Thursday, August 9, 2012

கண்ணன் பிறப்பு

கண்ணன் பிறந்தான் - எங்கள்
கண்ணன் பிறந்தான் - இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.

தின்ன முடையான் - மணி
வண்ண முடையான் - உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்

பண்ணை யிசைப்பீர் - நெஞ்சிற்
புண்ணை யொரிப்பீர் - இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை

எண்ணிடைக் கொள்வீர் - நன்கு
கண்ணை விழிப்பீர் - இனி
ஏதுங் குறைவில்லை; வேதம் துணையுண்டு

அக்கினி வந்தான் - அவன்
திக்கை வளைத்தான் - புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்

துக்கங் கெடுத்தான் - சுரர்
ஒக்கலும் வந்தார் - சுடர்ச்
சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள்

மிக்க திரளாய் - சுரர்
இக்கணந் தன்னில் - இங்கு
மேவி நிறைந்தனர்; பாவி யசுரர்கள்

பொக்கென வீழ்ந்தார், - உயிர்
கக்கி முடிந்தார் - கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை.

சங்கரன் வந்தான் - இங்கு
மங்கல மென்றான் - நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்

பங்க மொன் றில்லை - ஒளி
மங்குவ தில்லை - இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று

கங்கையும் வந்தாள் - கலை
மங்கையும் வந்தாள் - இன்பக்
காளி பராசக்தி அன்புட னெய்தினள்

செங்கம லத்தாள் - எழில்
பொங்கு முகத்தாள் - திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்.

No comments:

Post a Comment