் கிடைக்கும்" என்று ஆசீர்வாதம் பண்ணிப் பிரசங்கத்தை முடித்தாள்.

"தலைநோவு தீர்ந்து போய்விட்டது. நீ தயவுசெய்து கீழே போகலாம்" என்று வணக்கத்துடன் தெரியப்படுத்திக் கொண்டேன்.

"ஆமாம்! ஊர்க்காரர் கூடவெல்லாம் ஓயாமல் பேசித் தொண்டைத் தண்ணீரை வற்ற வைத்துக் கொண்டிருக்கலாம்.

நான் ஒரு வார்த்தை பேசவந்தால் உடனே கோபம் வந்துவிடும்" என்றாள். அவள் மனதில் என்னைச் சமாதானப் படுத்துவதாக எண்ணம். அப்பால், பல தினங்கள் கழிந்த பின்புதான், நான் தர்மலோக யாத்திரை செய்வதாகத் தீர்மானம் செய்து வைத்திருந்தேன். இடையே நிகழ்ந்த சிற்சில சம்பவங்களும், காலதேச வர்ணனைகளுமே இங்கே எழுதப்படும். மண்ணுலகம் மிகப் பெரிது அதில் என் அனுபவ முழுவதையும் எழுத வேண்டுமானால் மகாபாரதத்தைப் போலப் பதினெட்டு மடங்கு புஸ்தகமாகும். இங்கு ஓரிரண்டு "மாதிரி ஸீன்"களே குறிப்பிடப்படும்.

20-ம் தேதி : - குழந்தைக்குக் காய்ச்சல். மனைவிக்குக் காதுவலி. எனக்குப் பித்தக் கிறுகிறுப்பு.

21-ம் தேதி : - தம்பிக்குப் பாடசாலைச் சம்பளம் கொடுக்க வேண்டிய கடைசி நாள். நான் காரியஸ்தலத்திலிருந்து பணம் கொண்டுவந்து வைக்க மறந்து விட்டேன். அவன் அது பற்றிப் பாடசாலைக்குப் போவதையே நிறுத்தி விட்டான். நான் சுதேசிய விஷயத்தில் ஊக்கத்துடன் பாடுபடுவதன் பொருட்டாக, என்னை இப்போதும் கவனித்து வரும்படியாக ராஜாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள், எனது தம்பியிடம் செய்த சம்பாஷணையில் "உம்முடைய அண்ணனது சிநேகிதரான இன்னாரை ராஜாங்கத்தார் பிடிக்கப் போகிறார்கள்" என்ற மங்கள சமாசாரம் சொல்லி விட்டுப் போனதாகத் தம்பி வந்து சொன்னான்.

22-ம் தேதி : - மனைவிக்கும் சிறிய தாயாருக்கும் மனஸ்தாபம் வந்து விட்டது. ஒருவரையொருவர் மாற்றி என்னிடம் பிழைகூறத் தலைப்பட்டார்கள். என் ஜீவதர்மமாகிய 'சுதேசியம்' தப்பு முயற்சியென்றும், வீணென்றும், அதில் நான் தலையிட்டதிலிருந்து குடும்பத்துக்குப் பற்பல கேடுகளுண்டாகு மென்றும் சிறு தாயார் சன்மார்க்க போதனை செய்தாள். என் மூக்கில் அடிக்கடி ஒருவித ஊறுதல் உண்டாவது போலத் தோன்றிற்று. அது ஓர் பொல்லாத நோயாயிருக்குமோ என்ற மூடத்தனமான கவலை கொண்டேன். அக் கவலையிலிருந்து மனதை அடிக்கடி திருப்பியும், மனம் மீட்டும் மீட்டும் அதில் போய் விழுந்தது.

23-ம் தேதி : - வெற்றிலையில் சுண்ணாம்பு அதிகமாகச் சேர்ந்து விட்டபடியால், வாயெல்லாம் புண்ணாய்ப் போய்விட்டது. வாய்க்குள் ஜலம் விடுவதற்குக் கூடத் தகுதியில்லை. எனக்கு சாதாரணமாகவே உழைப்பு அதிகமாதலால், அத்துடன் சோறும் விழுங்க முடியாமற் போகவே, சோர்வும் முகக் கடுகடுப்பும் அதிகப்பட்டன. இத்யாதி, இத்யாதி.

நாள் தவறினாலும், இந்தக் கணக்குத் தவறுவதில்லை. சீச்சீ! இந்த மண்ணுலகம் ஓரிடமா? இதில் மனிதன் வசிக்கலாமா? ஆமைகளும், ஓநாய்களும் வாழலாம். இது துன்பக் களம். இது சிறுமைக் களஞ்சியம். இது நரகம். இதில் வெறுப்படையாத மனிதர்களின் முகத்திலேகூட விழிக்கலாகாது.

வீட்டு வியாபாரங்களையும் எனது சொந்த வர்த்தமானங்களையும் குறித்துச் சில திருஷ்டாந்தங்கள் காண்பித்தேன். இனி, வெளி வியாபாரங்கள், எனது மித்திரர், அயலார் முதலியவர்களின் செய்திகள் ஸம்பந்தமாகச் சில திருஷ்டாந்தங்கள் காண்பிக்கிறேன். திருவல்லிக்கேணியிலே “செ……ஸங்கம்” என்பதாக ஓர் தேச பக்தர் சபை உண்டு. அதில் தேசபக்தர்கள் தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து, “காரியங்கள்” – ஒரு காரியமும் நடக்கவில்லை – நடத்தினோம். நாங்கள் தேசபக்தர்கள் இல்லையென்று, அந்தச் சுவை ஒன்றுமில்லாமற் போனதிலிருந்தே நன்கு விளங்கும்.

நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர்களெல்லாம் புளியஞ்சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர்; ‘காலணா’வின் அடியார்க்கும் அடியார்.

ஆனால், எங்களிலே ஒவ்வொருவனும் பேசுவதைக் கேட்டால் கைகால் நடுங்கும் படியாக இருக்கும். பணத் தொண்டரடிப்பொடியாழ்வார் எங்களெல்லோரைக் காட்டிலும் வாய்ப் பேச்சில் வீரர். ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலாமென்பான். மற்றொருவன் மணலைக் கயிறாகத் திரிக்கலாமென்பான். ஒருவன் “நாம் இந்த ரேட்டில் – இந்த விதமாகவே – வேலை செய்து கொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறுமாதத்தில் காற்றாய்ப் போய்விடும்” என்பான். மற்றொருவன் “சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக்கிறார், ஆறு வருஷத்தில் கிடைத்து விடுமென்று எனக்குத் தோன்றுகிறது” என்பான். தவளையுருவங் கொண்ட மூன்றாமொருவன் “ஆறு மாதமென்று சொல்லடா” என்று திருத்திக் கொடுப்பான்.

ப………………… ஆழ்வார் எங்களிலே முக்கியஸ்தர், அவர் இதை எல்லாம் கேட்டுப் பரமானந்தமடைந்து கொண்டிருப்பார். ஆனால் ஒரு தேவதை அவரிடம் வந்து, உங்களுக்கு நான் ஸ்வராஜ்யம் நாளை ஸூர்யோதத்திற்கு முன்பு சம்பாதித்துக்கொடுக்கிறேன். நீ உன் வீட்டிலிருந்து அதற்காக ஒரு வராகன் எடுத்துக் கொண்டுவா” என்று சொல்லுமாயின், அந்த ஆழ்வார், “தேவதையே உனக்கு வந்தனம் செய்கிறேன். ஓம் சக்தியை நம: ஓம் பராயை நம: இத்யாதி; அம்பிகே, இந்த உபகாரத்துக்கு நாங்கள் உனக்கு எவ்வாறு நன்றி செலுத்தப் போகிறோம்? எங்கள் உடல், பொருள், ஆவி மூன்றும் உன்னுடையதே யாகும், ஆனால், ஒரு வராகன் கேட்ட விஷயத்தைப் பற்றி நான் ஒரு வார்த்தை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதைக் கேள். நீ சொல்லுகிற காரியமோ பொதுக் காரியம். அதற்குப் பொது ஜனங்கள் பணம் சேர்த்துக் கொடுப்பதே பொருத்தமுடையதாகும். நான் ஒருவன் மட்டிலும் கையிலிருந்து பணம் செலவிடுதல் பொருத்தமன்று. இவ்விஷயத்தைப் பற்றி நாங்கள் அடுத்த வாரம் கூடப் போகிற ‘மீட்டிங்’கில் பேசித் தீர்மானம் செய்கிறோம். அதன் பிறகு நீ பெருங்கருணையுடன் எழுந்தருள வேண்டும். இப்போது போய் வருக. வந்தே மாதரம்” என்று மறுமொழி சொல்லியனுப்பி விடுவார்.

ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை, ஸாரமில்லை, ஸத்துக் கிடையாது: உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாய் இருக்கும் வாழ்க்கை; ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகின்றான். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி விட்டுவிட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனே தான் இருக்கிறான், ஆனால், “நான் ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்புவதற்கிடமில்லையே” என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கிடமில்லையென்றெண்ணி ஏமாற்றுகிறான். ஐயோ மூடா நீ ஏமாற்றுவதனால், முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்றா நினைக்கிறாய்? மனித ஜாதிக்கு தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம். இறங்காத விஷம். இதன் பெயர் பணம்.

இப்பேய்க்கு வணங்கும்படி அவனைத் தூண்டிவிடுவது விருப்பம்; அதாவது ருசி நீங்கிய விருப்பம்; அறிவற்ற விருப்பம்; ருசிஸஹிதமான விருப்பமுடையோர் கந்தவர்கள். ஸத்திய லோகக் கருவி.

இன்னும் எத்தனையோ காட்சிகள் மண்ணுலகத்திலிருந்து எடுத்துக் காட்டவேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், பயனற்ற இவ்வுலகத்தைப் பற்றி அதிகமாக விஸ்தரிப்பது பயனுடைய கார்யமாகாது என்பது கருதி இத்துடன் நிறுத்தி விடுகின்றேன்.

No comments:

Post a Comment