Monday, November 12, 2012

முகமதிய ஸ்திரீகளின் நிலைமை

இரண்டு தினங்களுக்கு முன்பு என்னுடைய முகம்மதிய நண்பர் ஒருவர் என்னைப் பார்க்கும் பொருட்டு வந்திருந்தார். இவர் இஸ்லாம் மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றுதல் உடையவர். எதிர்காலத்தில் இஸ்லாம் மதம் மிகுந்த மகிமையும் ஒளியும் உடையதாய் உலகத்துக்கு எண்ணிறந்த நன்மைகள் செய்யப்போகிறதென்று இவர் உறுதியாக நம்புகிறார். இவரது நம்பிக்கை நிறைவேறு மென்பதற்கு பல அடையாளங்கள் இக்காலத்தில் உலகமெங்கும் தோன்றுவதால், நானும் இவருடைய கருத்தை அங்கீகாரம் செய்கிறேன். ஆதலால், இவருக்கும் எனக்கும் மிகுந்த நட்பேற்பட்டு வளர்ந்து வருகிறது.

இவர் அன்று மாலை என்னிடம் முதலாவது கேட்ட கேள்வி:-

''சென்ற 22-5-20-ல் சுதேசமித்திரன் பத்திரிகை 7-ம் பக்கத்தில் `ரெயில்வே ஸ்தானம்? என்றொரு கதை எழுதியிருந்தீர்களே'' அது மெய்யாகவே நடந்த விஷயமா'' வெறும் கற்பனைக் கதை தானா?'' என்றார்.

''வெறும் கற்பனை'' என்று நான் சொன்னேன்.

'என்ன கருத்துடன் எழுதினீர்?'' என்று அவர் கேட்டார்.

அதற்கு நான்:- ''பொதுவாக நான் கதைகளெழுதும் போதும், வெறுமே கற்பனை நயத்தைக் கருதி எழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்களெழுதுவானேன்'' கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன். எனிலும் என்னை மீறியே கதைகளிலும் பெரும்பாலும் தர்மபோதனைகள் வந்து நுழைந்து விடுகின்றன. அவ்வாறே இந்த ''ரெயில்வே ஸ்தானம்'' என்ற கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பலமாதரை மணம்புரிந்து கொண்டால் அதினின்றும் அவனுக்குக் கஷ்டம் தான் விளையுமென்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காணவேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்துகொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படி கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும்? என்றேன். அப்போது அந்த முஸ்லீம் நண்பர்:- ''அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது'' என்றார்.

"என்ன பிழை?" என்று கேட்டேன்.

''அக் கதையில் ஒரு முகம்மதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண்களை மணம் புரிந்துகொள்ளுதல் முகம்மதிய சாத்திரப்படி ''ஹராம்'' (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி  உயிருடனிருக்கையில்அவளுடன் பிறந்த மற்ற ஸ்திரீயை ஒரு முஸ்லீம் மணம் புரிந்துகொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை'' என்று அந்த முகம்மதிய நண்பர் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் நான்:- ''சரிதான், எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்குளுக்குள்ளே உண்டாதலால், அதுபோலவே முகம்மதியர்களுக்குள்ளேயே இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்டேன். எனவே அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப்பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தானென்பதை மாற்றித்தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தானென்று திருத்தி வாசிக்கும்படி ''சுதேச மித்திரன்' 'பத்திரிகையில் எழுதி விடுகிறேன்'' என்றேன். (ரெயில்வே ஸ்தானம் என்ற கதையில் நான் மேலே கூறிய சாதாரணத்தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும் பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். உலகமெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்து முஸ்லீம்களும் ஏக பத்தினி விரதம், பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் என்ற கொள்கைகளைப் பற்றிமேன்மை அடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லாஹூத்த ஆலா அருள் புரிவாராக).

இதிலிருந்து சம்பாஷணை பொதுவாக முகமதிய விவகாரங்களின் விஷயத்தைக் குறித்து நடைபெறலாயிற்று. அப்பால் முகம்மதிய மாதர்களின் ஸ்தானத்தைக் குறித்துப் பேசலானோம்.

என்னுடனே ஒரு ஹிந்து நண்பர் இருந்தார். அவர் அந்த முஸ்லீம் நண்பரை நோக்கி:- ''உங்களுக்குள்ளே ஸ்திரீகளை அந்தப்புரத்தில் மறைத்துவைப்பதாகிய (கோஷா) வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?'' என்று கேட்டார்.

அது கேட்டு அந்த முகம்மதிய நண்பர்:-''முகம்மது நபி (ஸல்லல்லாஹி அலகிவஸல்லா) அவர்கள்காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப்போய்விட்டது.பிறகு முகம்மது நபி அதை மீளவும் விதியாக்கினார்''என்றார். அப்போது நான் ''மதவிஷயங்களை அதாவதுஅல்லாவிடம் செலுத்தவேண்டிய பக்தி முதலிய விஷயங்களைத் தவிர, விவாகம், ஸ்திரீகளை நடத்த வேண்டிய மாதிரி முதலிய ஜனசமூகத்தின் ஆசார நியமங்களில் காலத்துக்குத் தக்கபடி புதிய மாறுதல்கள் செய்து கொள்ளலாமன்றோ?'' என்று கேட்டேன்.

''அங்ஙனம் ஆசார விஷயங்களிலே கூடமாறுதல்கள் செய்ய எங்கள் சாஸ்திரங்கள் இடங்கொடுக்கவில்லை!'' என்று அந்த முஸ்லீம் நண்பர் சொன்னார். ''எந்த சாஸ்திரங்களுமே ஆசார நியமங்களில், அதாவது நம்மால் விதிக்கப்பட்ட புதிய ஆசாரமுறையில் அதற்குப்பிறகு யாதொரு மாறுதலும் ஏற்படக்கூடாதென்று விதிப்பதுதான் வழக்கம். ஆனால் அதன்படி எங்கும் நடப்பதில்லை. எல்லா ஜாதிகளிலும் எல்லா ஜன சமூகங்களிலும் எல்லா தேசங்களிலும் எல்லா மதஸ்தர்களுக்குள்ளும் காலத்துக்குக் காலம் ஆசாரங்களில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் வருகின்றன'' என்று நான் சொன்னேன்.

''புராதன நபிகளால் விதிக்கப்பட்ட ஆசாரங்களில் சில முகம்மதிய நபியின் காலத்தில் மாறவில்லையோ? அது போல் முகம்மது நபியின் காலத்தில் ஏற்பட்ட ஆசாரங்களை அதன் பிறகு மாற்றக்கூடாதோ?'' என்று என் ஹிந்து நண்பர் கேட்டார்.

அது கேட்ட என் முஸ்லீம் நண்பர்: ''கூடாது. ஏனென்றால் முகம்மது தான் கடைசி நபி. அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்தரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை'' என்றார்.

''முந்திய நபிகளின் கட்டளைகளும் கடவுளுடைய நேரான கட்டளைகளேயன்றி அந்தந்த நபிகளின் சொந்தக் கருத்துக்களல்ல என்பதை இஸ்லாமானவர்கள் அங்கீகாரம் செய்கிறார்கள். காலத்தின் மாறுதலுக்கிணங்க, அல்லா, தன் பழைய கட்டளைகளைமாற்றி ஒவ்வொரு புதிய நபி மூலமாகவும் புதிய கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்; எனவே, முகம்மது நபி இருந்த காலத்துக்கும் தேசத்துக்கும் பொருந்த அவர் மூலமாகப் புதியகட்டளைகள் கொடுக்கப்பட்டன மதக்கொள்கைகள் எக்காலத்துக்கும் எந்த தேசத்திற்கும் பொது. ஆதலால் அவற்றை மாற்றக்கூடாது. வெறுமே ஜனங்கட்கு சம்பந்தமான ஆசார விவகாரங்களை காலதேசங்களுக்குப் பொருந்தும்படி மாற்றலாமென்று முகம்மது நபி சொல்லவில்லையா?'' என்று அந்த ஹிந்து நண்பர் கேட்டார்.

அங்ஙனம் எங்கள் நபிநாயகம் அவர்கள் உத்தரவு கொடுக்கவில்லை'' என்று என் முஸ்லீம் நண்பர் தெரிவித்தார்.

''உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமோ? நீங்கள் கொரான் முழுதும் வாசித்திருக்கிறீர்களோ?'' என்றுநான் கேட்டேன்.

அதற்கு என் முஸ்லீம் நண்பர்:- ''நான் கொரான் முழுதும் ஓதியதில்லை. என் சுற்றத்தாரில் சிலர் கொரான் முற்றிலும் ஓதியிருக்கிறார்கள். இந்த விஷயத்தைப்பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிவிக்கிறேன்'' என்றார். பிறகு இந்த விஷயத்தை விட்டுவிட்டோம்.

அப்பால் நான் என் முஸ்லீம் நண்பரை நோக்கி:- ''தென் ஜில்லாக்களிலே தமிழ்ப் பேசும் முஸ்லீம் (ராவுத்தர்) களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே! அதன் காரணம் யாது?'' என்று கேட்டேன்.''இங்கும் சிலர் அந்த வழக்கத்தைப் பரிபாலிக்கத்தான் செய்கிறார்'' என்று என் முஸ்லீம் நண்பர் சொன்னார்.

''எனினும் பலர் அதைப் பரிபாலிக்கவில்லையே? அதன் முகாந்திரம் யாது?'' என்று கேட்டேன்.

''வேதசாஸ்திர விதிகளில் அவர் செலுத்தக்கடமைப்பட்ட அளவு பயபக்தி செலுத்தாமலிருப்பதே அதற்கு முகாந்திரம்'' என்று என் முஸ்லீம் நண்பர் தெரிவித்தார்.

''அப்படியிருந்தும், தென் ஜில்லாக்களிலுள்ள இந்த முஸ்லீம்கள் மற்றப் பக்கத்து முஸ்லீம்களைக் காட்டிலும் அல்லாவின் பக்தியிலும் மதப்பற்றுதலிலும் சிறிதேனும் குறைந்தவர்களில்லை என்பது பிரத்யக்ஷ மன்றோ? அங்ஙனமாக, இவர்கள் கொரான் விதிகளில் போதிய அளவு பயபக்தி செலுத்தாமல் இருக்கிறார்கள் என்று சொல்லுதல் நியாயம் அன்று. இந்த கோஷா விஷயத்தில் மாத்திரம் இந்த தேச சம்பிரதாயங்களைத் தழுவி நடக்கிறார்கள். இவர்களுடைய கூட்டத்தில் எத்தனை ஞானிகளும் பக்திமான்களும் அவதாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த கோஷா விஷயத்தை இக்கூட்டத்தின் மீது வற்புறுத்தாமல் தான் இருந்திருக்கிறார்கள். ஆதலால் மதபக்தி முதலிய விஷயங்களில் மாறுதல்கள் கூடாதேயொழிய, ஆசாரங்களில் காலத்துக்குத் தகுந்த இடத்துக்குத் தகுந்த மாறுதல்கள் செய்து கொள்ள இஸ்லாம் சாஸ்திரங்களே அனுமதி தரக்கூடும் என்று நினைக்கிறேன்'' என்று நான் சொன்னேன்.

இது கேட்டு அந்த முஸ்லீம் நண்பர் மீளவும்:-''நான் நன்றாகக் கொரான் ஓதியவர்களை விசாரித்து இந்த விஷயத்தில் முடிவு சொல்லுகிறேன்'' என்றார். ''இடைக்காலத்து சாஸ்திரங்கள் இந்த விஷயத்தில் அதிக முரண் செலுத்தக் கூடும். ஆதலால் சாட்சாத் கொரான் வேதத்தையே நன்றாகப் படித்து உணர்ந்தவர்களிடம் விசாரணை செய்யுங்கள்'' என்றேன்.

''சரி, அங்ஙனமே செய்கிறேன்'' என்று என் முஸ்லீம் நண்பர் சொன்னார்.

பிறகு துருக்கி தேசத்தில் ஸ்திரீகளுக்குள்ளே பிரம்மாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப்பற்றியும் அங்கு பல மாதர்கள் கோஷா வழக்கத்தை முற்றிலும் ஒழித்துவிட்டு, கல்வி கேள்விகளில் உயர்ந்த தேர்ச்சியுடையோராய், தங்களுக்குள்ளே சபைகள் சேர்த்தும் தாங்களே உபந்நியாஸங்கள் முதலியன நடத்தியும், உலகத்துமற்ற மாதர்களைப்போல் துருக்கியிலுள்ள மாதரும் கல்வி, விடுதலை, ஆண்களுடன் சமத்துவம் இவற்றை எய்திமேன்படுமாறு அதிதீவிரமான முயற்சிகள் செய்து வருவதைப்பற்றியும் நான் சில வார்த்தைகள் சொன்னேன்.

அப்பால் எங்கள் காலைக் கூட்டம் கலைந்துவிட்டது. என் முஸ்லீம் நண்பரும் தம் வீட்டுக்குப் போயினர்.

No comments:

Post a Comment