Wednesday, February 15, 2012

தொழில் முறை: கர்மயோகம்

நொண்டிச் சிந்து

ஏது மறந்துவிட லாமா ? - ஒன்றில்
எண்ணமிட எண்ணமிட வெற்றிவிளையும்
பாதி தொழில்புரிய லாமோ ? - தொடப்
பட்டதனைத் தும்வெல்லப் பட்டதெனவே
மோதிமுன் னேறுவது மேன்மை - சித்தம்
முன்னிமுன்னித் துளைத்திட நன்மை தெளிவாம்
மீதித் தொழில் நிறுத்தலாமோ ? - வெறும்
வேகத்தை நாடி நலம் விடுவதுண்டோ ?

அஞ்சித் தொழில்புரிய லாமோ ? நெஞ்சில்
அன்பு கனியாவிடில் கைகள் செய்யுமோ ?
மிஞ்சி இடுக்கண் வருமென்றே - தங்கம்
வெட்டுவதற்கு அஞ்சிடிற்பின் - செல்வமுண்டோ ?
கொஞ்சி நமக்கினிமை யாதல் - நாம்
குழந்தைகளோ ? தெய்வம் கிழத்தாயோ ?
நெஞ்சி லுறுதி மதிநினைப்பு - இவை
நேரி லன்றோ தொழில் நேர்கொண்டு போம் ?

எண்ணித் துணிகுவது கருமம் - துணிந்
தேற்றபினர் எண்ணுவது இழுக்கெனவே
புண்ணியத் தமிழ்க் குறள் முனிவன் - சொன்ன
புத்தியை மறந்துவிடும் மந்தமதியோர்
மண்ணிற் கெடுவர்மிக விரைவில். கொண்ட
மதியினிலே மதி செல்ல விடுவோர்
விண்ணிற் புடைக்கும் இசை பெறுவார் - இங்கு
வெற்றி பெறுவார் பரமுக்தி பெறுவார்

கூடித் தொழில்புரிதல் வேண்டும் - நெஞ்சக்
குடைச்சல் எல்லாம்மெல்லச் சரிப்படுத்தி
நீடித்த நன்மையினைக் கருதி - நல்ல
நீதி தவறாதபடி பாகம் இயற்றிப்
பேடிப் பதர்களைப்பின் விலக்கிப் - பொதுப்
பெரும்பயன் கருதித்தஞ் சிறுபயனை
வேடிக்கை போலுதறித் தள்ளி - பொது
வெற்றியினை நாடுபவர் மேன்மை பெறுவார்

(பாரதி பக்தரும் தேசபக்தருமான திருநெல்வேலியைச் சேர்ந்த திரு. எஸ். முத்தையா பிள்ளை அவர்கள் எழுதி வைத்திருந்த பாரதி கவிதைகளிலிருந்து தேடி எடுத்துத் தாமரை (செப் 73) இதழில் திரு. தொ.மு.சி ரகுநாதன் வெளியிட்டார்.)

No comments:

Post a Comment