Saturday, November 17, 2012

காந்தாமணி - ஒரு சிறு கதை

14 செப்டம்பர் 1919

"காந்தாமணி, உங்கப்பா பெயரென்ன?” என்று பாட்டி கேட்டாள். ஒரு கிணற்றங்கரையில் நடந்த ஸங்கதி. கோடைக் காலம். காலை வேளை. வானத்திலே பால ஸூர்யன் கிரணங்களை ஒழிவில்லாமல் பொழிந்து விளையாடுகிறான்; எதிரே நீலமலை; பச்சை மரங்கள்; பசுக்கள்; பல மனிதர்; சில கழுதைகள்; இவற்றின் தொகுதி நின்றது. வெளிலொளி எந்தப் பொருள்மீது பட்டாலும் அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகிறான்; எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையவனவாகத் தோன்றுகின்றன. 

ஆனால் காலை வேளையில் மனிதக் கூட்டத்தில் கொஞ்சமும் உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகமாகக் காணப்படுவதால் அப்போது உலகம் மிகவும் சந்தோஷகரமான காட்சியுடையதாகிறது. 

தோட்டத்துக்கு நடுவே ஒரு கிணறு. அத்தோட்டத்தில் சில அரளிப்பூச் செடிகள்; சில மல்லிகைப்பூச் செடிகள்; சில ரோஜாப்பூச் செடிகள். அக்கிணற்றிலிருந்து அதற்கடுத்த வீதியிலுள்ள பெண்களெல்லோரும் ஜலம் எடுத்துக் கொண்டு போவார்கள். 

இந்தக் கதை தொடங்குகிற அன்று காலையில் அங்கு காந்தாமணியும் பாட்டியையும் தவிர ஒரு குருட்டுக் கிழவர் தாமே ஜலமிறைத்து ஸ்நானத்தைப் பண்ணிக் கொண்டிருந்தார். போலீஸ் உத்தியோகத்திலிருந்து தள்ளுபடியாகி அதிலிருந்து அந்தக் கிராமத்துகு வந்த தமது வாழ்நாளின் மாலைப் பொழுதை ராமநாமத்தில் செலவிடும் பார்த்தசாரதி அய்யங்கார் அங்கு பக்கத்திலே நின்று கிழவியை குறிப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். 

மேற்படி கிணற்றுக்கருகே ஒரு குட்டிச்சுவர். அதற்குப் பின்னே ஒரு வேப்பஞ் சோலை. அங்கு பல மூலிகைகளிருக்கின்றன. அவற்றுள் ஒன்று மிகுந்த பசி உண்டாக்குமென்று என்னிடம் ஒரு சாமியார் சொன்னார். அது கொண்டு நான் மேற்படி மூலிகையைப் பறித்து வரும் பொருட்டாக அந்தச் சோலைக்குப் போயிருந்தேன். வானத்தில் குருவிகள் பாடுகின்றன. காக்கைகள் ‘கா, கா’ என்று உபதேசம் புரிகின்றன. வானவெளியிலே ஒளி நர்த்தனம் பண்ணுகிறது. எதிரே காந்தாமணியின் திவ்ய விக்ரஹம் தோன்றிற்று. 

“உங்கப்பா பெயரென்ன?” என்று பாட்டி காந்தாமணியிடம் கேட்டாள்.

"எங்கப்பா பெயர் பார்த்தசாரதி அய்யங்கார்” என்று காந்தாமணி புல்லாங்குழலைப் போல் ஊதிச் சொன்னாள். கிழவி, போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்காரை நோக்கி, ஒரு முறை உருட்டி விழித்தார். போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் கையுங் காலும் வெலவெலத்துப் போனார். அவருக்கு முகமும் தலையும் வெள்ளை வெளேரென்று நரைத்துப் போய்த் தொண்ணூறு வயதுக் கிழவனைப்போலே தோன்றினாலும் உடம்பு நல்ல கட்டு மஸ்துடையதாகப் பதினெட்டு வயதுப் போர்ச் சேவகனுடைய உடம்பைப் போலிருக்கும். அவர் ஆண் புலி வேட்டைகளாடுவதில் தேர்ச்சி யுடையவரென்று கேள்வி. பாம்பு நேரே பாய்ந்து வந்தால் பயப்படமாட்டேனென்று அவரே என்னிடம் பத்துப் பதினைந்து தரம் சொல்லியிருக்கிறார். 

அப்படிப்பட்ட சூராதி சூரனாகிய பார்த்தஸாரதி அய்யங்கார், கேவலம் ஒரு பாட்டியின் விழிப்புக்கு முன்னே இங்ஙனம் கைகால் வெலவெலத்து மெய் வெயர்த்து முகம் பதறி நின்றதைக் கண்டு வியப்புற்றேன். 

அப்பால் அந்தப் பாட்டி காந்தாமணியிடம் மேற்படி போலீஸ் அய்யங்காரதை சுட்டிக் காட்டி:- “இதோ நிற்கிறாரே, இந்தப் பிராமணன், இவரா உங்கப்பா?” என்று கேட்டாள். 

அதற்குக் காந்தாமணி தன் இரண்டு கைகளையும் வானத்திலே போட்டு, முகத்திலே வானொளியை நகைக்கத் தக்க ஒளியுடைய நகை வீச- “ஏ, ஏ, இவரல்லர்; இவர் கன்னங்கரேலென்று ஆசாரியைப் போலிருக்கிறாரே! எங்கப்பா செக்கச் செவேலென்று எலுமிச்சம் பழத்தைப் போலிருப்பார். இவர் நரைத்த கிழவரன்றோ? எங்கப்பா சின்னப் பிள்ளை” என்றூ காந்தாமணி உரைத்தாள். 

அப்போது போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் காந்தாமணியை நோக்கி:- “உங்கப்பாவுக்கு எந்த ஊரில் வேலை?” என்று கேட்டார். 

”எங்கப்பா சங்கரநாதன் கோயில் ஸப்-இன்ஸ்பெக்டர்” என்று காந்தாமணி சொன்னாள். பார்த்தஸாரதி அய்யங்கார் தலையைக் கவிழ்த்துக் கொண்டார். அவருக்கு “ஸப்-இன்ஸ்பெக்டர்” என்ற பெயர் பாம்புக்கு இடிபோல். அப்போது காந்தாமணிக்கும் பாட்டிக்குமிடையே பின்வரும் ஸம்பாஷணை நிகழலாயிற்று. 

“நீங்கள் அக்காள், தங்கை எத்தனை பேர்?” என்று பாட்டி கேட்டாள். அப்போது காந்தாமணி சொல்கிறாள்: “எங்கக்காவுக்கு பதினெட்டு வயது. போன மாஸந்தான் திரட்சி நடந்தது; ஸ்ரீவைகுண்டத்திலே. எனக்கு அடுத்த மாஸம் திரட்சி. என் தங்கை ஒரு பெண் திரள நிற்கிறது. நாங்கள் மூன்று பேரும் பெண்கள். எங்கப்பாவுக்குப் பிள்ளைக்  குழந்தை இல்லையென்று தீராத மனக்கவலை. என்ன செய்யலாம்? பெருமாள் அநுக்ரஹம் பண்ணினாலன்றோ தாழ்வில்லை? அதற்காக அவர் சோதிடம் பார்த்தார். எங்கம்மாவுக்கு இனிமேல் ஆண் குழந்தை பிறக்காதென்று பாழாகப் போவான் ஒரு ஜோதிடன் சொல்லிவிட்டான். அதை முத்திரையாக முடித்துக்கொண்டு இந்த அறுதலிப் பிராமணன், எங்கப்பா அடுத்த மாஸம் மன்னார் கோவிலில் ஒரு பெண்ணை இளையாளாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறார். முகூத்தமெல்லாம் வைத்தாய் விட்டது” என்றாள். 

"மன்னார் கோவிலில் உங்கப்பாவுக்குப் பெண் கொடுக்கப் போகிற மாமனாருடைய பெயரென்ன?” என்று அந்தப் பாட்டி கேட்டாள். அதற்குக் காந்தாமணி:- “அவர் பெயர் கோவிந்தராஜய்யங்காராம். அந்த ஊரிலே அவர் பெரிய மிராசாம். அவருக்கு ஒரு பெண் தானாம். கால் முதல் தலைவரை அந்தப் பெண்ணுக்கு வயிர நகை சொரிந்து கிடக்கிறதாம். தேவ ரம்பையைப் போல் அழகாம் அந்தப் பெண்” என்றாள். 

“அப்படியாப்பட்ட அழகான பணக்கார இடத்துப் பெண்ணை இளையாளாகக் கொடுக்கக் காரணமென்ன?” என்று பாட்டி கேட்டாள். “அந்தப் பெண் திரண்டு மூன்று வருஷங்களாய் விட்டன. தாயும் இறந்து போய் விட்டாள். அதன் நடையுடை பாவனைகளெல்லாம் ஐரோப்பியமாதிரி. ஆதலால் இதுவரை அதற்குக் கலியாணத்துக்கு யாரும் வரவில்லை. எங்கப்பா ருதுவான வார்த்தையெல்லாம் வீண் பொய்யென்று சொல்லித் தாம் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஸம்மதப்பட்டு விட்டார். மேலும் இவருக்கு மனதுக்குள்ளே ஸந்தோஷந்தான், தமக்கு ருதுவான பெண் கிடைப்பதுபற்றி. இன்றைக்குக் காலையிலே கூட அவரும் எங்கம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் இந்த ஊர்ச் சத்திரத்திலேதான் ஒரு வாரமாக இறங்கியிருக்கிறோம். எங்கப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தபோது அம்மா சொன்னாள்:- 'மன்னார்குடிப் பெண் திரண்டு மூன்று வருஷமாய் விட்டதாக இந்த ஊரிலே கூடப் பலமான ப்ரஸ்தாபம். ஆண், பெண் எல்லோரும் ஒரே வாக்காகச் சொல்லுகிறார்கள்’ என்றாள். அப்பா அதற்கு: ‘நெவர் மைண்ட். அந்தக் குட்டி திரண்டிருப்பதைப் பற்றி நமக்கு இரட்டை சந்தோஷம். நமக்குப் பணம் கிடைக்கும். ஆண் பிள்ளை பிறக்கும். குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி இடத்திலே ஐ டோன் கேர் எடேம் எபெளட் சாஸ்த்ரங்கள். நாம் சாஸ்திரங்களைப் புல்லாக மதிக்கிறோம்” என்றார்...”  என்று காந்தாமணி சொன்னாள். 

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிற சத்தம் என் காதில் விழுந்தது. என்னுடைய பார்வை முழுவதும் போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் மேல் நின்றது. அவரைப் பார்த்துக் கொண்டேயிருக்கையிலே என் மனதில் திடீரென்று ஒரு யோசனை பிறந்தது. அங்கிருந்தவர்களில் எனக்கு காந்தாமணியின் முகந்தான் புதிது. பார்த்தஸாரதி ஐயங்காரையும் தெரியும். அந்தக் கிழவியையுந் தெரியும். அந்தக் கிழவி அய்யங்காரிச்சியில்லை; ஸ்மார்த்தச்சி. அந்த கிராம முன்சீபின் தங்கை. அவளுக்கும் போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்காருகும் பால்யத்தில் பலமான காதல் நடைபெற்று வந்ததென்றும், அதனால் போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்காருக்கும் மேற்படி கிராம முன்ஸீபுக்கும் பல முறை யுத்தங்கள் நடந்தனவென்றும், அந்த யுத்தங்களிலே ஒன்றின் போது தான் பார்த்தஸாரதி அய்யங்காருக்கு ஒரு கண்ணில் பலமான காயம் பட்டு அது பொட்டையாய் விட்டதென்றும் நான் கேள்விப்பட்டதுண்டு. அந்தக் கேள்வியையும் மனதில் வைத்துக் கொண்டு இப்போது மேற்படி ஸ்திரீகளின் ஸம்பாஷணையின்போது மேற்படி அய்யங்காரின் முகத்திலே தோன்றிய குறிப்புகளையும் கவனித்தவிடத்தே என் மனதில் பின் வரும் விஷயம் ஸ்பஷ்டமாயிற்று.

கிழவியினிடத்தில் பழைய காதல் தனக்கு மாறாமல் இன்னும் தழல் வீசிக் கொண்டிருக்கிறதென்ற செய்தியை ஐயங்கார் கிழவியினிடம் ஸ்திரப்படுத்திக் காட்ட விரும்புகிறாரென்றும், காந்தாமணி முதலிய யுவதிகள் அருகே கூடத் தனக்கு அக்கிழவியின் வடிவே அதிக ரம்யமாகத் தோன்றுகிறதென்றும் உணர்த்த விரும்புகிறாரென்றும் தெரியலாயிற்றூ. அவருடைய முகக் குறிப்புக்களிலே பாதி பொய் நடப்பென்பதும் தெளிவாகப் புலப்பட்டது. 

ஏனென்றால், காந்தாமணியையும் அக்கிழவியையும் தன் கையால் படைத்து, இருவருக்கும் பிதாவாகிய பிரமதேவன் கூடக் காந்தாமணியின் ஸந்நிதியில் அந்தக் கிழவியைப் பார்க்கக் கண் கூசுவான். அப்படியிருக்கக் கிழவியின்மீது அங்கு காதற் பார்வையை அசைவின்றி நிறுத்த முயன்ற போலீஸ் பார்த்தசாரதி ஐயங்காரின் முயற்சி மிகவும் நம்பக் கூடாத மாதிரியில் நடைபெற்று வந்தது. 

இந்த ஸங்கதியில் மற்றொரு விசேஷமென்னவென்றால் மேற்படி அய்யங்காரை நான் விருக்ஷ மறைவிலிருந்து கவனித்துக் கொண்டு வந்தது போலவே காந்தாமணியும் கிழவியும் அவரை அடிக்கடி கடைக்கண்ணால் கவனித்துக்கொண்டு வந்தார்கள். பெண்களுக்குப் பாம்பைக் காட்டிலும் கூர்மையான காது; பருந்தைக் காட்டிலும் கூர்மையான கண். எனவே பார்த்தஸாரதி அய்யங்காருடைய அகத்தின் நிலைமையை நான் கண்டது போலவே அந்த ஸ்திரீகளும் கண்டு கொண்டனரென்பதை அவர்களுடைய முகக் குறிகளிலிருந்து தெரிந்துகொண்டேன்.
என்னை மாத்திரம் அம்மூவரில் யாரும் கவனிக்கவில்லை. நான் செடி கொடிகளில் மறைவில் நின்று பார்த்தபடியால் என்னை அவர்களால் கவனிக்க முடியவில்லை. 

இப்படியிருக்கையிலே அங்கு இருபது வயதுள்ள ஒரு மலையாளிப் பையன் பெருங்காயம் கொண்டு வந்தான். சில்லறையில் பெருங்காயம் விற்பது இவனுடைய தொழில். இவன் பலமுறை அந்தக் கிராமத்துக்குப் பெருங்காயம் கொண்டு வந்து விற்பதை நான் பார்த்திருக்கிறேன். இவனைப்பற்றி வேறென்றும் நான் விசாரித்தது கிடையாது. இவன் பார்வைக்கு மன்பதன் போலிருந்தான். கரிய விழிகளும், நீண்ட மூக்கும், சுருள் சுருளான படர்ந்த உச்சிக்குடுமியும் அவனைக் கண்டபோது எனக்கே மோஹமுண்டாயிற்று. 

அந்த மலையாளி கிணற்றருகே வந்துட்கார்ந்து கொண்டு கிழவியிடம் தாஹத்துக்கு ஜலங் கேட்டான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் காந்தாமணி நடுங்கிப் போனதைக் கவனித்தேன். அப்பால் அந்த மலையாளி காந்தாமணியை ஒருமுறை உற்றுப் பார்த்தான். அவள் தன் இடுப்பிலிருந்த குடத்தை நீரோடு நழுவ விட்டுவிட்டாள். அது தொப்பென்று விழுந்தது. காந்தாமணி அதைக் குனிந்தெடுத்து;.. “ஐயோ; நான் என்ன செய்வேனம்மா? குடம் ஆறங்குல ஆழம் அமுங்கிப் போய்விட்டதே? எங்கம்மா எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பாளோ?” என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டாள். 

மார்புத் துணியை நெகிழவிட்டாள்; பொதிய மலைத் தொடரை நோக்கினாள்.
இந்தக் காந்தாமணி மேற்படி மலையாளிப் பையனிடம் காதல் வரம்பு மிஞ்சிக் கொண்டவளென்பதை நான் தொலைவிலிருந்தே தெரிந்து கொண்டேன், பின்னிட்டு விசாரணை பண்ணியதில் காந்தாமணியின் பிதாவாகிய பார்த்தசாரதி ஐயங்கார் பூர்வம் நெடுநாள் மலையாளத்தில் உத்தியோகம் பண்ணிக் கொண்டிருந்தாரென்றும் அங்கு மிகச் சிறிய குழந்தைப் பிராய முதலாகவே காந்தாமணிக்கும் அந்த மலையாளிக்கும் காதல் தோன்றி அது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதென்றும் வெளிப்பட்டது. ஸப்-இன்ஸ்பெக்டர் அய்யங்கார் திரவிய லாபத்தை உத்தேசித்துக் காந்தாமணியைப் பென்ஷன் டிப்டி கலெக்டரும் கூந்தலாபுரம் ஜமீன் திவானுமாகிய ஐம்பத்தைந்து வயதுள்ள கோழம்பாடு ஸ்ரீநிவாஸாசார்யர் என்பவருக்கு விவாகம் செய்து கொடுத்துவிட்டார். அந்த ஸ்ரீநிவாஸாசார்யருடன் வாழக் காந்தாமணிக்கு சம்மதமில்லை. இந்தச் செய்தியெல்லாம் எனக்குப் பின்னிட்டுத் தெரிய வந்தது. 

அன்று கிணற்றங்கரையில் என் கண்முன்னே நடந்த விஷயத்தை மேலே சொல்லுகிறேன். காந்தாமணி குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, “எங்கம்மா வைவாளே, நான் என்ன சொல்வேனம்மா?” என்று அழுது கொண்டே போனாள். ஆனால் அவள் தன்னுடைய தாய் தந்தையர் இருந்த சத்திரத்துக்குப் போகவில்லை. நேரே, அந்த ஊருக்கு மேற்கேயுள்ள நதிக்குப் போனாள். தாகத்துக்கு நீர் குடித்த பின்பு மலையாளியும் அந்த ஆற்றங்கரையை நோக்கிச் சென்றான். இதற்குள்ளே எனக்கு ஸந்தியாவந்தன காலம் நெடுந்தூரம் தவறிவிட்டபடியால் நான் அந்தக் கிணற்றடியை விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அன்று மாலை என் வீட்டுக்கு மேற்படி கிராமத்து வாத்தியார் சுந்தர சாஸ்திரி வந்தார். வந்தவர் திடீரென்று:- “கேட்டீர்களோ, விஷயத்தை; வெகு ஆச்சரியம்! வெகு ஆச்சரியம்!” என்று கூக்குரலிட்டார்.

”என்ன ஓய் ஆச்சரியம்? நடந்ததைச் சொல்லிவிட்டுப் பிறகு கூக்குரல் போட்டால் எனக்குக் கொஞ்சம் செளகர்யமாக இருக்கும்”  என்றேன். “சத்திரத்திலே ஸப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி அய்யங்கார் சங்கரநாதன் கோவிலிலிருந்து வந்து இறங்கியிருக்கிறாரோ, இல்லையோ? அவர் ஒரு பெண்ணையுங்க் கூட்டிக் கொண்டு வந்தார். அவருடைய மகள். அந்தக் குட்டி வெகு அழகாம். திலோர்த்தமை, ரம்பை யெல்லாம் இவளுடைய காலிலே கட்டி அடிக்க வேண்டுமாம். அதற்குப் பெயர் காந்தாமணியாம். சொல்லுகிறபோதே நாக்கில் ஜலம் சொட்டுகிறது. காந்தாமணி, காந்தாமணி. என்ன நேர்த்தியான நாமம். ரஜம் ஒழுகுகிறது...”

இங்ஙனம் ஸுந்தர சாஸ்திரி காந்தாமணியை வர்ணித்துக்கொண்டு போவதை நான் இடையே மறித்து:- “மேலே நடந்த சரித்திரத்தைச் சொல்லும்” என்றேன்.

“அந்தக் காந்தாமணியைக் காணவில்லையென்று விடியற்காலமெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் அம்பாசமுத்திரத்திரத்திலிருந்து தந்தி கிடைத்ததாம். இன்று பகல் 3 மணிக்கு மேற்படி காந்தாமணியும் , ஒரு மலையாளிப் பையனும் கிறிஸ்துவக் கோவிலில் விவாகம் செய்து கொண்டார்களென்று அந்தத் தந்தி சொல்லுகிறதாம்” என்றார்.

சில தினங்களுக்கப்பால் மற்றொரு ஆச்சர்யம் நடந்தது. கிராமத்து மாஜி போலீஸ் சேவகர் நரைத்த தலைப் பார்த்தசாரதி அய்யங்காரும், அன்று கிணற்றங் கரையில் அவருடைய காதற்பார்வைக்கிலக்காயிருந்த கிழவியும் ரங்கூனுக்கு ஓடிப்போய் விட்டார்கள். பின்னிட்டு அந்தக் கிழவி தலை வளர்த்துக் கொண்டு விட்டாளென்றும் பார்த்தஸாரதி ஐயங்காரும் அவளும் புருஷனும் பெண்ஜாதியுமாக வாழ்கிறார்களென்றும் அய்யங்கார் அங்கொரு நாட்டுக்கோட்டை செட்டியிடம் வேலை பார்த்துத் தக்க சம்பளம் வாங்கிக் கொண்டு சேஷமமாக வாழ்கிறாரென்றும் ரங்கூனிலிருந்து செய்தி கிடைத்தது.

No comments:

Post a Comment