Sunday, February 26, 2012

சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளி யுண்டாம்; -பெண்ணே!
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்டதிருச் சுடராம்; -பெண்ணே!

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஒட்டவருஞ் சுடராம்; -பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம்; -பெண்ணே!

தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்; -பெண்ணே!
மூன்று வகைப்படும் காலநன் றென்பதை
முன்ன ரிடுஞ் சுடராம்; -பெண்ணே!

பட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப்
பார்க்க வொளிர்ச்சுடராம்:  -பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதைக்
காண வொளிர்ச் சுடராம்; -பெண்ணே!

No comments:

Post a Comment