Friday, February 17, 2012

தெளிவு

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
               ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
               புத்தி மயக்க முண்டோ?

உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
               உள்ளங் குலைவ துண்டோ? - மனமே!
வெள்ள மெனப் பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
               வேதனை யுண்டோ டா?

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
               செய்கையுந் தேர்ந்துவிட்டால், - மனமே,
எத்தனை கோடி யிடர்வந்து சூழினும்
               எண்ணஞ் சிறிதுமுண்டோ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
               தேவ னுரைத் தனனே; - மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
                பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்
                கச்சமு முண்டோடா? - மனமே!
 தேன் மடை யிங்குத் திறந்தது கண்டு
                தேக்கித் திரிவமடா!

No comments:

Post a Comment