Saturday, September 1, 2012

பாரத சமுதாயம்

ராகம்: பியாக்                                                      தாளம்: திஸ்ர ஏகதாளம்
 
பல்லவி

பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க! வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய!

அனுபல்லவி

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க!      (பாரத)

சரணங்கள்

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்க இனியுண்டோ? - புலனில்
வாழ்க்கை இனியுண்டோ? - நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு - இது
கணக்கின்றித் தரு நாடு - நித்தநித்தம்
கணக்கின்றித் தரு நாடு - வாழ்க (பாரத)

இனியொரு விதிசெய் வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க (பாரத)

“எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க (பாரத)

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்- வாழ்க (பாரத)

No comments:

Post a Comment