Tuesday, August 21, 2012

பந்தாட்டம்

ஓர் மேடையின் மீது கந்தர்வக் குழந்தைகள் பூப்பந்தாடிக் கொண்டிருந்தன. ரோஜாப் பூப் பந்துகள்.

ஒரு சிறுவன் "அடீ ரஸிகே! நீ பந்தை எறியும் போதெல்லாம் என் கைக்கோலுக்கு அகப்படாமல், வேண்டுமென்று, கோணலாக, என் முகத்தைப் பார்த்து எறிகிறாய். இனி நான் உன்னோடு விளையாட மாட்டேன்" என்றான். இது கேட்டு மற்றக் குழந்தைகளெல்லாம் கலீரென்று நகைத்தார்கள். எல்லாக் குழந்தைகளும் இவ்வாறு ஒன்று சேர்ந்து பல வார்த்தைகள் பேசியும், ஒருவர் மேல் ஒருவர் மோதியும், ஆடியும், பாடியும், சிரித்தும் விளையாடிக்கொண்டிருக்க, அவன் மட்டும் ஓர் ரோஜா நிறங்கொண்ட பளிங்காசனத்தின் மீது தனியே சாய்ந்திருந்து கொண்டு, பாதி குவிந்த விழிகளோடு ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் பர்வதகுமாரியை நோக்கி, "அதோ, விலகி உட்கார்ந்திருக்கிறானே, அந்தப் பையன் யார்?" என்று கேட்டேன்.

"அவன் எனது தம்பி. அவன் பெயர் சித்தரஞ்ஜனன். அவன் குழந்தைப் பருவமாயிருந்த போதிலும், எங்கள் குல தெய்வமாகிய காமதேவனுடைய அருள் பெற்றவனாதலால், குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதிலே விருப்பமில்லாமல் கவிதைகள் புனைவதிலேயும், மோகனமாகிய பகற்கனவுகள் காண்பதிலேயும் பொழுது கழிக்கின்றான். ரோஜாப் பந்தை இந்தக் கிரீடராமன் மீது எறிந்த ரஸிகா என்ற அந்தக் கன்னிகையின் மீது சித்தரஞ்ஜனன் தெய்வீகமான காதல் செலுத்துகின்றான். இப்பொழுது அவன் ஏதோ கவிதை புனைகிறான் என்று தெரிகிறது. அவனை இங்கே அழைக்கிறேன். அவன் கவிதை கேட்பதில் உனக்குப் பிரியந்தானா?" என்றாள்.

நான் வியப்படைந்து, "எனக்கு அளவில்லாத பிரியம்" என்று சொன்னேன்.

பர்வதகுமாரி அவனிருக்குந் திசையை நோக்கிக் கையால் சைகை காட்டினாள். அவன் உடனே வான இறகுகள் விரித்துக் கண்ணிமைக்குமுன் நாங்களிருந்த உயர் வெளிக்கு வந்து விட்டான்.

பர்வதகுமாரி அவனைத் தழுவி முத்தமிட்டு, "இவர் நம் நாட்டிற்குத் தரிசனத்தின் பொருட்டு வந்திருக்கிறார். நமது விருந்தாளி" என்று என்னைக் காட்டினாள். பாலகன் என்னை நோக்கி "வந்தே" என்று வணங்கினான். நானும் அவனைத் தழுவி உச்சி மோந்து வாழ்த்துக் கூறினேன். பிறகு பர்வதகுமாரியைக் கடைக்கண்ணால் நோக்கிக் கவிதை விஷயத்தை நினைப்புறுத்தினேன்.

அவள் தம்பியைப் பார்த்து "ரஞ்சனா, இப்போது உன் மனதிற்குள்ளே ஒரு பாடல் புனைந்து கொண்டிருந்தாயே, அதைச் சொல். இவர் கேட்கவேண்டுமென்கிறார்" என்றாள்.

சிறுவன் சிறிது நாணமடைந்தான்.

நான் "குழந்தாய், லஜ்ஜைப்படாதே! சும்மா சொல்" என்றேன்.

அவன், மண்ணுலகத்துப் பிராகிருத பாஷையைப் போல் இருக்கும் இன்சொல் நிரம்பிய காந்தர்வ பாஷையிலே, ரஸிகா பந்தெறிந்ததன் பொருட்டுக் கிரீடராமன் சினமுற்றதைக் குறித்து ஓர் பாட்டுப் பாடினான். பர்வதகுமாரியின் தம்பியின் குரல் இன்பமாயிருந்ததென்று நான் எழுதவா வேண்டும்?

அவன் சொல்லிய பாடலை, எனது திறனற்ற தமிழ்ச் சொற்களிலே, சூரியனைச் சித்தரித்துக் காட்டுவதுபோல், ஒருவாறு மொழிபெயர்த்துக் காட்டுகிறேன்.

இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்றுரையா திருப்ப ஆலி முடியேறி மோதியதென் றருள் முகிலைக் கடுஞ்சொற்கள் மொழிவான் போலக் கடியேறு மலர்ப்பந்து மோதியதென் றினியாளைக் காய்கின்றானால் வடியேறு வேலெனவெவ் விழியேறி யென்னாவி வருந்தல் காணான்.

[இதன் பொருள்: - மேகத்திலிருந்து வெய்ய இடி தன் பக்கத்திலே விழ உடல் வெந்துபோனவன் ஒன்றும் சொல்லாது சும்மா இருக்க, ஆலங்கட்டி தலையிலே விழப்பெற்ற மற்றொருவன் மேகத்தின்மீது சினங்கொண்டு நிந்தை வார்த்தைகள் பேசுவது போல, வாசனை பொருந்திய ரோஜாப் பந்தைக் கொண்டு தன் மேலெறிந்துவிட்டாளென்று இன்ப வடிவத்தாளாகிய ரஸிகையைக் கோபிக்கின்ற இந்தக் கிரீடராமன் அவள் வடிவுற்ற வேல்களை எறிவதுபோல, விழிகளை என்மீது மோதிக்கொண்டே யிருப்பதால், என்னுயிர் வருந்துவதைக் காண்கிறானில்லை.]

No comments:

Post a Comment