Saturday, October 27, 2012

நிலாவும் வான்மீனும் காற்றும்

மனத்தை வாழ்த்துதல்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேரப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்
உலாவு மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர்வண்டு
பாடுவ தும்வியப்போ ?

தாரகை யென்ற மணித்திரள் யாவையும்
சார்ந்திடப் போ மனமே!
ஈரச் சுவையதில் ஊறி வரும்அதில்
இன்புறு வாய்மனமே
சீரவி ருஞ்சுடர் மீனோடு வானத்துத்
திங்களை யுஞ்சமைத்தே
ஓரழ காக விழுங்கிடும் உள்ளத்தை
ஒப்பதொர் செல்வமுண்டோ ?

பன்றியைப் போலிங்கு மண்ணிடைச் சேற்றில்
படுத்துப் புரளாதே
வென்றியை நாடியிவ் வானத்தி லோட
விரும்பி விரைந்திடுமே
முன்றிலில் ஓடுமொர் வண்டியைப் போலன்று
மூன்றுல கும்சூழ்ந்தே
நன்று திரியும் விமானத்தைப் போலொரு
நல்ல மனம்படைத்தோம்

தென்னையின் கீற்றுச் சலசல என்றிடச்
செய்து வருங்காற்றே
உன்னைக் குதிரைகொண் டேறிக் திரியுமொரு
உள்ளம் படைத்துவிட்டோம்
சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு
சேர்த்திடும் நற்காற்றே
மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும்இவ்
வொட்டொலி ஏன்கொணர்ந்தாய் ?

மண்ணுல கத்துநல்லோசைகள் காற்றெனும்
வானவன் கொண்டுவந்தான்
பண்ணில் இசைத்தவ் ஒலிகள் அனைத்தையும்
பாடி மகிழ்ந்திடுவோம்
நண்ணி வரும்மணி ஓசையும் பின்னங்கு
நாய்கள் குலைப்பதுவும்
எண்ணுமுன் னே "அன்னக் காவடிப் பிச்சை" என்று
ஏங்கிடு வான்குரலும்

வீதிக் கதவை யடைப்பதுங் கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும்
வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்
மதலை அழுந்குரலும்
ஏதேது கொண்டு வருகுது காற்று இவை
எண்ணில் அகப்படுமோ ?
சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்கு
தேனுண்ணு வாய் மனமே

No comments:

Post a Comment