Sunday, August 23, 2009

அறிமுகம்

பாரதியின் பாடல்களை சிறுவகுப்பில் படிக்கும்போது, எதோ ஒரு நெருக்கத்தை உணர முடிந்தது. அணுவில் ஒளிந்திருக்கும் ஆற்றல் போல பாரதியின் சொற்களில் ஒளிந்திருக்கும் ஒரு வேகம் அலாதியானது. எங்கும் காணமுடியாத எழுத்து நடை அவருடையது.

பள்ளியில் அவ்வப்போது படித்ததோடு சரி. பிறகு இப்பொது மீண்டும் பாரதியின் மீது ஒரு ஈர்ப்பு உருவாகியுள்ளது. எங்கள் வீட்டில், எங்கள் அம்மா பரிசு வாங்கிய ஒரு பாரதியார் கவிதை புத்தகம் உண்டு. அதை பலர் குறிப்பெடுக்க வாங்கிச் செல்வதுண்டு. 1968 - 1969இல் அம்மா பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக வந்ததற்காக கிடைத்த பரிசு அது. தற்போது அதனுடைய நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. அதனால், ஒரு புதிய பாரதியார் கவிதைகள் புத்தகம் வாங்கினேன்.

பிறகு வலையில் தேடிய போது, பாரதியைப் பற்றி பல செய்திகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் படிக்கக் கிடைத்தன. பலர் பாரதியின் மீது கொண்ட ஈடுபாட்டினால், அவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ளனர். எண்ணற்ற திரை இசைப் பாடல்கள் அவரது கவிதைகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற புத்தகங்கள், கட்டுரைகள் அவரின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்டு வெளிவந்துள்ளன.

ஒரு படைப்பாளின் வாழ்க்கை, அவரின் படைப்புகள் வழியே நாள்தோறும் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்த வலைப்பூவை தொடங்குவதன் நோக்கம், வலையில் கிடைக்கும் பாரதியைப் பற்றிய அனைத்து செய்திகளையும் அவருடைய பாடல்களின் ஒலி ஒளி வடிவங்களையும் சேகரித்துத் தருவதேயாகும்.

No comments:

Post a Comment